பல்லுப்போன நடிகர் விளாசிய துரைமுருகன்.. நட்பு தொடரும்.. பதுங்கிய ரஜினி!
சென்னை: அமைச்சர் துரைமுருகன் பல்லுப்போன மூத்த நடிகர் என்று ரஜினிகாந்தை கிண்டலடித்து பேசியது குறித்த கேள்விக்கு, பதில் அளித்த ரஜினிகாந்த், அவரை எனக்கு ரொம்ப பிடிக்கும், அவர் என்ன சொன்னாலும் எனக்கு வருத்தம் இல்லை என்று அந்தர் பல்டி அடித்து பஞ்சாயத்தை முடித்துவைத்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற விழா ஒன்றில் கலந்து கொண்ட ரஜினிகாந்த், துரைமுருகனை கிண்டலடிக்கும் வகையில் பேசி இருந்தார். அதில், நான் ஆச்சரியப்படுகிற விஷயம், ஒரு பள்ளி ஆசிரியருக்கு புதிய மாணவர்கர்களால் எந்த பிரச்சனையும் இல்லை, பழைய மாணவர்களைத்தான் சமாளிக்க முடியாது. இந்த பழைய மாணவர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெற்று வகுப்பைவிட்டு செல்லாமல் இருப்பார்கள். இங்கும் ஏகப்பட்ட பழைய மாணவர்கள் இருக்கின்றனர். அதிலும், துரை முருகன் என ஒருவர் இருக்கிறார். அவர், கலைஞர் கண்ணில் விரல்விட்டு ஆட்டியவர். இவர்களையெல்லாம் வைத்துத் கலைஞர் எப்படித்தான் சமாளித்தாரோ தெரியவில்லை என்று பேசி இருந்தார்.

பல்லுப்போன நடிகர்: இது இணையத்தில் பேசுபொருளானதைத் தொடர்ந்து, கிருபானந்த வாரியார் 119வது பிறந்த நாள் விழாவில் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கலந்து கொண்டார். அப்போது, செய்தியாளர்கள் சிலர் நடிகர் ரஜினிகாந்த் கிண்டலடித்தது குறித்து கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த துரைமுருகன், மூத்த நடிகர்கள் எல்லாம் வயதாகி, பல் விழுந்து, தாடி வளர்த்து, சாகிற நிலையில் கூட நடிப்பதால் தான் இளைஞர்களுக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை என தனக்கே உரிய பாணியில் ரஜினியின் பேச்சுக்கு பதிலடி கொடுத்திருந்தார்.
பதுங்கிய ரஜினிகாந்த்: இவரின் இந்த பேச்சு இணையத்தில் பேசுபொருளானதைத் தொடர்ந்து, சென்னை விமான நிலையம் வந்த ரஜினியிடம், துரைமுருகன் கிண்டலடித்தது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர், துரை முருகன் என் நீண்டகால நண்பர், அவரை எனக்கு ரொம்ப பிடிக்கும். அவர் என்ன சொன்னாலும் எனக்கு வருத்தம் கிடையாது. எங்கள் நட்பு எப்போதும் தொடரும் என்றார். இதைத்தொடர்ந்து விஜய் கட்சி கொடியை அறிமுகப்படுத்தியது குறித்த கேள்விக்கு, விஜய்க்கு எனது வாழ்த்துக்கள் என்றார். ரஜினிகாந்தின் இந்த பதில் மூலம் இரண்டு நாட்களாக புகைந்துக்கொண்டிருந்த இந்த பஞ்சாயத்து முடிவுக்கு வந்துள்ளது.


Click it and Unblock the Notifications











