விஜயகாந்த்திற்கு ஆபரேஷன்...விரைவில் குணமடைந்து கேப்டனாக கர்ஜிக்க ரஜினி வாழ்த்து
சென்னை : தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த்திற்கு ஆபரேஷன் நடைபெற்று, காலில் 3 விரல்கள் அகற்றப்பட்டுள்ளன. இதனால் அவர் விரைவில் குணமடைய வேண்டும் என நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
1970 கள் துவங்கி 2010 ம் ஆண்டு வரை சினிமாவில் நடித்து வந்தவர் விஜயகாந்த். 1979 ம் ஆண்டு இனிக்கும் இளமை என்ற படத்தில் வில்லன் ரோலில் நடித்து சினிமாவிற்கு அறிமுகமானார். தொடர்ந்து பல படங்கள் தோல்வி படங்களாக அமைந்த நிலையில், 1980 ம் ஆண்டு தூரத்து இடி முழக்கம் என்ற படம் விருதை பெற்றது.
எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய சட்டம் ஒரு இருட்டறை என்ற படம் விஜயகாந்த்தின் சினிமா வாழ்க்கையில் மிகப் பெரிய திருப்பு முனையாக அமைந்தது. தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் நூற்றுக்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார் விஜயகாந்த்.

கேப்டன் விஜயகாந்த்
ரஜினி, கமல் கோலோச்சிய காலத்திலேயே அவர்களுக்கு இணையாக பட சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து, அதிக ரசிகர்களை தனக்கென வைத்திருந்தவர் விஜயகாந்த். சினிமாவை தாண்டியும் பலருக்கும் உதவி செய்வது, நடிகர் சங்க தலைவராக இருந்து பல மாற்றங்களை கொண்டு வந்தது ஆகியவற்றால் விஜயகாந்த்தை, கேப்டன் பிரபாகரன் படத்திற்கு பிறகு அனைவரும் கேப்டன் என்றே அன்பாக அழைத்தனர்.

அரசியல் ஆளுமை
பிறகு தேசிய திராவிட முற்போக்கு கழகம் என்ற கட்சியை துவக்கி, ஜெயலலிதா, கருணாநிதி ஆக்டிவ் அரசியலில் இருந்த போதே அரசியலுக்கு வந்தவர் விஜயகாந்த். 2011 ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு, எம்எல்ஏ ஆனதுடன், சட்டசபை எதிர்க்கட்சி தலைவராக அமர்ந்து, அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதாவிடம் நேருக்கு நேராக கேள்வி கேட்டவர் விஜயகாந்த்.

உடல்நல பாதிப்பு
தீவிர அரசியலில் இறங்கியதால் சினிமாவில் இருந்து விலகினார் விஜயகாந்த். 2010 ம் ஆண்டு விருதகிரி என்ற படம் தான் அவர் கடைசியாக நடித்தது. ஆக்டிவ் அரசியலில் இருந்த விஜயகாந்த், கடந்த சில ஆண்டுகளாக உடல்நல பாதிப்பு காரணமாக வீட்டில் ஓய்வில் இருந்து வருகிறார். சமீபத்தில் வெளியான அவரது போட்டோக்கள் அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்தது.

விஜயகாந்த்திற்கு ஆபரேஷன்
விஜயகாந்த் அவ்வப்போது வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வந்தார். அப்படி சமீபத்தில் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஜயகாந்த்திற்கு வழக்கமான பரிசோதனைக்கு பிறகு ஆபரேஷன் மூலம் காலில் இருந்து 3 விரல்கள் அகற்றப்பட்டுள்ளன.

ஏன் என்னாச்சு விஜயகாந்த்திற்கு
அவரது காலில் ரத்த ஓட்டம் சீராக இல்லாததன் காரணமாக ஆபரேசன் செய்து விரல்கள் அகற்றப்பட்டதாக கூறப்படுகிறது. விஜயகாந்த் தற்போது நலமுடன் இருப்பதாகவும், ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் என்றும் கூறப்படுகிறது. இதனால் அவர் விரைவில் குணமடைய பலரும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

கேப்டனாக மீண்டும் வர ரஜினி வாழ்த்து
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில், என் அருமை நண்பர் விஜயகாந்த் அவர்கள் விரைவில் குணமடைந்து பழையபடி கேப்டனாக கர்ஜிக்க வேண்டும் என்று எல்லா வல்ல இறைவனை வேண்டுகிறேன் என வாழ்த்து பதிவிட்டுள்ளார். ரசிகர்கள் பலரும் விஜயகாந்த் குணமடைய வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











