ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்.. ரஜினிகாந்த் பாராட்டோடு நிறுத்தவில்லை.. கார்த்திக் சுப்புராஜ் எமோஷனல்
சென்னை: Jigarthanda Double X (ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்) ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படக்குழுவை ரஜினிகாந்த் நேரில் அழைத்து பாராட்டிய புகைப்படங்கள் ட்ரெண்டாகியிருக்கின்றன.
பீட்சா படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான கார்த்திக் சுப்புராஜ் ஜிகர்தண்டா, இறைவி, பேட்ட, மெர்குரி படங்கள் மூலம் கவனம் ஈர்த்தவர். இவற்றில் ஜிகர்தண்டா படம் மெகா ப்ளாக்பஸ்டர் ஆனது. மதுரை கேங்ஸ்டர் கதைக்களத்தை தனது வித்தியாசமான மேக்கிங்கின் மூலம் ப்ரெசண்ட் செய்து அப்ளாஸை அள்ளினார் கார்த்திக் சுப்புராஜ். அந்தப் படத்தின் மூலம் அனைவரது கவனமும் அவர் மீது திரும்பியது.

ஜிகர்தண்டா 2: இந்த சூழலில் அவர் ஜிகர்தண்டா படத்தின் இரண்டாம் பாகமாக ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தை இயக்கினார். எஸ்.ஜே.சூர்யா, ராகவா லாரன்ஸ் உள்ளிட்டோர் நடிப்பில் சந்தோஷ் நாராயணன் இசையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த 10ஆம் தேதி படம் வெளியானது. படத்துக்கு முதல் நாளிலிருந்தே பாசிட்டிவ்வான விமர்சனங்கள் வந்தன. கார்த்திக் சுப்புராஜின் மேக்கிங்கை ரசிகர்கள் புகழ்ந்து தள்ளுகின்றனர்.
ரஜினி பாராட்டு: படத்தை பார்த்த ரஜினிகாந்த் நேற்று, "ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படம் ஒரு குறிஞ்சி மலர். கார்த்திக் சுப்புராஜின் அற்புதமான படைப்பு. வித்தியாசமான கதை மற்றும் கதைக்களம். சினிமா ரசிகர்கள் இதுவரை பார்க்காத புதுமையான காட்சிகள்.லாரன்ஸால் இப்படியும் நடிக்க முடியுமா என்ற பிரமிப்பை நமக்கு உண்டாக்குகிறது.
நடிகவேள் எஸ்.ஜே.சூர்யா: எஸ்.ஜே.சூர்யா இந்நாளின் திரையுலக நடிகவேள். வில்லத்தனம், நகைச்சுவை, குணசித்திரம் என மூன்றையும் கலந்து அசத்தியிருக்கிறார். திருவின் கேமரா விளையாடியிருக்கிறது. கலை இயக்குநரின் உழைப்பு பாராட்டுக்குரியது. திலீப் சுப்புராயனின் சண்டை காட்சிகள் அபாரம்.
சந்தோஷ் நாராயணன் வித்தியாசமான படங்களுக்கு வித்தியாச இசை அமைப்பதில் மன்னர். இதில் தான் ஒரு தலைசிறந்த இசையமைப்பாளர் என்பதை நிரூபித்திருக்கிறார். பழங்குடிகள் நடிக்கவில்லை வாழ்ந்திருக்கிறார்கள். நடிகர்களுடன் போட்டிப்போட்டு யானைகளும் நடித்திருக்கின்றன. கார்த்திக் சுப்புராஜை நினைத்து பெருமைப்படுகிறேன்" என குறிப்பிட்டிருந்தார்.
நேரில் பாராட்டு: வாழ்த்து செய்தி வெளியிட்டதோடு மட்டும் நிறுத்திக்கொள்ளாமல் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படக்குழுவை நேரில் அழைத்தும் பாராட்டியிருக்கிறார் ரஜினிகாந்த். இந்த சந்திப்பின்போது கார்த்திக் சுப்புராஜ், எஸ்.ஜே.சூர்யா, லாரன்ஸ், சந்தோஷ் நாராயணன் உள்ளிட்ட படக்குழுவினர் இருந்தனர். அதுதொடர்பான புகைப்படங்கள் ட்ரெண்டாகியிருக்கின்றன.
கார்த்திக் ட்வீட்: இந்த சந்திப்பு குறித்து இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில், “உங்கள் அன்பிலும், ஆசீர்வதிப்பிலும் எங்களை நனைய வைத்ததற்கு நன்றி தலைவா.. உங்களுடனான ஒரு மணி நேர சந்திப்பில் எங்கள் ஒட்டுமொத்த டீமுக்கும் பாசிட்டிவிட்டி வந்துவிட்டது” என்று குறிப்பிட்டிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











