தொடரும் கொரோனா பாதிப்பு..மீண்டும் தள்ளிப் போகிறது, விஜய்யின் மாஸ்டர், ரஜினியின் அண்ணாத்த ரிலீஸ்?
சென்னை: விஜய் நடித்துள்ள மாஸ்டர் மற்றும் ரஜினியின் அண்ணாத்தே படங்களின் ரிலீஸ் தள்ளிப் போக வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம், மாஸ்டர். இதில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ளார்.
மாளவிகா மோகனன் ஹீரோயின். சாந்தனு, ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ் உட்பட பலர் நடிக்கின்றனர்.

அனிருத் இசை
சேவியர் பிரிட்டோவின் எக்ஸ்பி பிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு அனிருத் இசை அமைத்துள்ளார். இந்தப் படத்தின் பாடல் வெளியீட்டு விழா, மார்ச் மாதம் 15 ஆம் தேதி சென்னையில் நடந்தது. படத்தை ஏப்ரல் 9 ஆம் தேதி பிரமாண்டமாக வெளியிட முடிவு செய்திருந்தனர். அதற்கான வேலைகளில் படக்குழு இறங்கி இருந்தது.

லாக்டவுன்
இந்நிலையில்தான் கொரோனா காரணமாக, ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. தியேட்டர்கள் மூடப்பட்டன. படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டன. லாக்டவுன் நீக்கப்பட்டு கொரோனா பீதியில் இருந்து மக்கள் இயல்பு நிலைக்குத் திரும்ப இன்னும் சில மாதங்களாகும். அதனால் தியேட்டர்கள் திறக்கப்பட்டாலும், ரசிகர்கள் வந்து படம் பார்ப்பார்களா என்பது சந்தேகம் என்கிறார்கள்.

தள்ளிப் போகும்
இதனால், தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என்று கூறப்பட்ட மாஸ்டர் படம் மீண்டும் தள்ளிப் போகும் என்கிறார்கள். அனேகமாக பொங்கலுக்கு தள்ளிப் போகலாம் என்கிறார்கள். கொரோனா தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்கு பலியாகிறவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்துகொண்டே இருக்கிறது. இதனால் இப்போது தியேட்டர்களை திறக்கக் கூடாது என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

தயாரிப்பாளர் சுரேஷ் பாபு
பிரபல தெலுங்கு தயாரிப்பாளரும் நடிகர் ராணாவின் தந்தையுமான சுரேஷ்பாபு, தியேட்டரில், ஒரு இருக்கை இடைவெளி விட்டு திறந்தாலும் மக்கள் வருவதற்கு வாய்ப்பில்லை. குடும்பத்தோடு வருகிறவர்கள் இடைவெளிவிட்டு அமர்வார்களா? சீனா மற்றும் துபாயில் தியேட்டர்கள் திறக்கப்பட்டும், யாரும் வரவில்லை. இதனால், இடைவெளி அவசியம் இல்லை என்ற நிலை எப்போது வருகிறதோ, அப்போதுதான் தியேட்டர்களை திறக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

தொடங்க வாய்ப்பில்லை
இதற்கும் இப்போது ஆதரவு பெருகி வருகிறது. அதே போல ரஜினிகாந்த் நடித்து வரும் அண்ணாத்த படத்தின் ஷூட்டிங்கும் இப்போது தொடங்க வாய்ப்பில்லை என்கிறார்கள். இந்தப் படத்தில் அதிகமான ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்கள் நடிக்கின்றனர். அதிக எண்ணிக்கையிலான பிரபலங்களும் நடிக்கின்றனர். இதனால், 'சினிமா படப்பிடிப்புக்கு அரசு அனுமதி அளித்தாலும் குறைவான நபர்களை வைத்துதான் தொடங்க முடியும்.

பெரிய படங்கள்
அது சின்ன படங்களுக்கு ஓகே, அண்ணாத்த மாதிரியான பெரிய படங்களுக்கு உடனடியாக வாய்ப்பில்லை. முழுமையாக கொரோனா பாதிப்பு இல்லை என்ற நிலை வந்தால்தான் இதன் ஷூட்டிங் தொடங்கும்' என்கிறார்கள். அதற்கு எவ்வளவு காலம் ஆகும் என்பது தெரிய வில்லை. இதனால் பொங்கலுக்கு ரிலீஸ் ஆக வேண்டிய அண்ணாத்த படம் ஏப்ரலுக்கு தள்ளிப் போகும் என்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











