பிச்சை எடுத்தாலும் உள்ளூர்ல பிச்சை எடுக்கக் கூடாது.. அமெரிக்க வாழ் தமிழர்களுக்கு ரஜினி அட்வைஸ்!
சென்னை: அமெரிக்காவில் வசிக்கும் தமிழர்களுடன் வீடியோ காலில் நடிகர் ரஜினிகாந்த் உரையாடிய நிலையில் அவர் கொடுத்த சில அட்வைஸ் காட்சிகள் வெளியாகியுள்ளன. 73 வயதாகும் நடிகர் ரஜினிகாந்த் தொடர்ந்து அரசியல், சினிமா, ஆன்மீகம் மற்றும் பொது நிகழ்ச்சிகள் என பலவற்றில் பங்கேற்று வருகிறார்.
சினிமா பிரபலங்களின் நல்லது மற்றும் கெட்டது உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் தவறாமல் பங்கேற்று வரும் ரஜினிகாந்த் இன்று ஆந்திராவில் நடைபெற்ற சந்திரபாபு நாயுடு முதலமைச்சராக பதவி ஏற்கும் விழாவில் கலந்து கொண்டார்.

சமீபத்தில், இமயமலைக்கு சென்று திரும்பி வந்த ரஜினிகாந்த் அமெரிக்காவில் வசித்து வரும் மக்களுடன் வீடியோ காலில் பேசிய காட்சிகள் வெளியாகி உள்ளன. அதில் ரஜினிகாந்த் கூறியுள்ள பழமொழி ரசிகர்கள் மத்தியில் கவனத்தைப் பெற்றுள்ளன.
பஞ்ச் வசனங்கள்: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்றாலே முதலில் ரசிகர்களுக்கு நினைவுக்கு வருவது அவர் திரைப்படங்களில் பேசும் பஞ்ச் வசனங்கள் தான். " ஒரு தடவை சொன்னா 100 தடவை சொன்ன மாதிரி" என பாட்ஷாவில் அவர் பேசிய வசனம் பலரையும் ஈர்த்தது. " கண்ணா பன்னிங்க தான் கூட்டமா வரும் சிங்கம் சிங்கிளாத்தான் வரும்" என சிவாஜி படத்திலும் மாஸ் பஞ்ச் வசனத்தை ரஜினிக்காக ஷங்கர் வைத்திருப்பார். குட்டி கதை சொல்வது, தத்துவம் சொல்வது, பழமொழி கூறுவது என ரஜினிகாந்த் பேச்சை கேட்டாலே ஒரு ஈர்ப்பு ரசிகர்களுக்கு ஏற்படும்.
அமெரிக்கா வாழ் இந்தியர்களுக்கு அட்வைஸ்: படிப்பு நிமித்தமாகவும் பணி நிமித்தமாகவும் அமெரிக்காவில் பணியாற்றிக் கொண்டிருக்கும் இளைஞர்களை வீடியோ கால் மூலம் தொடர்பு கொண்டு நடிகர் ரஜினிகாந்த் பேசிய நிலையில், அவர்களுக்கு ரஜினிகாந்த் அறிவுரை ஒன்றை பழமொழி வாயிலாக கூறியுள்ளார்.
பிச்சை எடுக்க கூடாது: அமெரிக்காவில் வசித்து வரும் இந்தியர்களுக்கு வாழ்த்து கூறிய ரஜினிகாந்த் உழைப்புக்காகவும் கல்விக்காகவும் வெளிநாட்டில் தங்கி இருக்கிறீர்கள்.. சில ஆண்டுகள் அங்கே இருந்துவிட்டு மீண்டும் இந்தியாவுக்கு வந்து விடுங்கள் எனக் கூறிய ரஜினிகாந்த், " பிச்சை எடுத்தாலும் உள்ளூர்ல பிச்சை எடுக்கக்கூடாது வெளியூர்ல எடுக்கலாம் என்பார்கள், செத்தாலும் வெளியூர்ல சாகக் கூடாது உள்ளூர்ல தான் சாகணும்" என ரஜினிகாந்த் சொந்த மண்ணை மறக்கக் கூடாது என அறிவுறுத்தியுள்ளார்.
ரஜினியின் ஹியூமர் சென்ஸ்: கடமைகளை எல்லாம் முடித்து விட்டு சொந்த ஊருக்கு வந்து நீங்க படிச்ச இடம், பழகின நண்பர்கள், சைட் அடிச்ச பொண்ணுங்க, சாரி கிழவிங்களை எல்லாம் பார்த்து ரசிக்கணும் என பேசியுள்ளார். நடிகர் ரஜினிகாந்தின் ஹியூமர் சென்ஸ் குறித்தும் ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.
விட்டுக் கொடுக்காத சந்திரபாபு நாயுடு: பவன் கல்யாண் மற்றும் சிரஞ்சீவியின் கைகளை பிடித்துக் கொண்டு பிரதமர் நரேந்திர மோடி மேடையில் உயர்த்திப் பிடித்துக் காட்டிய நிலையில், ரஜினிகாந்தும் வந்திருக்கிறார் என மோடியிடம் ஓடிச் சென்று சந்திரபாபு நாயுடு மேடையில் அறிமுகம் செய்து வைக்க பிரதமர் மோடி ரஜினிகாந்த் மற்றும் லதா ரஜினிகாந்திடம் பேசிய காட்சிகளும் தீயாக பரவி வருகின்றன. தமிழ்நாட்டில் அரசியல் கேள்விகளை தவிர்த்து வரும் ரஜினிகாந்த் ஆந்திராவில் தொடர்ந்து அரசியல் நிகழ்வுகளில் பங்கேற்று வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











