என்னிடம் பணம் பறிக்கும் கெட்ட எண்ணத்துடன் வழக்கு தொடர்கிறார்கள்! - ரஜினிகாந்த் மனு
சென்னை: என்னிடம் பணம் பறிக்கும் கெட்ட எண்ணத்துடன் சிலர் வழக்குத் தொடர்ந்துள்ளனர். இதுபோன்ற வழக்குகளை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும், என்று நடிகர் ரஜினிகாந்த் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.
சென்னையைச் சேர்ந்த சினிமா பைனான்சியர் எஸ்.முகுன்சந்த் போத்ரா, உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், "சினிமா இயக்குநர் கஸ்தூரிராஜா, என்னிடம் கடந்த 2012ம் பல லட்சம் கடன் வாங்கினார். அப்போது, தன் மகன் தனுஷ், நடிகர் ரஜினிகாந்தின் மகளை திருமணம் செய்துள்ளார். எனவே, நான் பணம் தரவில்லையென்றாலும், என் சம்பந்தி கொடுத்து விடுவார் என்று எழுதிக் கொடுத்து பணத்தை வாங்கினார்.
பின்னர், கடன் தொகையை காசோலையாக திருப்பிக் கொடுத்தார். அந்த காசோலையை வங்கியில் செலுத்தியபோது கஸ்தூரிராஜாவின் வங்கி கணக்கில் பணம் இல்லை என்று திரும்பி வந்தது. இதையடுத்து அவர் மீது காசோலை மோசடி வழக்கு தொடர்ந்தேன்.
பின்னர், ரஜினிகாந்த் வீட்டை தொடர்புகொண்டு விவரம் சொன்னபோது, ‘பல பேர் ரஜினிகாந்த் பெயரை தவறாக பயன்படுத்துகின்றனர்' என்று பதில் வந்தது. இதனால், 2012ம் ஆண்டு ரஜினிகாந்தின் பெயரை சொல்லி பணம் வாங்கி மோசடி செய்து விட்டார் என்று கஸ்தூரிராஜாவுக்கு எதிராக போலீசில் புகார் செய்தேன்.
என் புகாரை விசாரித்த போலீசார், இது ‘சிவில்' பிரச்சினை என்று கூறி புகாரை முடித்து வைத்து விட்டனர். இதற்கிடையில், ‘மேன் ஹூன் ரஜினிகாந்த்' என்ற இந்தி படத்துக்கு தடை கேட்டு இந்த உயர்நதிமன்றத்தில் ரஜினிகாந்த் வழக்கு தொடர்ந்தபோது, அந்த வழக்கில் நானும் மனு தாக்கல் செய்தேன்.
அப்போது, ரஜினிகாந்த் தாக்கல் செய்த பதில் மனுவில், ‘தன் பெயரை பயன்படுத்த யாருக்கும் அனுமதி வழங்கவில்லை' என்று கூறியிருந்தார். இந்த பதிலை முன்பே அவர் தெரிவித்து இருந்தால், கஸ்தூரிராஜா மீது நான் கொடுத்த புகாரை ‘சிவில்' பிரச்சினை என்ற போலீசார் கூறியிருக்க மாட்டார்கள்.
மேலும், இதுவரை கஸ்தூரி ராஜா மீது ரஜினிகாந்த் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளார். இதனால், ரஜினிகாந்தும், கஸ்தூரிராஜாவும் கூட்டுச் சேர்ந்து செயல்படுகின்றனரோ என்ற சந்தேகம் எழுகிறது. எனவே, தன்னுடைய பெயரை தவறாகப் பயன்படுத்திய தன் சம்பந்தி கஸ்தூரிராஜா மீது நடவடிக்கை எடுக்க ரஜினிகாந்துக்கு உத்தரவிட வேண்டும்," என்று கூறியிருந்தார்.

ரஜினி பதில் மனு
இந்த மனு நீதிபதி ரவிசந்திரபாபு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ரஜினிகாந்த் சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:
முகுல்சந்த் போத்ரா தாக்கல் செய்துள்ள வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல. இந்த வழக்கை தள்ளுபடி செய்யவேண்டும். இந்த வழக்கை கெட்ட எண்ணத்துடன் எனக்கு எதிராக போத்ரா தாக்கல் செய்துள்ளார்.

பணம் பறிக்க
என் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தவும், என்னிடம் பணம் பறிக்கவும் அவர் முயற்சிக்கிறார். அவருடன் எனக்கு எந்த வகையிலும் எந்த ஒரு தொடர்பும் கிடையாது. கடன் வாங்க நான் உத்தரவாதம் எதுவும், யாருக்கும் அளிக்கவில்லை. கஸ்தூரி ராஜா மீது நான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார்.

கிள்ளி எறிய வேண்டிய வழக்கு
இப்படிப்பட்ட கோரிக்கையுடன் வழக்கை தாக்கல் செய்ய முடியாது. இதுபோன்ற வழக்கை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். மனுதாரருக்கு அபராதமும் விதிக்க வேண்டும். கஸ்தூரி ராஜாவுக்கு எதிராக மனுதாரர் தொடர்ந்த செக் மோசடி வழக்கை ஏற்கனவே ஜார்ஜ் டவுண் நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது.

களங்கம் விளைவிக்க
எனவே, வேண்டுமென்றே எனக்கு எதிராக இந்த வழக்கை மனுதாரர் தொடர்ந்துள்ளார். இதனால், என்னுடைய நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது. மன உளைச்சலையும் ஏற்படுத்தியுள்ளது. எனவே, இந்த மனுவை தள்ளுபடி செய்யவேண்டும்," என்று ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

4 வாரங்களுக்கு தள்ளி வைப்பு
இந்த மனுவுக்கு உடனடியாக போத்ரா தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து வழக்கு விசாரணையை 4 வாரத்துக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











