மோடிக்காக கோச்சடையான் சிறப்புக் காட்சி.. மும்பையிலா? அகமதாபாதிலா?
சென்னை: பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்காக ரஜினியின் கோச்சடையான் படத்தின் சிறப்புக் காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது.
ஆனால் காட்சியை நடத்துவது மும்பையிலா, அகமதாபாதிலா என்பது மட்டும் இன்னும் உறுதியாகவில்லை.
ரஜினியின் கோச்சடையான் 7 மொழிகளில், 6000க்கும் மேற்பட்ட திரைகளில் வெளியாகிறது.
சுமார் 125 கோடி செலவில் தயாரிக்கப்பட்ட இந்த படத்தில் ரஜினி இரு வேடங்களில் நடித்துள்ளார். ஜோடியாக தீபிகா படுகோனே, ஷோபனா நடித்துள்ளனர். சரத்குமார், ஆதி, நாசர், ஜாக்கிஷெராப் போன்றோரும் முக்கிய கேரக்டரில் வருகிறார்கள்.
ரஜினியின் மகள் சவுந்தர்யா அஷ்வின் இயக்கிய இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

எதிர்ப்பார்ப்பு
இந்தப் படத்துக்கு உலகளவில் பெரிய எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது. இந்தியாவின் முதல் மோஷன் கேப்சரிங் படம் என்பதால், பிற நாட்டு திரைத் துறையும் இந்தப் படத்தை எதிர்ப்பார்த்துக் காத்திருக்கின்றனர்.
வரும் மே 9-ம் தேதி படம் வெளியாகிறது.

மும்பையில்...
இந்தப் படத்தின் சிறப்புக் காட்சி சென்னை மற்றும் மும்பையில் மே 8-ம் தேதி நடைபெற உள்ளது. மும்பையில் நடக்கும் காட்சியில், அமிதாப், ஷாரூக்கான், ஐஸ்வர்யா ராய், ஆமீர் கான் உள்ளிட்ட திரையுலகப் பிரமுகர்களுடன், பாஜகவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியும் பங்கேற்கிறார். அவரை வரவேற்க சூப்பர் ஸ்டார் ரஜினியும் மும்பை செல்கிறார்.

ரஜினி ரசிகர் மோடி
சென்னையில் ரஜினியை சந்தித்து தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, தன்னை ரஜினியின் ரசிகர்களுள் ஒருவர் என்று கூறியதோடு, ரஜினியின் நடிப்பில் வெளியான எந்திரன் படத்தைப் இரு முறை பார்த்ததாகக் கூறினார். கோச்சடையானைப் பார்க்க தான் மிக ஆவலுடன் இருப்பதாகவும் அவர் கூறியதாலேயே இந்த ஏற்பாடு.

அகமதாபாதில்
இன்னொரு பக்கம், தன்னை சென்னையில் வீட்டுக்கு வந்து சந்தித்து பெருமை சேர்த்த மோடியை கவுரவப்படுத்தும் வகையில் அகமதாபாதில் கோச்சடையான் சிறப்புக் காட்சிக்கு ஏற்பாடு செய்யவும் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்தக் காட்சிக்கே பாலிவுட் பிரபலங்களையும் அழைத்து நடத்தலாமா என்றும் யோசித்து வருகிறார்களாம்.


Click it and Unblock the Notifications











