ரஞ்சித் படமும் உண்டு... ஷங்கர் படமும் உண்டு! - ரஜினியின் புது முடிவு
சென்னை: முதலில் இளம் இயக்குநர் ரஞ்சித் படத்தை முடித்துவிட்டு, அடுத்து ஷங்கர் இயக்கும் மெகா பட்ஜெட் படத்தில் நடிக்கத் திட்டமிட்டுள்ளாராம் ரஜினிகாந்த்.
ரஜினியின் புதிய படங்கள் குறித்த செய்திகள் தொடர்ந்து வெளியாகிய வண்ணம் உள்ளன. ஒவ்வொரு மணி நேரத்துக்கும் ஒரு புது தகவல் வெளியாகிறது.
இப்போதைக்கு நான்கு கதைகளை ரஜினி ஓகே செய்திருப்பதாகவும், அவற்றில் இரண்டை உடனே தொடங்கப் போவதாகவும் கூறப்படுகிறது.

ஷங்கர் படம் தொடங்க 6 மாதங்கள் தேவை
ஷங்கரிடம்தான் முதலில் கதையைக் கேட்டு, பட்ஜெட், தயாரிப்பு நிறுவனம் குறித்தெல்லாம் ஆலோசனை செய்தார் ரஜினி. ஆனால் அந்தப் படத்தைத் தொடங்க குறைந்தது ஆறு மாதங்கள் தேவை என்ற நிலை. அந்த அளவுக்கு முன் தயாரிப்புப் பணிகள் தேவைப்படுகிறதாம் எந்திரன் 2-வுக்கு.

2016-ல்
எனவே அந்தப் படத்தை 2016-ல்தான் தொடங்க முடியும். ரஜினிக்கும் இதில் சம்மதம்தான். எனவே ஷங்கரை அவருக்கே உரிய நேரத்தை எடுத்துக் கொண்டு, ஹாலிவுட் பாணியில் பக்காவாக தயாராகும்படி கூறிவிட்ட ரஜினி, அதற்குள் ஒரு படத்தை எடுக்க முடிவு செய்துதான் இளம் இயக்குநர்களிடம் கதை கேட்டுள்ளார்.

பா ரஞ்சித்
கார்த்திக் சுப்பராஜ், ராகவா லாரன்ஸ் இருவரின் கதைகளும் ரஜினிக்குப் பிடித்திருந்தாலும், ரஞ்சித் கதைதான் அவரை உடனே ஓகே சொல்ல வைத்ததாம்.

ராகவா லாரன்ஸ்
சந்திரமுகி 2-ம் பாகத்துக்காகத்தான் ராகவா லாரன்ஸிடம் கதை கேட்டிருக்கிறார் ரஜினி. ஆனால் அவரோ, முனி 4 கதையைக் கூறியுள்ளார். ஒரு ஆக்ஷன் கதையையும் கூறியிருக்கிறார்.

இரண்டு படங்கள்
ரஞ்சித்தின் படத்தை நவம்பருக்குள் முடித்துவிட்டு, ஜனவரி 14, பொங்கலன்று வெளியிடத் திட்டமிட்டுள்ளனர். இந்தப் படம் வெளியாகும் முன்பே ரஜினி - ஷங்கர் படத்தின் ஷூட்டிங் தொடங்கிவிடும் என்கிறார்கள். நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு அடுத்தடுத்து இரு படங்களில் ரஜினி நடிப்பது இதுவே முதல் முறை.


Click it and Unblock the Notifications











