Rajini: "ரஜினியோட ஒரே தொல்லையா போச்சு..” போயஸ் கார்டன் வீட்டின் முன் போர்க்கொடி தூக்கிய பெண்!
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினி தற்போது வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், பொங்கலை முன்னிட்டு ரஜினியை சந்திக்க ஏராளமான ரசிகர்கள் அவரது வீடு முன் குவிந்தனர். இதனால் ஆத்திரமான பக்கத்து வீட்டுப் பெண்மணி ஒருவர், ரஜினி இல்லம் முன் போர்க்கொடி தூக்கியது வைரலாகி வருகிறது. அப்போது அவர் ரஜினியை கடுமையாக விமர்சித்ததும் ட்ரெண்டாகியுள்ளது.
ரஜினி வீட்டு முன் போர்க்கொடி தூக்கிய பெண்: கோலிவுட் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 70 வயதை கடந்தாலும் இளம் ஹீரோக்களுக்கு இப்போதும் சவால் விட்டு வருகிறார். கடந்தாண்டு அவரது ஜெயிலர் திரைப்படம் தான் இண்டஸ்ட்ரி ஹிட் லிஸ்ட்டில் இணைந்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் பாக்ஸ் ஆபிஸில் 600 கோடி ரூபாய் வரை வசூலித்தது. இதனையடுத்து வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார். தசெ ஞானவேல் இயக்கும் இந்தப் படம் வரும் ஏப்ரலில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், பொங்கலை முன்னிட்டு வேட்டையன் படப்பிடிப்புக்கு பிரேக் விடப்பட்டுள்ளது. இதனையடுத்து இன்று பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுவதால் போயஸ் கார்டனில் உள்ள ரஜினியின் இல்லம் முன்பு ஏராளமான ரசிகர்கள் திரண்டனர். புத்தாண்டு, பொங்கல், தீபாவளி, ரஜினியின் பிறந்தநாள் போன்ற ஸ்பெஷல் தினங்களில் அவரது இல்லம் முன் ரசிகர்கள் திரள்வது வழக்கம்.
சில நேரங்களில் ரஜினி படப்பிடிப்புக்காக வெளியூர் அல்லது வெளிநாடு சென்றிருந்தாலும் அவரது வீட்டை ரசிகர்கள் முற்றுகையிடுவார்கள். அதேபோல், இன்றும் ரஜினியிடம் பொங்கல் வாழ்த்துப் பெற வேண்டும் என நூற்றுக்கணக்கான ரசிகர்கள் போயஸ் கார்டன் ஏரியாவில் குவிந்தனர். இதனையடுத்து ரசிகர்களை சந்தித்த ரஜினிகாந்த், "அனைவரும் ஆரோக்கியம், மன நிம்மதியுடன் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். ஒழுக்கத்திலும் சிந்தனையிலும் நேர்மை இருந்தாலே வாழ்க்கையில் நிம்மதியும் மகிழ்ச்சியும் இருக்கும்" என வாழ்த்துத் தெரிவித்தார்.

இதனிடையே ரஜினியின் பக்கத்து வீட்டு பெண்மணி ஒருவர், ரசிகர்கள் அதிகளவில் திரண்டதால் கடும் ஆத்திரம் அடைந்தார். ரஜினியின் இல்லம் முன்பு சென்ற அவர், "நாங்களும் தான் டேக்ஸ் கட்டுறோம்... இதே ஏரியாவில் காலங்காலமாக குடியிருக்கோம்... எங்களுக்கெல்லாம் எந்த ஸ்பெஷலும் கிடையாது. இங்களுக்கு மட்டும் என்ன இருக்கு... ஒவ்வொரு முறையும் இப்படி ரசிகர்கள் இங்க வருவது எங்களுக்கு தொல்லையா இருக்கு... இதுக்கு ஒரு முடிவே கிடையாதா.." என அங்கிருந்த செய்தியாளர்களை பார்த்து ஆவேசம் ஆனார்.
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதனையடுத்து தனது டிவிட்டரில் அந்த வீடியோவை ஷேர் செய்துள்ள ப்ளூ சட்டை மாறன், ரஜினியை விமர்சித்துள்ளார். "ரஜினி பிறந்தநாள், தீபாவளி, புத்தாண்டு, பொங்கல் என அடிக்கடி போயஸ் கார்டன் வந்து கோஷம் போடும் ரசிகர்கள். பக்கத்துவீட்டு பெண்மணி ஆவேசம். ரசிகர்களை தனது கல்யாண மண்டபத்தினுள் அல்லது வேறேதேனும் தனிப்பட்ட இடத்தில் சந்திக்காமல்.. இப்படி சுற்றி உள்ள வீட்டாரை தொந்தரவு செய்வது ரஜினிக்கு சரியா?" என கேள்வி எழுப்பியுள்ளார்.


Click it and Unblock the Notifications











