ஜெயலலிதாவை எதிர்க்க காரணம்.. பாட்ஷா படவிழாவில் நடந்த அந்த சம்பவம்.. மனம் திறந்த ரஜினிகாந்த்!
சென்னை: திரைப்படத் தயாரிப்பாளரும், முன்னாள் அமைச்சருமான மறைந்த ஆர்.எம்.வீரப்பன் குறித்து ஆர்.எம்.வீ தி கிங் மேக்கர் என்ற டாக்குமெண்ட்ரி படத்தை சத்யா மூவீஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. அதன் முன்னோட்ட வீடியோவில் ரஜினிகாந்த், ஜெயலலிதாவை எதிர்த்ததற்கான காரணத்தை மனம் திறந்து பேசி உள்ளார்.
அதில், ஆர்.எம்.வீ தி கிங் மேக்கர் என்ற டாக்குமெண்டரியில் அவரைப் பற்றி நான் பேசுவதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. எனக்கு மிகவும் மரியாதை கொடுத்து, என்னிடம் அன்பாக நடந்து கொண்டவர்கள் நான்கு பேர். பாலச்சந்தர் சார், சோ சார், பஞ்சு அருணாச்சலம் சார், ஆர்.எம்.வீரப்பன். இவர்கள், இப்பொழுது இல்லை என்று நினைக்கும் பொழுது மிகவும் வருத்தமாக இருக்கிறது. அவர்களை நான் மிஸ் செய்கிறேன். பாட்ஷா படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா மேடையில் நான் வெடிகுண்டு கலாச்சாரத்தை பற்றி பேசினேன். ஒரு அமைச்சரை வைத்துக்கொண்டு நான் அப்படி பேசி இருக்கக்கூடாது. அப்போது எனக்கு அவ்வளவாக தெளிவு இல்லாததால் நான் பேசி விட்டேன்.

ரஜினி எப்படி பேசலாம்: அப்போது ஆர்.எம்.வீரப்பன் அவர்கள் அதிமுகவில் அமைச்சராக இருந்தார். நான் பேசியதால் அவரை பதவியில் இருந்து ஜெயலலிதா அவர்கள் தூக்கிவிட்டார். நீங்கள் இருக்கும் போதே, ரஜினி எப்படி அரசுக்கு எதிராக பேசலாம் என்றும், அதை கேட்டுக் கொண்டு எப்படி நீங்கள் அமைதியாக இருந்தீர்கள் என்று கேட்டுவிட்டு அவரை பதவியில் இருந்தே தூக்கி இருக்கிறார். இந்த விஷயத்தை கேள்விப்பட்டவுடன் நான் அப்படியே ஆடிப்போய் விட்டேன். என்னால் இப்படி ஆகிவிட்டதே என நினைத்து, இரவு முழுக்க நான் தூங்கவே இல்லை. இரவே போன் செய்தேன் யாரும் எடுக்கவில்லை, பிறகு காலையில் தொடர்பு கொண்டு அவரிடம் என்னால்தான் இப்படி ஆகிவிட்டது என்று மன்னிப்பு கேட்டேன். ஆனால், அவரோ அப்படி எந்த விஷயமும் நடக்காதது போல அட விடுங்க, அதை பத்தி எல்லாம் பேசாதீங்க பதவி ஒரு விஷயமா? நீங்க சந்தோஷமா இருங்க, அடுத்த படம் ஷூட்டிங் எப்போ என்று சாதாரணமாகவே பேசினார். அவர் அப்படி இயல்பாக பேசி இருந்தாலும், அன்று மேடையில் நான் தான் கடைசியாக பேசினேன். அப்படி இருக்கும் போது அவர் எப்படி என்னை எதிர்த்து பேசி இருக்க முடியும். செல்வி ஜெயலலிதா அவர்களே நான் எதிர்த்து குரல் கொடுத்ததற்கு பல காரணங்கள் இருந்தாலும், கூட இந்த காரணம் மிகவும் முக்கியமானது.

ரியல் கிங் மேக்கர்: அதன் பிறகு கூட நான் ஆர்.எம்.வீரப்பன் சாரிடம், நான் வேண்டுமானால் அவர்களிடம் பேசட்டுமா என்று கேட்டேன். அதற்கு அவர் அதெல்லாம் வேண்டாம், அந்த அம்மையார் முடிவு செய்துவிட்டார். அவர் ஒரு முடிவை எடுத்து விட்டால் அதிலிருந்து பின் வாங்க மாட்டார். நீங்கள் பேசி உங்கள் மரியாதையை கெடுத்துக் கொள்ளாதீர்கள், அப்படி நீங்கள் சொல்லி நான் அந்த கட்சியில் சேர வேண்டிய அவசியம் இல்லை என்று சொன்னார். அவர் ஒரு பெரிய மனிதர். அவர் தான் ரியல் கிங் மேக்கர் என்று ரஜினிகாந்த் அவர்கள் அந்த வீடியோவில் பேசியிருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில தற்போது டிரெண்டாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











