Rajinikanth 75 - கெட்ட பய சார் இந்த காளி.. ரஜினி கொடுத்த தரமான தக் லைஃப்.. தலைவர் வேற ரகம்
சென்னை: சூப்பர் ஸ்டார், தலைவர் என்று ரசிகர்களால் கடந்த கால் நூற்றாண்டுக்கும் மேலாக கொண்டாடுப்படும் ரஜினிகாந்த் இப்போது ஜெயிலர் 2 படத்தில் நடித்திருக்கிறார். அடுத்ததாக கமல்ஹாசன் தயாரிப்பில் ஒரு படத்தில் நடிப்பதற்கும் கமிட்டாகியிருக்கிறார். இப்படி பிஸியாக ஓடிக்கொண்டிருக்கும் அவருக்கு இந்த மாதம் 12ஆம் தேதி வந்தால் 75ஆவது பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது.
ரஜினிகாந்த் இந்திய சினிமாவின் அடையாளங்களில் ஒருவர். கமர்ஷியல், ஆர்ட் ஃபிலிம் என இரண்டையும் கலந்துதான் தன்னுடைய கரியரின் ஆரம்பத்தில் பயணப்பட்டார் அவர். ஆனால் ஒருகட்டத்தில் முழுக்க முழுக்க கமர்ஷியல் பாதையில் பயணம் செய்ய ஆரம்பித்து; அதில் தனது திறமை, ஸ்டைல் உள்ளிட்டவைகளை வைத்து தனக்கான சாம்ராஜ்ஜியத்தை பெரிய அளவில் கட்டியெழுப்பினார். இப்போதும் அவர் இளம் ஹீரோக்களுக்கு டஃப் கொடுத்துக்கொண்டுதான் இருக்கிறார்.
ரியல் லைஃப் ரஜினி: ரஜினியின் ரியல் வாழ்க்கையை பொறுத்தவரை அவர் யாருக்கும் எதற்கும் அஞ்சாமல் தனது மனதில் பட்டதை பேசிவிடக்கூடியவர். அதனால் அவர் பாராட்டையும், விமர்சனத்தையும், பிரச்னையையும் மாற்றி மாற்றி சந்தித்திருக்கிறார். இருந்தாலும் அவர் சொல்லும் விதத்தில் இருக்கும் எதார்த்தம் அந்த விஷயத்தை அனைவரிடமும் கொண்டு சேர்த்துவிடும். அப்படி அவர் மனதில் பட்டதை பேசிய சில விஷயங்களை பார்க்கலாம்.

இளையராஜாவுக்கு கொடுத்த தக் லைஃப்: இசைஞானி இளையராஜாவுக்கு ஒரு பாராட்டு விழா நடத்தப்பட்டது. அதில் ரஜினியும் கலந்துகொண்டார். அப்போது நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய சுஹாசினி ரஜினியிடம், 'நீங்கள் தயாரித்த வள்ளி படத்தில் அழகான பாடல்களை ராஜா கொடுத்திருக்கிறார்' என சொல்ல; உடனே எதையும் யோசிக்காத ரஜினியோ, 'வள்ளி கார்த்திதான் செய்தார். சாமி (இளையராஜாவை அப்படித்தான் அழைப்பார்) செய்யவில்லை' என கூறிவிட்டார். இளையராஜாவின் முகத்தில் ஈ ஆடவில்லை. அதுமட்டுமின்றி வள்ளியில் இடம்பெற்ற என்னுள்ளே என்னுள்ளே பாடலை இசையமைத்தது கார்த்திக் ராஜாவா என்ற சர்ச்சை இன்றுவரை போய்க்கொண்டுதான் இருக்கிறது.
எல்லாம் காசுக்காகத்தான் பாஸ்: பட ப்ரோமோஷன் ஒன்றில் செய்தியாளர்களை சந்தித்தார் ரஜினி. அப்போது பெண் பத்திரிகையாளர் ஒருவர், 'இந்த எனர்ஜியை எல்லாம் எங்கிருந்து கண்டுபிடிக்கிறீர்கள்' என கேட்க; அதற்கு பதிலளித்த சூப்பர் ஸ்டார், 'எல்லாம் பணம்தான். நிறைய பணம் வருகிறது' என சொல்லிவிட்டு; அதுமட்டுமில்லாமல் இது எனக்கு ஒரு பேஷன் என்றும் சொல்லி நேக்காக நழுவினார்.
சோவையே மிரளவிட்டார்: மறைந்த பத்திரிகையாளர் சோவுக்கு பாராட்டு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. ஜெயலலிதாவும் கலந்துகொண்டிருந்தார். அதில் என்ட்ரி கொடுத்து பேசிய ரஜினி, 'சோ சில சீரியல்கள் செய்துகொண்டிருந்தார். அதில் அவர் கொடுத்த விளக்கங்கள் எல்லாம் எனக்கு பிடித்தன. கொஞ்ச காலத்தில் அதை நிறுத்திவிட்டார்கள். நான் சோவிடம் ஏன் ஸ்டாப் ஆகிவிட்டது என்று கேட்டேன். அதற்கு சோவோ, 'இல்லை முதலமைச்சர் ஜெயலலிதாவும் சொன்னார்தான். ஆனால் எனக்கு கொஞ்சம் வேலை இருப்பதாக சொன்னார்'. இந்தத் தமிழ்நாட்டிலேயே முதலமைச்சர் ஜெயலலிதா சொல்லியும் கேட்காத ஒரே ஆள் என்றால் அவர் சோ ராமசாமிதான்' என ஒரே போடாக போட; கீழே அமர்ந்திருந்த சோ, அய்யய்யோ என்று தலையில் அடித்துக்கொண்டார்.
துரைமுருகனும்: அதிமுகவுக்கு இப்படி என்றால் திமுகவுக்கு வேறு மாதிரி தக் லைஃப் கொடுத்தார் ரஜினி. கடந்த வருடம் திமுக சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ரஜினி,'துரைமுருகன் போன்ற ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்களை எல்லாம் சமாளிப்பது கஷ்டம். துரைமுருகன் கலைஞர் கண்களிலேயே விரலை விட்டு ஆட்டியவர். ஸ்டாலினுக்கு ஹாட்ஸ் ஆஃப்' என்று சொல்லிவைக்க; அதுவும் பரபரப்பான செய்தியாக மாறியது. இப்படி ரஜினிகாந்த் பல சம்பவங்களை செய்திருக்கிறார். அவர் ஸ்டைலிலேயே சொல்ல வேண்டுமென்றால், 'கெட்ட பய சார் இந்த காளி'.


Click it and Unblock the Notifications











