என்ன ரைட்டிங் அஷ்வத்.. டிராகன் இயக்குநரை புகழ்ந்த ரஜினிகாந்த்.. செம சந்திப்பு
சென்னை: பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவான திரைப்படம் டிராகன். பிரதீப்புடன் மிஷ்கின், கயாடு லோஹர், அனுபமா பரமேஸ்வரன், ஜார்ஜ் மரியன், கே.எஸ்.ரவிக்குமார், விஜே சித்து, ஹர்ஷத் உள்ளிட்ட பலர் நடித்திருந்த அந்தப் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. சமீபத்தில் வெளியான அந்தப் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று 100 கோடி ரூபாய் வசூல் செய்திருக்கிறது. இந்நிலையில் படத்தின் இயக்குநர் அஷ்வத் மாரிமுத்துவை நேரில் அழைத்து பாராட்டியிருக்கிறார் ரஜினிகாந்த்.
கோமாளி படத்தை இயக்கி சினிமாவில் அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். அந்தப் படம் சூப்பர் ஹிட்டடித்தது. அதனைத் தொடர்ந்து இரண்டாவது படமாக லவ் டுடே படத்தை இயக்கி தானே ஹீரோவாகவும் நடித்தார் அவர். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்திருந்த அந்தப் படம் 2கே கிட்ஸுகளை கவர்ந்து மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. விமர்சன ரீதியாக மட்டுமின்றி வசூல் ரீதியாகவும் மெகா ஹிட்டடித்து 100 கோடி ரூபாய்வரை வசூல் செய்தது. இயக்குநராக இரண்டாவது படத்திலும், ஹீரோவாக முதல் படத்திலும் 100 கோடி ரூபாய் க்ளப்பில் இணைந்து கெத்து காண்பித்தார் பிரதீப்.

டிராகன்: இப்படிப்பட்ட சூழலில்தான் ஓ மை கடவுளே படத்தை இயக்கி கவனம் ஈர்த்த அஷ்வத் மாரிமுத்துவுடன் கைகோர்த்தார் பிரதீப். அஷ்வத்தும், பிரதீப்பும் கல்லூரி காலத்திலிருந்தே நண்பர்கள். இரண்டு பேருமே குறும்படத்தை இயக்கித்தான் திரைத்துறைக்குள் நுழைந்தார்கள். எனவே இரண்டு பேரும் சேர்ந்து என்ன மாதிரியான படத்தை கொடுக்கப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு டிராகன் படத்தின் அறிவிப்பு வந்ததிலிருந்து ரசிகர்களிடம் எக்கச்சக்கமாக இருந்தது.
சூப்பர் ரெஸ்பான்ஸ்: படத்தின் ட்ரெய்லரை பார்த்த ரசிகர்கள் கண்டிப்பாக இது டான் 2தான் என்றார்கள். ஆனால் கான்ஃபிடென்ஸோடு அதனை மறுத்தார் இயக்குநர். படம் சமீபத்தில் வெளியானது. படத்தை பார்த்த ரசிகர்கள் அவசரப்பட்டு இதனை டான் 2 என்று சொல்லிவிட்டோமே என்று ஃபீல் செய்தார்கள். படம் மிகப்பெரிய ரெஸ்பான்ஸை பெற்றது. முக்கியமாக இந்தக் காலத்துக்கு தேவையான கருத்தினை பிரசார நெடி இல்லாமல் கமர்ஷியலாகவும், எமோஷனலாகவும் சொன்ன விதத்தில் அப்ளாஸை அள்ளினார் அஷ்வத்.
100 கோடி ரூபாய் வசூல்: படம் வெளியான முதல் நாளிலிருந்தே விமர்சன ரீதியாக கொண்டாடப்பட்டது. அதேபோல் வசூல் ரீதியாகவும் மெகா ரெஸ்பான்ஸை பெற்றது. நாளுக்கு நாள் வசூல் அதிகரித்த சூழலில் தற்போது 100 கோடி ரூபாய் வசூலித்திருக்கிறது. அதனை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினார்கள். மேலும் வரிசையாக இரண்டு 100 கோடி ரூபாய் வசூல் செய்த படங்களை கொடுத்த நடிகர் என்கிற பெருமையையும் பிரதீப் ரங்கநாதன் பெற்றிருக்கிறார். மீண்டும் இந்தக் கூட்டணி அமையும் என இயக்குநரும் உறுதிப்படுத்தியிருக்கிறார்.
பாராட்டிய ரஜினி: இந்நிலையில் எப்போதும் நல்ல படம் வந்தால் அந்தப் படத்தின் இயக்குநரை அழைத்து பாராட்டும் ரஜினிகாந்த், டிராகன் படத்தின் இயக்குநர் அஷ்வத்தையும் தனது வீட்டுக்கு அழைத்து பாராட்டியிருக்கிறார். மேலும் என்ன ரைட்டிங் அஷ்வத், ஃபென்ட்டாஸ்டிக் என்று சொல்லியிருக்கிறார். இதுகுறித்து இயக்குநர் தனது எக்ஸ் தளத்தில் ரஜினியுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, "நல்ல படம் பண்ணனும், படத்தை பார்த்துவிட்டு ரஜினி வீட்டுக்கு கூப்பிட்டு வாழ்த்தி நம்முடைய படத்தை பற்றி பேசவேண்டும். இது இயக்குநர் ஆகணும்னு கஷ்டப்பட்டு உழைக்கும் ஒவ்வொரு உதவி இயக்குநரின் கனவு. அந்த கனவு நிறைவேறிய நாள் இன்று" என குறிப்பிட்டிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











