Coolie: ரஜினிக்கு லாஜிக் இல்லையினா ஓ.கே.. கதைக்கே லாஜிக் இல்லையினா எப்படி? கூலி சொதப்பல் வறுவல் இதோ!
சென்னை: விக்ரம், லியோ படத்திற்கு எந்த அளவுக்கு எதிர்பார்ப்பு இருந்ததோ, அதை விட கூடுதல் எதிர்பார்ப்பு ஏற்படுத்திய படம் கூலி. காரணம் லோகேஷ் கனகராஜ் + ரஜினிகாந்த் என்பதால் தான். ஆனால், படம் உள்ளூர் தொடங்கி வெளிநாடுகள் வரை தர்ம அடி வாங்கிக் கொண்டு உள்ளது. காரணம் படத்தின் திரைக்கதையில் இருக்கும் ஓட்டை உடைசல்கள்தான். இன்னும் சொல்லப்போனால் சொதப்பல் தான் படமே இருக்கிறது எனக் கூறும் அளவுக்கு ஏகப்பட்ட சொதப்பல்.
சத்யராஜை வில்லன் கொன்றுவிட, அதற்கு பழிவாங்குகிறார் ரஜினி. இது தான் கதை. சத்யராஜை கொன்று விட்டார்களே என்ற பரிதாபமோ, கோபமோ ரசிகர்களுக்கு ஏற்படவே இல்லை. அதற்காக ரஜினி பழி வாங்கினால் என்ன வாங்கவில்லை என்றால் என்ன என்றுதான் இருந்தது.
படத்திற்கே மிகப்பெரிய விளம்பரத்தை ஏற்படுத்திக் கொடுத்த மோனிகா பாடல். ஏன் வந்துச்சு, எதுக்கு வந்துச்சு என்றே தெரியவில்லை. திரைக்கதையில் பாடல் காட்சி இடம் பெற்றிருந்த இடம் ஒட்டவேயில்லை. பாடல் நன்றாக இருந்ததே என்று அனைவரும் இருக்கையில் அமர்ந்திருந்தார்கள். இல்லையென்றால் வெளியே கூட எழுந்து சென்றிருக்க அதிக வாய்ப்பு.

காரில் செல்லும் ஸ்ருதி ஹாசனை சௌபின் பைக்கில் துரத்துகிறார். காரின் ஜன்னல் கண்ணாடியை மூடியிருந்தால் சௌபின் காருக்குள் ஏறி இருக்க வாய்ப்பில்லை. இது மட்டும் இல்லாமல், காரை வைத்து பைக்கை ஒரு இடி இடித்து இருக்கலாமே?
சத்யராஜை சௌபின் ஏன் கொல்லுகிறார்? கூலியாக இருந்து நடுக்கடலில் இருந்து தப்பித்து வந்த ரஜினிகாந்திற்கு மேன்ஷன் கட்டி அதை நடத்தும் அளவுக்கு எங்கிருந்து பணம் வந்தது? ஃபிளாஷ் பேக்கில் கூலியாக இருக்கும் சத்யராஜ், சமகால கதையில் விஞ்ஞானியாக உள்ளார் அது எப்படி?
ஒரு காட்சி கூட இல்லை: விசில் அடித்தால் இறங்கி அடிப்போம் என இருக்கும் ரஜினியின் நண்பர்கள், ஸ்ருதி ஹாசனை மீட்கச் சென்று இருக்கலாம். அதனால் லொள்ளு சபா மாறன் கொல்லப்பட்டிருக்க மாட்டார். கதாநாயகன் தரப்பைச் சார்ந்தவர்களை வில்லன் கொல்லும் போது கரிசணம் ஏற்படும் அளவுக்கு கூட ஒரு காட்சி இல்லை.
சொதப்பல்: கொடூர வில்லன் நாகர்ஜுனாவுக்கு தனது தந்தையை கொன்றவரை நியாபகம் இல்லை என்பது வேடிக்கை. நாகார்ஜுனாவின் மகனை வைத்து சௌபின் காய் நகர்த்தி இருக்கலாம். ஆனால் அதை விடுத்து நாகர்ஜுனா மகனைக் கொலை செய்வதும் திரைக்கதை சொதப்பல்.

வருத்தம்: இந்த படத்திற்கு எதற்கு ஆமிர் கான்? அவர் படத்தில் வந்த காட்சிகள், ரசிகர்களாகிய நாங்கள் நொந்த காட்சியாக மாறிவிட்டது. ரஜினியின் ரசிகர் என வில்லனுக்கு எல்லாம் வில்லன் கூறும்போது யப்பா முடியல என்பது போலத்தான் இருந்தது. கதை கேட்காமல் நடித்த ஆமிர் கானை நினைத்து வருத்தப்படுவதா இல்லை? தலைவர் படம் முதல் நாளே பார்த்தாக வேண்டும் என படத்திற்கு போன ரசிகர்களை நினைத்து வருத்தப்படுவதா என்று தெரியவில்லை. ரூபாய் 200 கொடுத்து டிக்கெட் வாங்கி படம் பார்த்த நமக்கே இவ்வளவு கஷ்டமா இருக்கே, பிளாக்கில் 4500 க்கு டிக்கெட் வாங்கி படம் பார்த்தவர்களை நினைத்து மனசை தேற்றிக் கொண்டு வெளியேறியாகிவிட்டது.


Click it and Unblock the Notifications











