மயில்சாமியிடம் மன்னிப்பு கேட்டேன்... நேரில் அஞ்சலி செலுத்திய ரஜினி... கடைசி ஆசையை கேட்டு உருக்கம்!
சென்னை: தமிழில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்த மயில்சாமி நேற்று அதிகாலை மாரடைப்பு ஏற்பட்டு காலமானார்.
மயில்சாமியின் மறைவை அறிந்த திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் அவரது உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் மயில்சாமியின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி, மயில்சாமியுடனான தனது நட்பு குறித்து மிக உருக்கமாகக் கூறினார்.

நடிகர் மயில்சாமி மறைவு
கோலிவுட்டின் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்த மயில்சாமி, நேற்று அதிகாலை 3 மணியளவில் மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். 1984ல் ரிலீஸான தாவணி கனவுகள் படம் மூலம் நடிகராக அறிமுகமான அவர், கடந்த 30 ஆண்டுகளாக திரைத்துறையில் பயணித்து வந்தார். ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, விக்ரம், தனுஷ், விஜயகாந்த், சத்யராஜ் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள மயில்சாமியின் உயிரிழப்பு பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

ரஜினி நேரில் அஞ்சலி
சென்னை சாலிகிராமத்தில் உள்ள மயில்சாமியின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அமைச்சரும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின், நடிகர் சங்கத் தலைவர் நாசர், பொருளாளர் கார்த்தி, எம்எஸ் பாஸ்கர், செந்தில், சத்யராஜ், ராதாரவி, சூரி, பாண்டியராஜன், சித்தார்த், மனோபாலா, ஜெயராம், டிரம்ஸ் சிவமணி, கோவை சரளா உள்ளிட்ட ஏராளமான திரை பிரலங்கள் மயில்சாமியின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். இவர்களத் தொடர்ந்து தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினியும் நேரில் சென்று மயில்சாமியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

எனது நெருங்கிய நண்பர்
அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ரஜினிகாந்த், மயில்சாமி தனது நெருங்கிய நண்பர் என பெருமிதமாகக் கூறினார். மயில்சாமி ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டாக இருந்தபோதே அவருடன் நெருங்கி பழகியுள்ளேன். இருவருமே நீண்ட நாட்களாக நண்பர்களாக பழகி வந்தோம். இருவருமே அடிக்கடி நேரில் சந்தித்துக்கொள்வோம், அப்போதெல்லாம் அவர் இருவரை பற்றி தான் பேசுவார், அவர்களில் ஒருவர் மறைந்த நடிகர் எம்ஜிஆர், இன்னொருவர் சிவன்.

அதிக படங்களில் நடிக்கவில்லை
நீண்ட நாட்களாக நெருங்கிய நண்பர்களாக இருந்தபோதும், நாங்கள் இருவரும் சேர்ந்து அதிக படங்களில் நடிக்கவில்லை. ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை தீபத்துக்கு திருவண்ணாமலை சென்றுவிடுவார். அங்கிருந்துகொண்டே எனக்கு கார்த்திகை தீபம் குறித்த தகவல்களை அடிக்கடி செல்போனில் கூறிக்கொண்டே இருப்பார். அது அவருக்கு ஒரு படத்தை முதல் நாள் முதல் ஷோ பார்ப்பதற்கு சமமானது.

கடைசி ஆசை ரஜினி உருக்கம்
ஆனால், சென்றமுறை அவர் திருவண்ணாமலையில் இருந்து கால் செய்தபோது என்னால் பேச முடியவில்லை. நான் சூட்டிங்கில் இருந்ததால் மயில்சாமி கால் செய்தபோது எடுக்க முடியவில்லை, அதன்பிறகு அவரை நேரில் சந்திக்கும் போது அதற்காக மன்னிப்பு கேட்டேன். விவேக், மயில்சாமி இருவரது மறைவும் திரையுலகிற்கு மட்டும் இல்லை, இந்தச் சமூகத்துக்கே பெரிய இழப்பு. அவர்கள் மிகச் சிறந்த மனிதர்கள் என புகழாரம் சூட்டினார்.

எல்லாம் அவன் கணக்கு
தெடர்ந்து பேசிய ரஜினி, சிவ பக்தனான மயில்சாமி, சிவராத்திரி தினத்தில் உயிரிழந்தது சாதாரண கணக்கு கிடையாது. இது எல்லாமே சிவனின் கணக்கு என்பதாகக் கூறினார். மேலும், மயில்சாமியின் மகன்கள் சினிமாவில் நடித்து வருகின்றனர், அவர்களுக்கு நல்ல எதிர்காலம் வரவேண்டும் என இறைவனை வேண்டுகிறேன். மயில்சாமியின் குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த இரங்கல் எனக் கூறினார். இறுதியாக மயில்சாமி பங்கேற்ற சிவராத்திரி விழாவில் ரஜினியும் பங்கேற்றிருந்தால் நன்றாக இருக்கும் என அவர் டிரம்ஸ் சிவமணியிடம் கூறியிருந்ததாக செய்தியாளர்கள் ரஜினியிடம் கேட்டனர். அதற்கு பதிலளித்த ரஜினி, இதனை நானும் கேள்விப்பட்டேன், இதுபற்றி டிரம்ஸ் சிவமணியிடம் இன்னும் பேசவில்லை என உருக்கமாக பேசிவிட்டு அங்கிருந்து கிளம்பிச் சென்றார்.


Click it and Unblock the Notifications











