கபாலி ஷூட்டிங்... சென்னை விமான நிலையத்தில் இருந்து தொடங்குகிறது
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் கபாலி படத்தின் படப்பிடிப்பை சென்னை விமான நிலையத்தில் இருந்து தொடங்க இயக்குநர் ரஞ்சித் முடிவு செய்திருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி, தன்ஷிகா, ராதிகா ஆப்தே, அட்டக்கத்தி தினேஷ், கலையரசன் ஆகியோர் இணைந்து நடிக்கும் கபாலி படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.

கபாலி படத்தின் படப்பிடிப்பு முதலில் மலேசியாவில் நடத்தப்படும் என்று படக்குழுவினர் அறிவித்து இருந்தனர் தற்போது அது சென்னையாக மாறியிருக்கிறது.
செப்டம்பர் 17 ம் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று சென்னையில் படப்பிடிப்பைத் துவங்க இருக்கும் ரஞ்சித், படப்பிடிப்பை சென்னை விமான நிலையத்தில் இருந்து தொடங்கப் போகிறார் என்று தற்போது புதிய செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
கபாலி கதைப்படி சென்னை மற்றும் மலேசியா 2 இடங்களுமே திரைக்கதையில் முக்கிய பங்கு வகிப்பதால் இரு நாட்டின் விமான நிலையங்களுக்கும் படப்பிடிப்பில் முக்கிய இடமுண்டு என்று கூறுகின்றனர்.
செப்டம்பர் 17 ம் தேதி படப்பிடிப்பு தொடங்கும் அதே நாளில் கபாலி படத்தின் முதல் பார்வை போஸ்டர்கள் வெளியாக இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
மேற்கூரை வேற அடிக்கடி இடிஞ்சி விழுகுது, படப்பிடிப்பை (விமான நிலையத்தில்) கொஞ்சம் பார்த்து நடத்துங்க ரஞ்சித்.


Click it and Unblock the Notifications











