கூலி கொடுத்த காயத்துக்கு மருந்து?.. ரஜினி, கமலை வைத்து லோகேஷ் கனகராஜ் செய்திருக்கும் பிளான் இதுவா?
சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான கூலி திரைப்படம் சில நாட்களுக்கு முன்பு வெளியாகி ஓரளவுக்குத்தான் வரவேற்பை பெற்றிருக்கிறது. வசூலில் பெரிய வரவேற்பை பெற்றதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருந்தாலும்; விமர்சனத்தில் பலத்த அடியை சந்தித்திருக்கிறது. இதற்கு முன்னர் லோகேஷ் இயக்கிய லியோ திரைப்படமும் இதேபோல்தான் பெரும் ட்ரோலை சந்தித்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அவர் பற்றிய புதிய தகவல் ஒன்று வட்டமடிக்க ஆரம்பித்திருக்கிறது.
மாநகரம் படத்தில் இயக்குநராக அறிமுகமான லோகேஷ் கனகராஜ் அந்தப் படத்தில் நல்ல இயக்குநர் என்ற பெயரை பெற்றார். டைட்டில் கார்டு தொடங்கி எண்டு கார்டுவரை அவரது உழைப்பு மாநகரத்தில் அருமையாக இருந்தது. அதனால் அவர் மீது திரைத்துறையில் பலருக்கும் நம்பிக்கையை விதைத்தது. அதற்கேற்றபடிதான் இரண்டாவது படமும் அமைந்தது. மன்சூர் அலிகானை வைத்துதான் முதலில் கைதியை பிளான் செய்திருந்தார். சில காரணங்களால் கார்த்தி உள்ளே வந்தார். படம் அதிரிபுதிரி ஹிட்டடித்து ஒரே நைட்டில் லோகேஷின் மார்க்கெட்டை உயர்த்தியது.
விஜய், கமலுடன்: இரண்டு படங்களும் ஹிட்டடித்த சூழலில் விஜய்யை வைத்து மாஸ்டர் படத்தை இயக்கினார். அந்தப் படமும் சூப்பர் டூப்பர் ஹிட். வரிசையாக ஹிட்டுகள் கொடுத்த அவர் கமலின் தீவிர ரசிகர். அவரே கமலை வைத்து இயக்கும் வாய்ப்பும் விக்ரம் படத்தில் அமைந்தது. சும்மாவே ஆடுவேன் சலங்கை கட்டினால் விடுவேனா என்பதற்கேற்ப கமல்ஹாசனை வைத்து முழுக்க முழுக்க ஒரு ஆக்ஷன் படமாக விக்ரமை உருவாக்கினார். படத்தின் ரிசல்ட் மெகா ப்ளாக் பஸ்டர். அப்போதிருந்து அவரது மார்க்கெட் உச்சத்துக்கு சென்றது.

அடுத்தடுத்து அடி: லோகியின் சம்பளமும் உயர; விஜய்யை வைத்து இயக்கிய லியோ படம் படுதோல்வி. முக்கியமாக அவரை ரசிகர்கள் வறுத்தெடுத்துவிட்டனர். இப்படிப்பட்ட சூழலில்தான் ரஜினியை வைத்து கூலி இயக்கினார். லியோவில் வாங்கிய அடியை கூலியில் சரி செய்திட வேண்டும் என்று நினைத்த அவருக்கு; முந்தைய படத்தின் ரிசல்ட்தான் இந்தப் படத்துக்கும் கிடைத்திருக்கிறது. அவருக்கு என்னதான் ஆகிவிட்டது; இனி கம்பேக் கொடுப்பாரா மாட்டாரா என்றெல்லாம் பேச தொடங்கிவிட்டார்கள்.
சம்பளத்தில் சிக்கல்?: கூலி படத்துக்காக 50 கோடி ரூபாயை சம்பளமாக வாங்கினார் லோகேஷ் கனகராஜ். அதிக சம்பளம் வாங்கும் இயக்குநர் என்ற நிலை கூலி ரிசல்ட்டால் கொஞ்சம் ஆட்டம் கண்டிருப்பதாக கூறுகிறார்கள். கைதி படத்தின் இரண்டாவது பாகத்தை உருவாக்கும் திட்டத்தில் இருக்கும் அவர்; அந்தப் படத்துக்கு 50 கோடி ரூபாய்க்கு மேல் சேலரி கேட்கலாம் என்று பிளான் செய்திருந்ததாகவும்; இப்போது அந்த பிளானை மறு பரிசீலனை செய்யும் நிலைமை உருவாகியிருக்கிறது என்றும் விவரமறிந்தவர்கள் கூறுகிறார்கள்.
ரஜினி - கமல்: முக்கியமாக லியோ, கூலி படங்களில் வாங்கிய அடியை மறைக்கவும், மறக்கவும் ஒரு ஹிட் அவருக்கு தேவை. அது கைதி 2 படத்தின் மூலம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் அவர் பற்றிய புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதாவது ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசனை வைத்து ஒரு படம் இயக்கவிருப்பதாகவும்; கதையை கேட்ட இரண்டு பேருமே ஓகே சொல்லிவிட்டார்கள்; விரைவில் அறிவிப்பு வரும் என்ற புதிய பேச்சு எழ ஆரம்பித்திருக்கிறது. இந்தப் படத்தை முடித்துவிட்டு அவர் கைதி 2வை இயக்க வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவும் கூறுகிறார்கள் திரைத்துறையினர். முன்னதாக ரஜினியும், கமலும் 1979ஆம் ஆண்டு வெளியான அலாவுதீனும் அற்புத விளக்கும் படத்தில் இணைந்து நடித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











