விஜய் கட்சியிடம் தோற்றுப்போன ஸ்டாலின்.. என்ன சிவாஜி இப்படி ஆகிப்போச்சு?.. நேரில் சந்தித்த ரஜினிகாந்த்
சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய தோல்விகளில் ஒன்று முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தோல்வி. கொளத்தூர் தொகுதியில் தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபுவிடம் அவர் தனது வெற்றி வாய்ப்பை இழந்திருக்கிறார். அவரது தோல்வி தமிழர்களில் பெரும்பாலானவர்களை சோகமடைய செய்திருக்கிறது. சூழல் இப்படி இருக்க நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்தார்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் அண்மையில் நடந்து முடிந்து கடந்த நான்காம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட்டன. விஜய்யால் இரண்டு தொகுதிகளில் வெல்ல முடியுமா? அவரது கட்சி மொத்தமாக 10 இடங்களை தாண்டுமா என எக்கச்சக்க கேள்விகள் முன்வைக்கப்பட்டன. ஆனால் அத்தனை பேச்சுக்களையும் அடித்து நொறுக்கிவிட்டு தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கிறது. விஜய்யும் தான் போட்டியிட்டிருந்த திருச்சி கிழக்கு, பெரம்பூர் ஆகிய இரண்டு தொகுதிகளில் வெற்றியை பெற்றுவிட்டார்.

பெரும்பான்மை கிடைக்குமா?: 108 தொகுதிகளில் தவெக வெற்றி பெற்றாலும் 118 என்ற மேஜிக் நம்பரை தொட முடியவில்லை. எனவே பெரும்பான்மைக்கு தேவையான பத்து எம்.எல்.ஏக்கள் ஆதரவை மற்ற கட்சிகளிடம் கேட்டிருக்கிறார் விஜய். அதற்காக தொடங்கிய பேச்சுவார்த்தையில் காங்கிரஸுடன் உடன்பாடு எட்ட; காங்கிரஸ் கட்சி 5 எம்.எல்.ஏக்களின் ஆதரவை கொடுத்திருக்கிறது. இன்னும் ஐந்து எம்.எல்.ஏக்கள் மட்டுமே ஆதரவு கொடுக்க வேண்டும். விசிக, கம்யூனிஸ்ட்டுகளின் எம்.எல்.ஏக்களும் தவெகவுக்கு ஆதரவு கொடுப்பார்கள் என்று தெரிகிறது.
மு.க.ஸ்டாலின் தோல்வி: எனவே நாளை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் விஜய் முதலமைச்சராக பதவியேற்கவிருக்கிறார். இதற்கிடையே கொளத்தூர் தொகுதியில் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தவெக வேட்பாளர் விஎஸ் பாபுவிடம் வெற்றி வாய்ப்பை இழந்தார். அது பலருக்கும் அதிர்ச்சியையும், சோகத்தையும் கொடுத்தது. ஸ்டாலினும் ரொம்பவே கலங்கிப்போயிருந்தார். இருப்பினும் நேற்று அந்தத் தொகுதிக்கு சென்று மக்களுக்கு நன்றியும் தெரிவித்தார். அப்போது முன்னாள் அமைச்சர் சேகர் பாபு, திமுக தொண்டர்கள் எல்லாம் கதறி கதறி அழுதார்கள்.
ரஜினி சந்திப்பு: அவர்களை எல்லாம் அழக்கூடாது என்று ஸ்டாலினே தேற்றவும் செய்தார். அதெல்லாம் அவ்வளவு நெகிழ்ச்சியாக இருந்தது. இந்நிலையில் ஸ்டாலின் தோல்வி குறித்து திரைத்துறையிலிருந்து பலர் அமைதி காத்துவருகிறார்கள். ஆனால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தோ இன்று மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்தார். அப்போது, 'இந்த இக்கட்டான நேரத்தில் நான் உங்களுடன் இருப்பேன்’ என்று கூறினார். அதுமட்டுமின்றி, நடந்து முடிந்த தேர்தல் குறித்தும், தேர்தல் முடிவுகள் குறித்தும் இரண்டு பேரும் பேசினார்கள் என்றும் தகவல்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன. மேலும் ரஜினிக்கு திமுகவினர் தங்களது நன்றியையும் கூறிவருகிறார்கள்.
முன்னதாக நேற்று கொளத்தூருக்கு சென்று நன்றி தெரிவித்தது குறித்து மு.க.ஸ்டாலின் தன் எக்ஸ் பக்கத்தில், "கொளத்தூருக்கும் எனக்குமான உறவு தேர்தல் வெற்றி, தோல்விகளைக் கடந்த உறவு.15 ஆண்டுகாலம் எனக்கு ஆதரவு நல்கியவர்கள் கொளத்தூர் தொகுதி மக்கள். அதில், 10 ஆண்டுகள் எதிர்க்கட்சி வரிசையில் இருந்தும், 5 ஆண்டுகள் ஆளும்கட்சியாகவும் என்னால் இயன்ற அனைத்துத் திட்டங்களையும் கொளத்தூருக்குக் கொண்டு வந்து நிறைவேற்றினேன்.
தமிழ்நாட்டின் மாடல் தொகுதியாக அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளையும் செய்து கொடுத்து, எந்தக் கோரிக்கையானாலும் நிறைவேற்றிக் கொடுத்த பெருமிதத்தோடே எனது கொளத்தூர் தொகுதி மக்களை நேரில் சந்தித்து இன்று நன்றி தெரிவித்தேன். ஒவ்வொரு தெருவிலும் சென்றபோது அங்கு நான் உருவாக்கிய விளையாட்டரங்கம், பூங்கா, முதல்வர் படைப்பகம், நூலகம், திருமண மாளிகை, பேருந்து நிலையம், மருத்துவமனை, பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் போன்றவற்றைக் கண்டு என் கடமையைச் சரிவர ஆற்றியிருப்பதில் மனநிறைவு கொண்டேன். உணர்ச்சிப் பெருக்கோடு என் நன்றியை ஏற்றுக்கொண்ட கொளத்தூர் மக்களுக்காக என்றும் நான் உண்மையாக உழைப்பேன். உங்களோடுதான் நான் என்றும் இருப்பேன்" என குறிப்பிட்டிருந்தார்.


Click it and Unblock the Notifications
