தர்பார் முடிஞ்சிடுச்சு.. அடுத்து சிவா படம்.. சைடு கேப்ல ரஜினி எடுத்த ஜில் ஜில் முடிவு!
ரஜினி இமயமலைக்கு சென்றுள்ள புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
Recommended Video
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் இமயமலையில் இருக்கும் படங்கள் வெளியாகியுள்ளன.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி முதல் முறையாக நடித்துள்ள படம் தர்பார். இப்படத்தின் படப்பிடிப்பு மும்பையில் கடந்த நான்கு மாதங்களாக நடைபெற்று வந்தது. சமீபத்தில் தான் படிப்பிடிப்பு நிறைவடைந்தது. பேட்ச் ஒர்க் எனும் மிச்ச சொச்ச பணிகள் மட்டுமே எஞ்சியுள்ளன.
இந்நிலையில் ரஜினியின் அடுத்த படத்தை இயக்குனர் சிவா இயக்குவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. எந்திரன், பேட்ட ஆகிய இரண்டு படங்களுக்கு பிறகு மூன்றாவது முறையாக சன் பிக்சர்ஸ் உடன் ரஜினி இணைகிறார். இப்படத்திற்கு ரஜினி 168, தலைவர் 168 என தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டுள்ளது.

சிவா படம்
ரஜினி 168 படத்தின் ஸ்கிரிப்ட் வேலையில் இயக்குனர் சிவா மற்றும் அவரது குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். கிராமத்து பின்னணியில் குடும்ப கதையாகவும், ஆக்ஷன் படமாகவும் இப்படம் உருவாக உள்ளது. மிக விரைவில் இப்படத்தின் படப்பிடிப்புகள் தொடங்க உள்ளன.

கட்சியின் பெயர்
மற்றொரு பக்கம் ரஜினியின் அரசியல் தொடர்பான வேலைகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளன. வரும் டிசம்பர் மாதம் 12ம் தேதி ரஜினியின் பிறந்தநாள் வர உள்ளது. அதற்குள்ளாக கட்சியின் பெயரையாவது அறிவிக்க வேண்டும் என்பதில் ரஜினி தீவிரமாக இருக்கிறாராம். எனவே ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளும், குடும்பத்தாரும் அந்த வேலையில் ஈடுபட்டுள்ளனர்.

இமயமலை பயணம்
இதற்கிடையே தர்பார் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டதால், இமயமலைக்கு ஒரு ஆன்மீக டிரிப் அடித்துள்ளார் ரஜினி. தற்போது அவர் உத்ரகண்ட் மாநிலத்தில் உள்ள ரிஷிகேஷில் உள்ளார். அங்கு கங்கை நதிக்கரையோரம் அமைந்துள்ள சுவாமி தயானந்த சரஸ்வதி ஆசிரமத்தில் அவர் தற்போது தங்கியுள்ளார்.

வைரல் புகைப்படம்
அங்குள்ள பெண்கள் சிலர் ரஜினியுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். அந்த படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. ரிஷிகேஷில் இருந்து புறப்பட்டு பாபா குகைக்கு செல்ல ரஜினி திட்டமிட்டுள்ளார். உத்ரகண்ட் செல்லும் போதெல்லாம் அவர் பாபா குகைக்கு செல்வது வழக்கம். அங்கு ரூப்குண்ட் மலையடிவாரத்தில் அமைந்துள்ள ஆசிரமத்தில் தங்கி, தியானம் செய்துவிட்டு அவர் சென்னை திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தீவிர அரசியல்
ரஜினி சென்னை திரும்பிய பிறகு சிவா இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தை வெகு விரைவாக முடித்துவிட்டு, அரசியல் பணிகளில் தீவிரமாக ஈடுபடுவது தான் அவரது ஐடியா என நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன.


Click it and Unblock the Notifications











