Rajini Marimuthu: "மாரிமுத்து ஒரு அருமையான மனிதர்..” உருக்கமாக இரங்கல் தெரிவித்த ரஜினி!
சென்னை: இயக்குநரும் நடிகருமான மாரிமுத்து இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு காலமானார்.
எதிர்நீச்சல் சீரியல் மூலம் பிரபலமான மாரிமுத்து, ஜெயிலர் படத்தில் ரஜினியுடன் இணைந்து நடித்திருந்தார்.
மாரிமுத்துவின் மறைவை அறிந்து ஏராளமான திரை பிரபலங்களும் ரசிகர்களும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினி நடிகர் மாரிமுத்து மறைவுக்கு இரங்கல் தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.

மாரிமுத்து மறைவுக்கு ரஜினி இரங்கல்: இயக்குநரும் நடிகருமான மாரிமுத்து மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். ராஜ்கிரன், வசந்த், எஸ்ஜே சூர்யா உட்பட பல இயக்குநர்களிடம் உதவியாளராக இருந்து, டைரக்டர் ஆனவர் மாரிமுத்து. கண்ணும் கண்ணும், புலிவால் ஆகிய படங்களை இயக்கிய மாரிமுத்து, பலகட்ட போராட்டங்களுக்குப் பின்னரே சினிமாவில் பிரபலமானார். முக்கியமாக அவருக்கு நடிப்பு தான் கை கொடுத்தது.
மாரி செல்வராஜ்ஜின் பரியேறும் பெருமாள் திரைப்படத்தில் நாயகி கயல் ஆனந்தியின் அப்பாவாக நடித்து மிரட்டியிருந்தார். ரொம்பவே சாஃப்ட்டான வில்லன் கேரக்டரில் தனித்துவமாக நடித்த மாரிமுத்துவுக்கு, அடுத்தடுத்து ஏராளமான வாய்ப்புகள் கிடைத்தன. சினிமா மட்டும் இல்லாமல் சீரியலிலும் சான்ஸ் கிடைத்தது. அப்படியாக சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர் நீச்சல் சீரியலில், ஆதி குணசேகரன் கேரக்டரில் நடித்து பிரபலமானார்.
அதேபோல் கமலின் விக்ரம், சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் படங்களிலும் மாரிமுத்து நடித்துள்ளார். ஜெயிலர் படத்தின் ஷூட்டிங்கில் மாரிமுத்துவை சந்தித்த ரஜினி, எதிர் நீச்சல் சீரியலில் அவரது நடிப்பு குறித்து பாராட்டி பேசியிருந்தார். குடும்பத்துடன் பார்க்கும் ஒரே சீரியல் அதுதான் என்றும் அவர் பாராட்டியிருந்தாராம். இந்நிலையில் மாரிமுத்துவின் மறைவுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இந்தப் படத்தில் வில்லன் விநாயகனின் கேங்கில் வலது கையாக நடித்திருந்தார் மாரிமுத்து. இந்த கேரக்டர் அவருக்கு ரசிகர்களிடம் நல்ல பெயர் வாங்கிக் கொடுத்தது. இந்நிலையில் "மாரிமுத்து ஒரு அருமையான மனிதர். அவருடைய இறப்பு எனக்கு அதிர்ச்சியளிக்கிறது. அவரை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தாருக்கு என்னுடைய மனமார்ந்த அஞ்சலி" என, ரஜினி தனது டிவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

முன்னதாக ஜெயிலர் படத்தின் இயக்குநர் நெல்சன், நடிகர் விஜய் சேதுபதி உள்ளிட்ட பலரும் மாரிமுத்து மறைவுக்கு இரங்கல் தெரிவித்திருந்தனர். இந்த வரிசையில் சூப்பர் ஸ்டாரும் இரங்கல் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











