Rajinikanth 75: வாக்கு கொடுத்த அரசியல்வாதி.. நானே பாத்துக்கறேன்னு பணத்தை வீட்டுக்கே அனுப்பிய ரஜினி
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நாளை அதாவது, டிசம்பர் 12ஆம் தேதி தனது 75 வது பிறந்த நாளைக் கொண்டாட உள்ளார். உலகின் பல்வேறு நாடுகளில் இருக்கும் ரசிகர்கள் அவருக்கு முன் கூட்டியே வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள். சில ரசிகர்கள் எல்லாம் ஸ்பெஷல் இமேஜ் உருவாக்கும் வேலைகளிலும் ஈடுபட்டு வருகிறார்கள். இப்படி இருக்கும்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன்னை கதாநாயகனாக அறிமுகம் செய்து வைத்த தயாரிப்பாளர் கலைஞானத்திற்கு காலம் கடந்து செய்த உதவி பலருக்கும் தெரியாதது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அபூர்வ ராகங்கள் படத்தின் மூலம் தனது திரைப்பட வாழ்க்கையை தொடங்கினாலும், அவரை கதாநாயகனாக அறிமுகம் செய்து வைத்தவர் என்றால் அது தயாரிப்பாளர் கலைஞானம் தான். இவரது தயாரிப்பில் உருவான படமான பைரவி படத்தில் தான் ரஜினிகாந்த் கதாநாயகனாக அவதாரம் எடுக்கிறார். அன்று முதல் இன்று வரை என்றைக்குமே கதாநாயகனாக ஜொலித்து வருகிறார்.
இந்நிலையில் தயாரிப்பாளர், எழுத்தாளர், இயக்குநர் என பல அவதாரங்களை எடுத்த கலைஞானம் அவர்களின் 90வது பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது தவறை நினைத்து வருத்தம் தெரிவித்துள்ளார். அதாவது கலைஞானம் அவர்களின் 90வது பிறந்த நாளை இயக்குநர் பாரதிராஜா ஏற்பாடு செய்துள்ளார். அதில் அப்போதைய அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் என பலர் கலந்து கொண்டு இருந்துள்ளார்கள்.
பாரதிராஜா: அந்த நிகழ்ச்சியில் பேசிய பாரதிராஜா மிகவும் முக்கியமான விஷயத்தை எடுத்துக் கூறியுள்ளார். அதாவது, தமிழ் சினிமாவின் மிக மூத்த அடையாளங்களில் ஒருவராக உள்ள கலைஞானம் அவர்களுக்கு சொந்தமாக வீடு ஒன்று இல்லை என்று தெரிவித்தார். அடுத்து பேசிய அமைச்சர் ஒருவர், கலைஞானம் அவர்களுக்கு நாங்கள் வீடு கட்டிக் கொடுக்கிறோம் என்று வாக்குறுதி அளித்தார்.

ரஜினி கேட்ட மன்னிப்பு: அடுத்து பேசிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், " என்னை கதாநாயகனாக மாற்றியதே கலைஞானம் அவர்கள் தான். நான் அவருக்கு அதன் பின்னர் படங்கள் செய்து கொடுத்திருக்க வேண்டும். நான் செய்யாமல் போனது என்னுடைய தவறு. அதற்காக நான் அவரிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். அமைச்சர் வீடு கட்டித் தருவதாக வாக்குறுதி கொடுத்துள்ளார். அந்த வேலையை நானே செய்கிறேன். நானே அவருக்கு சொந்த வீடு கட்டித் தருகிறேன். இது நான் அவருக்கு செய்யும் நன்றிக் கடனாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார். இப்படிச் சொன்னது மட்டும் இல்லாமல் நன்கு விசாலமான வீடு கட்ட எவ்வளவு பணம் தேவைப்படுமோ, அதற்குரிய பணத்தை மறுநாளே, கலைஞானம் அப்போது தங்கி இருந்த வீட்டிற்கு அனுப்பி உள்ளார் ரஜினிகாந்த்.
கலைஞானம்: தமிழ் சினிமாவின் மூத்த தயாரிப்பாளர்களில் ஒருவர், கலைஞானம். அடிப்படையில் எழுத்தாளரான இவர் சுமார் 200 படங்களுக்கு மேல் திரைக்கதை எழுதியுள்ளார். மேலும், 40 படங்களுக்கு கதை எழுதி 18 படங்களைத் தயாரித்துள்ளார். இது மட்டும் இல்லாமல், படங்களை இயக்கியும் உள்ளார். சில படங்களில் பாடல்களும் எழுதி உள்ளார். இந்த அளவுக்கு தனக்கென தனி முத்திரை பதித்த கலைஞானம் சொந்த வீடு இல்லாமல் வாடகை வீட்டில் இருப்பதை தெரிந்து கொண்ட மறு கணமே சூப்பர் ஸ்டார் எடுத்த முடிவும் அதை அவர் உடனே நிறைவேற்றியதும் பாராட்டுக்குரியது.


Click it and Unblock the Notifications











