தீபிகாவுடன் காதல் காட்சிகளில் நடிக்க அப்பா சங்கடப்பட்டார்! - சௌந்தர்யா ரஜினி
சென்னை: கோச்சடையான் படத்தின் தீபிகா படுகோனுடன் காதல் காட்சிகளில் நடிக்க அப்பா ரஜினி ரொம்பவே தர்மசங்கடப்பட்டார், என அவரது மகளும் படத்தின் இயக்குநருமான சௌந்தர்யா ரஜினி தெரிவித்தார்.
கோச்சடையான் படத்தின் ஸ்பெஷல் செல்போன்கள் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்தது.
விழா முடிவில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் சௌந்தர்யா.

வரவேற்பு கிடைக்குமா?
அப்போது அவர் கூறுகையில், "இது வழக்கமான படமல்ல, ஒரு மாற்று முயற்சி. உலக அளவில் இந்த தொழில்நுட்பத்தில் வரும் மூன்றாவது படம். இந்தியாவில் இந்தப் படத்துக்கு கிடைக்கும் வரவேற்புதான், அடுத்த கட்டத்துக்கான சினிமா முயற்சியாக அமையும். வரவேற்பு கிடைப்பதும் கிடைக்காததும் உங்கள் கைகளில் உள்ளது.

தாமதம் ஏன்?
இந்தப் படத்தை குறித்த காலத்துக்குள் வெளியிட முடியவில்லை. சிலமுறை தேதிகள் அறிவித்து மாற்றியது நடந்தது. காரணம், ஆறு மாதம் ஷூட்டிங் நடத்து, ஏழாவது மாதம் வெளியிடும் சாதாரண படமல்ல. அவதாருக்கும் டின் டின்னுக்கும் ஏழெட்டு ஆண்டுகள் ஆகின. இந்தப் படத்துக்கும் அவ்வளவு காலம் தேவை.

அப்பா தயங்கினார்
இந்தப் படத்தில் என் இயக்கத்தில் நடிக்க ஆரம்பத்தில் அப்பா தயங்கினார். ஆனால் புதிய முயற்சிகள், புதியவர்களை ஊக்குவிப்பதில் முதலில் நிற்பவர் அப்பாதான் என்பதை இந்த திரையுலகம் அறியும். அப்படித்தான் அவர் என்னையும் உற்சாகப்படுத்தினார். முதல் படத்திலேயே சூப்பர் ஸ்டாரை இயக்கியது பெருமையாக உள்ளது.

காதல் காட்சிகளில் தர்மசங்கடம்
தீபிகா படுகோனுடன் காதல் காட்சிகளில் நடித்த போதுதான் அப்பா தர்ம சங்கடமாக உணர்ந்தார்.

முதல் முறை
உலகிலேயே ஒரு சினிமாவுக்கு மொபைல்கள், டேப்கள், லேப்டாப்புகள் வெளியாவது சூப்பர் ஸ்டாரின் கோச்சடையானுக்குத்தான். அதுதான் ரஜினியின் சிறப்பு.

வெளியிடும் தேதி?
இந்தப் படத்தின் இசை வெளியீடு மார்ச் 9-ம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது. இது உறுதியான தேதிதான். படத்தை வெளியிடும் தேதி குறித்து விரைவில் முடிவு செய்யவிருக்கிறோம்," என்றார்.

அப்போ ஏப்ரல் 11?
ஏற்கெனவே படத்தை ஏப்ரல் 11-ம் தேதி உலகம் முழுவதும் 6000 ப்ளஸ் அரங்குகளில் வெளியிடுவதாக படத்தின் தயாரிப்பாளர் அறிவித்தது நினைவிருக்கலாம்.


Click it and Unblock the Notifications











