ஜெயிலர் 2 ப்ரோமோ.. டூப் போட்டு எடுத்தாரா நெல்சன் திலீப்குமார்?.. ஆரம்பித்த புது பஞ்சாயத்து
சென்னை: நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் கடந்த 2023ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ஜெயிலர். ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, ரவி வசந்த் என பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. படம் மிகப்பெரிய வெற்றி பெற்று உலகம் முழுவதும் 700 கோடி ரூபாய்வரை வசூலித்தது. இந்தச் சூழலில் படத்தின் இரண்டாவது பாகம் உருவாகவிருக்கிறது. அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புடன் கூடிய ப்ரோமோ வீடியோ சில நாட்களுக்கு முன்பு வெளியாகி வரவேற்பை பெற்றிருக்கிறது.
கோலமாவு கோகிலா படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் நெல்சன் திலீப்குமார். இவர் அந்தப் படத்துக்கு முன்னதாகவே சிம்புவை வைத்து வேட்டை மன்னன் படத்தை இயக்கினார். ஆனால் சில காரணங்களால் அந்தப் படம் பாதியிலேயே கைவிடப்பட்டது. அதனையடுத்து டிவி நிகழ்ச்சிகளை இயக்குவதற்கு சென்றுவிட்ட நெல்சன் நயன்தாராவை வைத்து கோலமாவு கோகிலாவை இயக்கினார். படம் மெகா ஹிட்டானது. முதல் படத்திலேயே கவனிக்கப்படும் இயக்குநராக மாறிவிட்டார்.

சிவகார்த்திகேயனுக்கு செம படம்: அடுத்ததாக சிவகார்த்திகேயனை வைத்து டாக்டர் படத்தை இயக்கினார். அந்தப் படமும் மெகா ஹிட்டாகி 100 கோடி ரூபாயை வசூலித்தது. முதல் இரண்டு படங்களுமே சூப்பர் ஹிட் கொடுத்த இயக்குநர் என்ற பெயரை பெற்றதைத் தொடர்ந்து டாப் ஹீரோவான விஜய்யை வைத்து பீஸ்ட் படத்தை இயக்கினார் அவர். ஆனால் படம் படுதோல்வியை சந்தித்தது. தோல்வி மட்டுமின்றி கடுமையான ட்ரோலையும் அந்தப் படம் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
ஜெயிலர்: சூழல் இப்படி இருக்க ரஜினிகாந்த்தை வைத்து ஜெயிலர் படத்தை இயக்க கமிட்டானார் நெல்சன். பீஸ்ட் படம் கடுமையாக ரோஸ்ட் ஆனதன் காரணமாக ரஜினிகாந்த்தையும் வைத்து செய்துவிடுவாரோ என்று ரஜினியின் ரசிகர்கள் உச்சக்கட்ட அச்சத்தில் இருந்தார்கள். மேலும் இந்தப் படத்தின் கதை விவாதத்தில் கே.எஸ்.ரவிக்குமார் எல்லாம் கலந்துகொண்டிருக்கிறார்கள் என்று தகவல்கள் பரவின.மேலும் நெல்சன் மீது ரஜினிகாந்த்துக்கு நம்பிக்கையே இல்லை என்ற வதந்தியும் பரவியது.
மெகா ப்ளாக் பஸ்டர்: ஆனால் அப்படியெல்லாம் எதுவும் இல்லை என்பது பின்னர் உறுதியானது. கடந்த 2023ஆம் ஆண்டு வெளியான அந்தப் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. காமெடி, ஆக்ஷன், செண்ட்டிமெண்ட் என அத்தனையிலும் கலக்கியிருந்தார் நெல்சன் திலீப்குமார். படமும் உலகம் முழுவதும் 700 கோடி ரூபாய்வரை வசூலித்தது. ரஜினிகாந்த்துக்கும் நீண்ட நாட்கள் கழித்து ஒரு மெகா ஹிட் கிடைத்ததால் நெல்சனை உச்சக்கட்டமாக கொண்டாடினார்கள் ரஜினியின் ரசிகர்கள்.
டூப் போட்டாரா?: இந்நிலையில் ஜெயிலர் படத்தின் இரண்டாவது பாகம் உருவாகவிருக்கிறது. அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ப்ரோமோ வீடியோவுடன் சில நாட்களுக்கு முன்பு வெளியானது. அது பெரிய வரவேற்பை பெற்றாலும் ஒரு விமர்சனத்தையும் சந்தித்திருக்கிறது. அதாவது ப்ரோமோ வீடியோவில் வரும் நபர் ரஜினிகாந்த்தே இல்லை; முக்கால்வாசி காட்சிகளை நெல்சன் திலீப்குமார் டூப் போட்டு எடுத்திருக்கிறார். ப்ரோமோவிலேயே இப்படி ஏமாற்றுகிறாரே படத்தில் என்னவெல்லாம் செய்ய காத்திருக்கிறாரோ என்று கமெண்ட்ஸ்களை பறக்கவிட்டு பஞ்சாயத்தை ஆரம்பித்திருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











