Rajini on Vijayakanth: "விஜயகாந்த் அரசியலில் மிகப் பெரிய சக்தியாக இருந்திருப்பார்..” ரஜினி வேதனை!
சென்னை: கேப்டன் விஜயகாந்த் மறைவு திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று காலை உயிரிழந்த விஜயகாந்த் உடலுக்கு பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், ரசிகர்கள், தொண்டர்கள் என ஆயிரக்கணக்கானோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் விஜகாந்த் குறித்து ரஜினிகாந்த் பேசியது வைரலாகி வருகிறது.
விஜயகாந்த் அசாத்தியமான மன உறுதி கொண்டவர்: நடிகரும் அரசியல் தலைவருமான விஜயகாந்த் நேற்று காலை உடல் நலக்குறைவால் காலமானார். திரையுலகம் மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழக மக்களும் விஜயகாந்த் மறைவால் வேதனையில் உள்ளனர். நேற்று காலை முதலே விஜயகாந்த் உடலுக்கு ஏராளமானோர் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நேற்றிரவு விஜய், இளையராஜா, சத்யராஜ் போன்ற பிரபலங்கள் விஜயகாந்துக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில் விஜயகாந்த் உயிரிழந்த செய்தி கேட்டு உடனடியாக சென்னை திரும்ப முடிவு செய்திருந்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். தசெ ஞானவேல் இயக்கும் வேட்டையன் படத்தில் நடித்து வரும் ரஜினி, அதற்கான படப்பிடிப்புக்காக நாகர்கோவில் சென்றிருந்தார். அங்கு அவரும் ஃபஹத் பாசிலும் பங்கேற்கும் காட்சிகளில் நடித்து வந்தார். ஆனால், விஜயகாந்த் உயிரிழந்தார் என்ற செய்தி அறிந்ததும் அதிர்ச்சியான ரஜினி, உடனே படப்பிடிப்பை கேன்சல் செய்துவிட்டு சென்னை திரும்பியுள்ளார்.
சென்னை திரும்புவதற்காக தூத்துக்குடி விமான நிலையம் சென்றிருந்த ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம் பேசியிருந்தார். அப்போது விஜயகாந்த் குறித்து பேசிய அவர், "அன்பு நண்பர் விஜயகாந்தை இழந்தது மிகப் பெரிய துரதிருஷ்டம், அசாத்தியமான மன உறுதி கொண்டவர். விஜயகாந்த் எப்படியும் உடல்நலன் தேறிவிடுவார் என நினைத்தோம்; தேமுதிக பொதுக்குழுவில் அவரை பார்த்த போது நம்பிக்கை இழந்துவிட்டோம். விஜயகாந்த் ஆரோக்கியமாக இருந்திருந்தால் தமிழக அரசியலில் மிகப் பெரிய சக்தியாக இருந்து, தமிழ் மக்களுக்கு மிகப் பெரிய நல்லது செய்திருப்பார்; தமிழ் மக்கள் அந்த பாக்கியத்தை இழந்துவிட்டோம்" எனக் கூறியுள்ளார்.
பலமுறை அரசியலுக்கு வர நினைத்த ரஜினி இறுதியாக அந்த முடிவை அப்படியே விட்டுவிட்டார். அதேநேரம் விஜயகாந்த் அரசியலுக்கு வர வேண்டும் என அவர் எதிர்பார்த்தது கேப்டனின் ரசிகர்களை நெகிழச் செய்துள்ளது. சில மாதங்களுக்கு முன்னர் விஜயகாந்தை அவரது வீட்டிற்கு நேரில் சென்று நலம் விசாரித்திருந்தார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களும் வீடியோக்களும் வைரலாகின. அதேபோல் விஜயகாந்த்துடன் இணைந்து நடிக்க விரும்பியது பற்றியும் பொன்னியின் செல்வன் மேடையில் ரஜின் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.
தூத்துக்குடியில் இருந்து சென்னை திரும்பும் ரஜினிகாந்த் விஜயகாந்த் உடலுக்கு நேரில் அஞ்ச்லி செலுத்த உள்ளார். அதன் பின்னர் மீண்டும் வேட்டையன் படப்பிடிப்பில் அவர் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











