HBD K Balachander: இயக்குநர் சிகரம்னு சும்மாவா சொன்னாங்க.. ரஜினி, கமலை செதுக்கிய கிங்மேக்கர்!
சென்னை: தமிழ் சினிமாவை பல காலம் இவங்க ரெண்டு பேரும் ஆளப்போறாங்க என்பதை அன்றே கணித்து ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசனை செதுக்கிய இயக்குநர் சிகரம் கே. பாலசந்தரின் 93வது பிறந்தநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.
சூப்பர்ஸ்டார், உலக நாயகன் என இரு பெரும் ஜாம்பவான்கள் மட்டுமின்றி நாகேஷை ஹீரோவாக்கி பல படங்களில் அப்போதே அவரை மாமன்னன் ஆக்கிய பெருமைக்கும் சொந்தக்காரர் கே. பாலசந்தர்.
சினிமாவின் ரியல் கிங் மேக்கரான கே. பாலசந்தர் விவேக் உள்ளிட்ட பல கலைஞர்களை தமிழ் சினிமாவுக்கு பொக்கிஷங்களாக கொடுத்து தமிழ் சினிமாவின் மணிமகுடமாக இன்றும் ரசிகர்கள் மனங்களில் நிறைந்திருக்கிறார்.

பாலசந்தர் பிறந்தநாள்: திருவாரூரில் நன்னிலம் எனும் இடத்தில் உள்ள நல்லமாங்குடி கிராமத்தில் 1930 ஜூலை 9ம் தேதி பிறந்தவர் கே. பாலசந்தர். சிறு வயதில் நவராத்திரி கொலுக்களுக்கு பக்கத்து வீடுகளுக்கு சென்று வரும் போது அங்கே போடப்படும் நாடகங்களை பார்த்து ஆர்வம் கொண்ட அவர், இவரும் நாடகங்களை நவராத்திரி விழாக்களில் அரங்கேற்ற ஆரம்பித்தார்.
அதன் பின்னர், நாடகங்கள் மற்றும் சினிமா பக்கம் இவரது ஆர்வம் திரும்ப இந்திய சினிமாவுக்கே இணையற்ற ஒரு இயக்குநர் சிகரம் நமக்காக கிடைத்தார்.
வெற்றி வேண்டுமா போட்டுப் பாருடா எதிர்நீச்சல்: நாகேஷ் ஹீரோவாக நடித்தர் சர்வர் சுந்தரம் படத்துக்கு திரைக்கதை, வசனம் எழுதிய பாலசந்தர் 1965ம் ஆண்டு நாகேஷை ஹீரோவாக வைத்து நீர்க்குமிழி படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமானார்.
மேஜர் சந்திரகாந்த், பாமா விஜயம், எதிர்நீச்சல், நவகிரகம் என தொடர்ந்து நாகேஷை வைத்து பல படங்களை இயக்கியவர் கே. பாலசந்தர். நகைச்சுவை நடிகர்களாலும் நல்லா நடிக்க முடியும் என தமிழ் சினிமாவுக்கு காட்டிய பெரும் கலைஞன் பாலசந்தர்.

உலகநாயகனை உருவாக்கிய உளி: களத்தூர் கண்ணம்மாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான கமல்ஹாசன் சில படங்களில் அன்கிரெடிட் ரோலில் நடித்து வந்த கமலுக்கு 1973ம் ஆண்டு கே. பாலசந்தர் இயக்கத்தில் வெளியான அரங்கேற்றம் படத்தில் கிடைத்த தியாகு எனும் கதாபாத்திரம் தான் அவரை கொஞ்சம் கொஞ்சமாக செதுக்கி உலக நாயகனாக மாற்றியது.
சொல்லத்தான் நினைக்கிறேன், அவள் ஒரு தொடர்கதை, அபூர்வ ராகங்கள், மன்மத லீலை, மூன்று முடிச்சு, நினைத்தாலே இனிக்கும், வறுமையின் நிறம் சிகப்பு என 30க்கும் மேற்பட்ட கமல் நடித்த படங்களை இயக்கி உள்ளார் பாலசந்தர். கமல்ஹாசன் பெரிய ஸ்டாராக மாறிய பின்னர் அவரை வைத்து இயக்க வேண்டும் என பாலசந்தர் நினைக்கவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ரஜினிக்கு ஸ்டைல் கத்துக்கொடுத்த வாத்தி: அபூர்வ ராகங்கள் படத்தில் கமலுக்கு போட்டியாக ரஜினிகாந்தை ஒரே படத்தில் நடிக்க வைத்து இருவரது நடிப்பையும் உயர்த்தி தமிழ் சினிமாவுக்கு ஒரு உலக நாயகனையும் ஒரு சூப்பர்ஸ்டாரையும் கொடுத்த பெருமை பாலசந்தரை சேரும்.
ரஜினியை நடிப்புக் கல்லூரியில் பார்த்தபோதே இவன் பெரிய ஆளா வருவான்னு நினைத்த பாலசந்தர் அபூர்வ ராகங்கள் உனக்கு சின்ன ரோல் தான் உனக்காக நான் யோசித்து வைத்திருக்கிற படம் மூன்று முடிச்சு என்றே அந்த படத்தில் உன் மொத்த வித்தையும் காட்டு எனக் கூறினாராம்.
என்றும் பாலசந்தர் நினைவுகளோடு: கடந்த 2014ம் ஆண்டு டிசம்பர் 23ம் தேதி தனது 84 வயதில் வயது மூப்புக் காரணமாக காலமானார் இயக்குநர் கே. பாலசந்தர்.
இன்று வரை குருநாதர் பாலசந்தரை ரஜினிகாந்த் மற்றும் கமல் மறக்காமல் இருப்பதால் தான் அவர்கள் இந்த வயதிலும் பாக்ஸ் ஆபிஸை பந்தாடி வருகின்றனர் என்று சொன்னால் அது மிகையல்ல!


Click it and Unblock the Notifications











