மீண்டும் ஷங்கர் - ஐஸ்வர்யா காம்பினேஷனில்... உறுதி செய்தார் சூப்பர் ஸ்டார்!

இந்தத் தகவலை சூப்பர் ஸ்டார் ரஜினியே உறுதி செய்திருப்பதுதான் ஹைலைட்!
ரஜினி, ஷங்கர் காம்பினேஷனில் இதுவரை சிவாஜி, எந்திரன் என இரண்டு படங்கள் வந்தன. இவை இரண்டுமே இந்திய சினிமா வர்த்தகத்தை உலக அளவுக்கு கொண்டு போய் வரலாறு படைத்தன.
எந்திரனுக்குப் பிறகு இரண்டு மூன்று படங்களை ரஜினி அறிவித்து, அதில் கோச்சடையான் மட்டும் ரிலீஸை நெருங்கிக் கொண்டுள்ளது. ஆனால் அதுவும் முழுமையான படம் அல்ல. எனவே ரஜினியை பாட்ஷா, முத்து, படையப்பா மாதிரி முழுநீள ஆக்ஷன் பொழுதுபோக்குப் படத்தில் பார்க்க அவரது ரசிகர்கள் விரும்புகிறார்கள்.
இதுபுரிந்த ரஜினி, தனது அடுத்த படம் எது என்பது குறித்து தீவிர யோசனையில் இருந்தார். கேவி ஆனந்த், கேஎஸ் ரவிக்குமார் ஆகிய இருவரில் யாராவது ஒருவர் இயக்குவார் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் ரஜினியோ, மீண்டும் ஷங்கரைத் தேர்ந்தெடுத்துள்ளார்.
ஈராஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில், மீண்டும் ஐஸ்வர்யா ராய் ரஜினிக்கு ஜோடியாகிறார். அவருடன் மேலும் ஒரு இளம் கதாநாயகி நடிக்கிறார்.
இதுகுறித்துப் பேசிய ஈராஸ் நிறுவனத்தின் நிதி அலுவலர் கமல் ஜெயின், "இந்தப் படத்துக்கு இயக்குநர் யார் என்பதை ரஜினியே முடிவு செய்தார். கோச்சடையானுக்குப் பிறகு இந்தப் படம் தொடங்கும். அதற்குப் பிறகுதான் ராணா," என்றார்.
குறிப்பு: ஏங்க... ஏப்ரல் ஒண்ணாந்தேதியும் அதுவுமா எத்தனையோ பேர்கிட்ட ஏமாந்துகிட்டேதான் இருக்கீங்க... அதுல இதுவும் ஒண்ணா இருந்துட்டுப் போகட்டுமே.. ஹிஹிஹி!


Click it and Unblock the Notifications











