ரஜினியின் கோச்சடையான் சிறப்புக் காட்சி பார்க்கிறார் ஜேம்ஸ் கேமரூன்!
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் கோச்சடையானின் சிறப்புக் காட்சியைப் பார்க்கவிருக்கிறார் அவதார் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன்.
இத் தகவலை படத்தின் இயக்குநர் சவுந்தர்யா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
ஹாலிவுட்டின் முதல்நிலை இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன். வெறும் சினிமா இயக்குநர் மட்டுமல்ல, ஒரு விஞ்ஞானியும்கூட.

ஹாலிவுட் திரையுலகில் பல புதுமைகளை நிகழ்த்தியவர், நிகழ்த்திக் கொண்டிருப்பவர்.
எல்லோரும் லைவ் ஆக்ஷன் படம் எடுத்துக் கொண்டிருந்தபோது, இவர்தான் அவதாரில் மோஷன் கேப்சரிங் தொழில்நுட்பம் எனும் உத்தியைப் பயன்படுத்தி வேற்றுக் கிரகவாசிகளை உருவாக்கி 3 டியில் காட்டி அசர வைத்தார்.
இன்று அந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்தியாவின் முதல் படத்தை ரஜினியை வைத்து எடுத்திருக்கிறார் சவுந்தர்யா ரஜினிகாந்த்.
கோச்சடையானை 3டிக்கு மாற்றும் பணிகள் நடந்து வருகின்றன. இந்த வேலைகள் முடிந்ததும், மார்ச் 20-ம் தேதி சென்சாருக்கு அனுப்பப்படுகிறது.
இதற்கிடையில் இந்தப் படத்தை ஜேம்ஸ் கேமரூனுக்கு போட்டுக் காட்டும் முயற்சிகளில் இறங்கியுள்ளார் சவுந்தர்யா.
இது ஏதோ விளம்பரத்துக்காக அவர் அறிவித்ததல்ல. நிஜமாகவே இதற்கான முயற்சிகளில் இறங்கியுள்ளார்.
ரூ 1500 கோடியில் அவதாரையும், டின்டின்னையும் ஹாலிவுட்டில் உருவாக்கினார்கள். ஆனால் சவுந்தர்யாவோ ரூ 125 கோடியில் கோச்சடையானை உருவாக்கியுள்ளார். பத்தில் ஒரு பங்கு கூட பட்ஜெட் இல்லை. ஆனால் சர்வதேச தரத்தில் கோச்சடையான் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தத் தகவல்களைக் கேள்விப்பட்ட ஜேம்ஸ் கேமரூன் இந்தப் படத்தைப் பார்க்க இசைவு தெரிவித்துள்ளார். விரைவில் இந்தப் படத்தை அவருக்கு திரையிட்டுக் காட்டுவேன் என சவுந்தர்யா தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications












