திறமையான நடிகர்.. அதிர்ச்சியா இருக்கு.. ஸ்ரீனிவாசன் மறைவுக்கு ரஜினிகாந்த் இரங்கல்!
சென்னை: மோலிவுட் என்று சொல்லப்படும் மலையாள திரையுலகில், திரைக்கதை எழுத்தாளர், நடிகர், நகைச்சுவை நடிகர், தயாரிப்பாளர் என பல்வேறு பிரிவுகளில் வலம் வந்தவர் நடிகர் சீனிவாசன். 1970 ஆம் ஆண்டு தனது பயணத்தை தொடங்கிய இவர், 225க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். சற்று முன் இவர் உயிரிழந்த நிலையில் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.
நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், திரைக்கதை ஆசிரியர் என பன்முக தன்மைக்கொண்ட இவர்,
மலையாளத்தில் பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கியதுடன் காமெடி வேடங்களில் பல படங்களில் நடித்துள்ளார். தமிழில் புள்ளக்குட்டிக்காரன் திரைப்படத்திலும், கடந்த 2003-ம் ஆண்டு தமிழில் ஷ்யாம், மாதவன், த்ரிஷா நடிப்பில் வெளியான 'லேசா லேசா' படத்திலும் நடித்துள்ளார். தேசிய விருது, பிலிம் பேர் விருது, கேரள அரசின் விருது என பல விருதுகளை பெற்ற இவர் கடந்த சில ஆண்டுகளாக உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.

ரஜினி இரங்கல்: இந்நிலையில், இன்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவரது மறைவுக்கு திரைப்பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இவரின் மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், நடிகர் சீனிவாசனின் மரண செய்தி கேட்டு நான் அதிர்ச்சி அடைந்தேன். இருவரும் ஒன்றாக சென்னைத் திரைப்படக் கல்லூரியில் படித்தோம். மிகக்சிறந்த நடிகர். அவரின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிராத்திக்கிறேன் என்று ரஜினிகாந்த் ஆடியோவில் இரங்கல் தெரிவித்துள்ளார். ரஜினிகாந்த் நேரடியாக மலையாளப் படங்களில் நடிக்கவில்லை என்றாலும், மலையாள இயக்குனர்களின் படங்களில் நடித்திருக்கிறார், மேலும் ஸ்ரீனிவாசனின் திரைக்கதையை பல மேடையில் ரஜினிகாந்த் பாராட்டி உள்ளார்.
நாளை இறுதிச்சடங்கு: அவருக்கு விமலா என்கிற மனைவியும், இரண்டு மகன்கள் உள்ளனர். வினீத ஸ்ரீனிவாசன், தியான் ஸ்ரீனிவாசன் இருவருமே மலையாள சினிமாவில் முக்கியமானவர்கள் உள்ளனர். அவரது மூத்த மகன் வினீத் ஸ்ரீனிவாசன் ஹ்ருதயம் படத்தை இயக்கி உள்ளார். இந்த படம் மிகபெரிய அளவில் வெற்றி பெற்றது. தற்போது ஸ்ரீனிவாசனின் உடல் மருத்துவமனையில் இருந்து அவரது இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டு பின், எர்ணாகுளத்தில் உள்ள நகர்மன்றத்திற்கு மாற்றப்பட உள்ளது. அங்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றனர். இவரின் இறுதிச்சடங்கு நாளை நடைபெறும் என சீனிவாசனின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











