ஆதித்ய கரிகாலனாக விஜயகாந்த்: பொன்னியின் செல்வன் மேடையில் ரஜினிகாந்த் சொன்ன மாஸ் சீக்ரெட்
சென்னை: மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் படத்தின் ஆடியோ, ட்ரெய்லர் வெளியீடு நேற்று நடைபெற்றது.
நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்த இவ்விழாவில் ரஜினி, கமல் உள்ளிட்ட திரை பிரபலங்கள் கலந்துகொண்டனர்.
அப்போது பொன்னியின் செல்வன் மேடையில் பேசிய ரஜினி, நடிகர் விஜயகாந்த் குறித்து சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்து கொண்டார்.

பிரம்மாண்டமாக வெளியான ட்ரெய்லர்
தமிழ்த் திரையுலகின் கனவுத் திரைப்படமான பொன்னியின் செல்வன், மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது. ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ள இந்தப் படத்தில், கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பொன்னியின் செல்வன் வரும் 30ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் ஆடியோ மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று மாலை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.

விழாவில் பங்கேற்ற ரஜினி, கமல்
பொன்னியின் செல்வன் ஆடியோ, ட்ரெய்லர் வெளியீட்டு விழா, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில், சூப்பர் ஸ்டார் ரஜினி, உலகநாயகன் கமல்ஹாசன், இயக்குநர் ஷங்கர் உட்பட பொன்னியின் செல்வன் படக்குழுவினர் கலந்துகொண்டனர். மேலும், பொன்னியின் செல்வன் ட்ரெய்லர், ரஜினி, கமல் முன்னிலையில் வெளியிடப்பட்டது. முன்னதாக பொன்னியின் செல்வன் மேடையில் ஏறிய ரஜினி, கமல் இருவரும் பல சுவாரஸ்யமான நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.

விஜயகாந்த் பற்றி பேசிய ரஜினிகாந்த்
பொன்னியின் செல்வன் நாவலை திரைப்படமாக எடுக்க வேண்டும் என, எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி, கமல் என பலரும் நினைத்தது உண்டு. ஆனால், அப்போதெல்லாம் சாத்தியப்படாத பொன்னியின் செல்வன், இப்போது மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ளது. இந்நிலையில், பொன்னியின் செல்வன் நாவலில் வரும் முக்கியமான பாத்திரத்தில் விஜயகாந்த் நடித்தால் நன்றாக இருக்கும் என நான் நினைத்திருக்கிறேன் என ரஜினி மனம் திறந்துள்ளார்.

ஆதித்ய கரிகாலனாக விஜயகாந்த்
பொன்னியின் செல்வன் நாவலை கொஞ்சம் தாமதமாக தான் படித்ததாகவும், அதில் வரும் ஆதித்ய கரிகாலன் பாத்திரம் எனக்கு பிடிக்கும் எனவும் ரஜினி பேசினார். மேலும், தொன்னூறுகளில் பொன்னியின் செல்வன் நாவல் திரைப்படமாக உருவாகியிருந்தால், அதில் வரும் ஆதித்ய கரிகாலன் பாத்திரத்தில் விஜயகாந்த் நடித்தால் நன்றாக இருக்கும் என நான் நினைத்தேன் என மனம் திறந்துள்ளார். இதனைக் கேட்ட ரசிகர்கள், பயங்கரமாக ஆரவாரம் செய்தனர். தற்போது உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் படத்தில், ஆதித்ய கரிகலன் பாத்திரத்தில் விக்ரம் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











