Rajini: "ரஜினி நல்லிணக்கத்திற்காக பேசக்கூடியவர்.." சூப்பர் ஸ்டாருக்காக குரல் கொடுத்த இசைப் புயல்!
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினி கேமியோ ரோலில் நடித்துள்ள லால் சலாம் திரைப்படம் வரும் 9ம் தேதி ரிலீஸாகிறது. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள இந்தப் படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்நிலையில் ரஜினி மத நல்லிணக்கத்திற்காக பேசக்கூடியவர் என ஏஆர் ரஹ்மான் பாராட்டியது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ரஜினிக்காக குரல் கொடுத்த ஏஆர் ரஹ்மான்
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள லால் சலாம் திரைப்படம் வரும் 9ம் தேதி ரிலீஸாகிறது. லைகா நிறுவனம் தயாரித்துள்ள லால் சலாம் கிரிக்கெட்டை பின்னணியாக வைத்து மத அரசியல் குறித்து பேசியுள்ளது. விஷ்ணு விஷால், விக்ராந்த் இருவரும் லீடிங் கேரக்டரில் நடித்துள்ள இந்தப் படத்தில் ரஜினி கேமியோ ரோலில் மாஸ் காட்டியுள்ளாராம்.

மும்பை ரிட்டர்ன் கேங்ஸ்டராக மொய்தீன் பாய் என்ற கேரக்டரில் நடித்துள்ள ரஜினியின் சீன்ஸ், ரசிகர்களுக்கு விருந்தாக இருக்கும் என சொல்லப்படுகிறது. லால் சலாம் படத்தின் இசை வெளியீட்டு விழா சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்றது. அப்போது பேசிய ஐஸ்வர்யா எனது அப்பா ரஜினிகாந்த் சங்கி இல்லை என ஆவேசமாக பேசியிருந்தார். ரஜினி சங்கி என சமூக வலைத்தளங்களில் அடிக்கடி வைரலாகி வருவதை பார்த்து கஷ்டமாக இருப்பதாகவும் அவர் கூறியிருந்தார்.
மேலும், ரஜினிகாந்த் சங்கியாக இருந்திருந்தால் லால் சலாம் படத்தில் நடித்திருக்க மாட்டார் எனவும், இதில் வேறு எந்த நடிகர்களும் அவ்வளவு எளிதாக நடித்திருக்க மாட்டார்கள் என பேசியிருந்தார். ரஜினி எப்போதுமே பாஜக ஆதரவு நிலைப்பாட்டுடன் பேசி வருவதால் தான் அவரை சங்கி என பலரும் விமர்சித்தனர். அதேபோல், ஜெயிலர் ரிலீஸுக்குப் பின்னர் அயோத்தி ராமர் கோயில் சென்றது, உபி முதலமைச்சர் யோகியின் காலில் விழுந்து ஆசி வாங்கியது என ரஜினி அடுத்தடுத்து சர்ச்சைகளில் சிக்கினார்.
கடந்த மாதம் கூட அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக நிகழ்ச்சியிலும் குடும்பத்துடன் கலந்துகொண்டார். இதனையெல்லாம் வைத்து ரஜினி விமர்சிக்கப்படுவதை தான் ஐஸ்வர்யா மறைமுகமாக குறிப்பிட்டு மறுப்பு தெரிவித்தார். இந்த விவகாரம் இன்னும் ஒரு முடிவுக்கு வராத நிலையில் இசைப்புயல் ஏஆர் ரஹ்மானும் ரஜினிக்காக குரல் கொடுத்துள்ளார். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள லால் சலாம் படத்துக்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினி குறித்து பேசியுள்ள ஏஆர் ரஹ்மான், "ரஜினிகாந்த் மிகப் பெரிய ஸ்டைல் ஐகான், கருப்பாக இருப்பவர் சூப்பர் ஸ்டாராக முடியும் என நிரூபித்துக் காட்டியவர். ஆன்மிகத்தையும் சினிமா வாழ்க்கையையும் தனித் தனியாக பார்க்கக் கூடியவர். அவருடன் பேசுவது, அவர் படங்களுக்கு இசையமைப்பது எப்போதுமே மகிழ்ச்சி தரக்கூடியது. ரஜினிகாந்த் நல்லிணக்கத்திற்காக பேசக் கூடியவர், பிரச்சினைகளுக்கு குரல் கொடுப்பவர்" என கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











