தோழர் நல்லகண்ணு மறைவு.. ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி.. பெரிய ஆத்மா என இரங்கல்
சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், சுதந்திர போராட்ட வீரருமான நல்லகண்ணு உடல்நல குறைவு காரணமாக நேற்று ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு அனைவரிடமும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. CPI மாநில தலைமை அலுவலகமான பாலன் இல்லத்தில் அவரது உடல் வைக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி இரங்கல் தெரிவித்தார்.
இந்திய அரசியலில் தூய்மையான தலைவர்களில் ஒருவர் நல்லகண்ணு. இள வயதிலேயெ சுதந்திர போராட்ட களத்துக்கு சென்று பல இன்னல்களை சந்தித்தவர். அப்போதே அவருக்கு கம்யூனிஸம் மீது தீராத பற்று ஏற்பட்டதன் காரணமாக; ஒருகட்டத்தில் தன்னை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைத்துக்கொண்டார். அரசியலுக்கு வந்தாலும் ரொம்பவே எளிமையாக வாழ்ந்தவர் அவர். மக்கள் பிரச்னைகளுக்கு தொடர்ந்து ஓயாமல் குரல் கொடுத்துக்கொண்டே இருந்தார். ஆனாலும் ஒருமுறை கூட அவர் எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்படவில்லை என்பது கொடுமை.
மிகச்சிறந்த உதாரணம் நல்லகண்ணு: இருந்தாலும் மக்கள் மீது ஆழமான அன்பு வைத்திருந்தார். தமிழ்நாடு அரசு கொடுத்த நிதியைகூட; தனது பணம் ஐந்தாயிரம் ரூபாயை கூடுதலாக சேர்த்து மக்கள் பணிகளுக்கு செலவழிக்கும்படி மீண்டும் கொடுத்தவர் அவர். கடைசி வரை வாடகை வீட்டில் வாழ்ந்த அவர்; தனக்கு சரி சமமாக எல்லோரையும் மதித்தவர். இனிமேல் இப்படி ஒரு அரசியல் தலைவரை கண்டிப்பாக பார்க்க முடியாது. பொது வாழ்க்கையில் இருப்பவர்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு அவர்தான் மிகச்சிறந்த உதாரணம்.

உயிரிழந்த நல்லகண்ணு: சூழல் இப்படி இருக்க அண்மையில் தனது வீட்டில் தவறி விழுந்தார் அவர். அப்போது தலையில் காயம் ஏற்பட்டது. அதனையடுத்து ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்றுவந்தார். எப்படியாவது அவர் உடல்நலம் தேறிவிடுவார் என்று அவரது கட்சியினர் மட்டுமின்றி மற்ற கட்சியினரும், தொண்டர்களும் எதிர்பார்த்தார்கள். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். அவருக்கு வயது 101 ஆகும்.
பாலன் இல்லத்தில் உடல்: நல்லகண்ணுவின் உடலானது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகமான பாலன் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்கள். இன்று மாலை ஐந்து மணியளவில் அவரது உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காகவும் வைக்கப்படவிருக்கிறது. தோழரின் விருப்பப்படியே அவரது உடல் மருத்துவ மாணவர்களின் கல்வி மற்றும் ஆராய்ச்சிக்காக மருத்துவா கல்லூரிக்கு முழு அரசு மரியாதையுடன் தானமாக வழங்கப்படுகிறது.
ரஜினி அஞ்சலி: இந்நிலையில் நல்லகண்ணுவின் உடலுக்கு ரஜினிகாந்த் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "நான் ஓமந்தூரார், காமராஜர், பேரறிஞர் அண்ணா, கக்கன் ஆகியோரை பார்த்தது இல்லை. ஆனால் அவர்களை எல்லாம் சேர்த்து நல்லகண்ணுவை பார்த்துவிட்டேன். எளிமையாக, நேர்மையாக இருந்தால் மதிப்பு தானாக வரும் என்பதற்குஅ வர் எடுத்துக்காட்டு. பெரிய ஆத்மா. தோழர் நல்லகண்ணுவுக்கு வீரவணக்கம்" என்றார்.


Click it and Unblock the Notifications