ரஜினி - கமல் இணைந்து நடிக்கும் புதிய படம்.. மகள் சௌந்தர்யா சொன்ன சூப்பர் விஷயம்
சென்னை: ரஜினிகாந்த் இப்போது ஜெயிலர் 2 படத்தில் நடித்துவருகிறார். இதனை முடித்துவிட்டு கமல்ஹாசன் தயாரிப்பில் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். இது ஒருபக்கம் இருக்க 40 வருடங்களுக்கு பிறகு ரஜினியும், கமலும் இணைந்து ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார்கள் என தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன. இந்நிலையில் அதுகுறித்து ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யா ஓபனாக பேசியிருக்கிறார்.
கூலி படத்தின் தோல்விக்கு பிறகு ஜெயிலர் 2 படத்தில் நடித்துவரும் ரஜினிகாந்த்; அடுத்ததாக கமல்ஹாசன் தயாரிப்பில் தலைவர் 173 படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார். இப்படத்தை சிபி சக்கரவர்த்தி இயக்கவுள்ளார். கண்டிப்பாக இந்தப் படத்தை பார்த்துவிட்டு வரும்போது அனைவருக்குமே திருப்தியாக இருக்கும் என்று சத்தியம் செய்வதாக கூறியுள்ளார். எனவே இப்படத்தின் மீது எக்கச்சக்க எதிர்பார்ப்பு இப்போதே பன்மடங்கு அதிகரித்துள்ளது.
ரஜினி - கமல்: இதற்கிடையே ரஜினியும், கமலும் தங்களது கரியரின் ஆரம்பத்தில் பல படங்களில் சேர்ந்து நடித்தார்கள். ஒருகட்டத்துக்கு மேல் நாம் இரண்டு பேரும் இப்படியே சேர்ந்து நடித்துக்கொண்டிருந்தால் இரண்டு பேருமே வளர்ச்சி அடைய முடியாது என்ற ஜென்டில்மேன் அக்ரீமென்ட் படி இனிமேல் சேர்ந்து நடிப்பதில்லை என்று முடிவெடுத்தார்கள். அப்போதிருந்து 40 வருடங்களாக அவர்கள் சேர்ந்து நடிக்கவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டு பேரும் இணையும் படம்: சூழல் இப்படி இருக்க அவர்கள் இரண்டு பேருமே தங்களது கரியரின் இறுதிக்கட்டத்தில் இருக்கிறார்கள். எனவே மீண்டும் அவர்கள் சேர்ந்து நடிக்கலாம் என்ற முடிவெடுத்திருப்பதாக தெரிகிறது. முதலில் கமல் தயாரிப்பிலேயே ரஜினியும் கமலும் சேர்ந்து நடிக்கலாம் என்று கருதப்பட்டது. ஆனால் அதில் ரஜினி மட்டும்தான் நடிப்பார் என்ற அறிவிப்பு இரண்டு பேரின் ரசிகர்களுக்கும் கொஞ்சம் ஏமாற்றத்தைத்தான் கொடுத்தது.
இயக்குநர் நெல்சன் திலீப்குமார்?: தற்போது இந்தப் படத்தை முடித்துவிட்டு அவர்கள் இரண்டு பேரும் இணையவிருக்கிறார்களாம். அநேகமாக இப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்க வாய்ப்புகள் அதிகம் என்று கருதப்படுகிறது. அதுமட்டுமின்றி இப்படத்துக்கு பிரபல ஒளிப்பதிவாளர் ராஜீவ் மேனன் ஒளிப்பதிவு செய்யவிருக்கிறார் என்றும் சில நாட்களாக தகவல் ஓடுகிறது. இப்படி ஏகப்பட்ட விஷயங்கள் தகவல்களாக வந்தாலும் இன்னமும் அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் வரவில்லை.
சௌந்தர்யா ரஜினிகாந்த் சொன்னது: இந்நிலையில் ரஜினியின் இளைய மகளும், தயாரிப்பாளருமான சௌந்தர்யா ரஜினிகாந்த் வித் லவ் பட விழாவில் இதுகுறித்து கூறுகையில், "இரண்டு பேரும் (ரஜினி, கமல்) படம் பற்றி விரிவான தகவலை தயாரிப்பு தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்கள். இப்போது பேச்சுவார்த்தைகள் போய்க்கொண்டிருக்கின்றன. விரைவில் அறிவிப்பு வரும். நான் அந்தப் படத்தில் பணியாற்றவில்லை" என்றார். இது ரஜினி, கமல் ரசிகர்களிடையே உச்சக்கட்ட மகிழ்ச்சியை உருவாக்கியுள்ளது.


Click it and Unblock the Notifications











