ரஜினிகாந்த்துக்கு இது எத்தனையாவது இன்னிங்ஸ் தெரியுமா? அவர் எப்பவுமே நாட் அவுட் சூப்பர் ஸ்டார்தான்!
சென்னை: அவ்வளவுதான்.. வயசாகிடுச்சு.. எத்தனை நாளைக்குத்தான் அந்த குதிரையும் ஓடும்.. இப்படியாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சினிமாவில் இருந்து விலகுகிறார் அல்லது ஓய்வு பெறுகிறார் என்ற பேச்சு நேற்றில் இருந்தோ, அல்லது கடந்த வாரத்தில் இருந்தோ மட்டும் உலா வரவில்லை. இது கடந்த பல ஆண்டுகளாகவே தமிழ் சினிமாவில் பரவி வரும் தகவல். ஆனால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது சினிமா வாழ்க்கையில் தோல்வியை சந்தித்தாலும் மார்க்கெட்டில் முதல் இடத்தில் நின்று கொண்டுதான் தோல்வியைச் சந்தித்துள்ளாரே தவிர, தோல்வியால் முதல் இடத்தில் இருந்து இரண்டாவது இடத்திற்கு சரிந்தது கிடையாது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது தனது 172 வது படமான ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார். தமிழ் சினிமாவில் இவர் அறிமுகமாகி இந்த ஆண்டுடன் 50 ஆண்டுகள் ஆகிறது. மேலும் அவருக்கும் தற்போது 75 வயது ஆகிறது. இதனால் இந்த ஆண்டு கூலி மற்றும் ஜெயிலர் 2 படத்துடன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சினிமாவில் இருந்து விலகவுள்ளதாக பேச்சுகள் எழுந்தது. அதற்கு அவரது மனைவி லதா ரஜினிகாந்த் மறுப்பு தெரிவிக்கவும் செய்தார். அதன் பின்னரே அவரது ரசிகர்கள் கொஞ்சம் நிம்மதி அடைந்தார்கள். இது எல்லாம் ஒரு புறம் இருக்கட்டும். சரி ரஜினிகாந்த் ஏன் சினிமாவில் இருந்து விலக வேண்டும் என்று இட்டுக் கட்டி விடுகிறார்கள். இது மற்ற நடிகர்களுக்கு நடப்பதில்லையே ஏன்?
ரஜினிகாந்த் இதற்கு முன்னர் அவ்வப்போது சினிமாவில் இருந்து விலக வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. ஆனால் அந்த சூழலை எல்லாம் எதிர் கொண்ட பின்னர், மீண்டும் சினிமாவில் நடித்து வருகிறார். இதில் அவரது உயிருக்கே ஆபத்தான சூழல் எல்லாம் இருந்தும், அமெரிக்காவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற பின்னரும் கூட ஆக்ஷன் படங்களில் நடித்துக் கொண்டு உள்ளார்.

ஆன்மிகம்: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மறைந்த நடிகர் சிவாஜிக்கு மிகவும் நெருக்கமானவராக மாற காரணம், ஒரு கட்டத்தில் சினிமாவே வேண்டாம் ஆன்மிகத்தில் முழுக் கவனம் செலுத்தலாம் என்ற முடிவெடுத்துவிட்டார் என்றும், அதன் பின்னர் சிவாஜியின் அறிவுரையின் படி, மீண்டும் சினிமாவுக்குள் கவனம் செலுத்தத் தொடங்கினார் என்றும் கூறப்படுகிறது. ரஜினிகாந்த் ஆன்மீகத்தில் முழுக்கவனம் செலுத்திக் கொண்டு இருந்த காலகட்டத்தில் பலரும் இனி ரஜினிகாந்த் சாப்டர் குளோஸ். இனி அவர் சினிமா பக்கம் எட்டிப் பார்க்க மாட்டார் என்று பேசியவர்கள் பலர். அவர்களில் சிலர் தான் இன்றைக்கும் சூப்பர் ஸ்டார் குறித்து உண்மைக்கு மாறான கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்களா என ரஜினி ரசிகர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.
படையப்பா: அதன் பின்னர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படையப்பா படத்துடன் சினிமாவில் இருந்து விலகுகிறார் என்ற தகவல் வேகமாக பரவியது. இது அவரது ரசிகர்களுக்கே பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. இதற்கு இன்னொரு காரணம், ரஜினிகாந்த் அரசியலில் கால் பதிக்கவுள்ளார். எனவே படையப்பா படம் தான் அவருக்கு கடைசி படம் என்று கூறினார்கள். 2001 ஆம் ஆண்டு தமிழ்நாடு, சட்டமன்ற பொதுத் தேர்தலை எதிர்கொள்ள வேண்டி இருந்ததால், ரசிகர்கள் மத்தியில் பரவிய கருத்துக்கும், அப்போதைய காலகட்ட சம்பவங்களும் ஒத்துப்போனதால் ரஜினி சினிமாவை விட்டு விலகுகிறார் என்று பலரும் நம்பினார்கள். ஆனால் ரஜினி சினிமாவை விட்டு விலகவில்லை.
அரசியல்: அதேபோல் 2002ஆம் ஆண்டு இவர் நடிப்பில் பாபா படம் வெளியானது. இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் மீண்டும் ஆட்சியைத் தீர்மானிக்கும் சக்தி படைத்தவராக நடித்திருந்ததால், அவர் அரசியலுக்கு வருவதைத்தான் இப்படி தனது படத்தின் மூலம் கூறுகிறார் என்று பலரும் தெரிவித்தார்கள். ஆனால் ரஜினிகாந்த் சினிமாவில் தொடர்ந்து நடித்து வந்தார். அதே நேரத்தில் அவர் அரசியல் பக்கம் திரும்பிக் கூட பார்க்கவில்லை. அதன்பின்னர்தான் இவர் நடிப்பில் கடந்த 2010ஆம் ஆண்டு வெளியான படம் எந்திரன். இந்த படத்தில் நடித்த பின்னர் சூப்பர் ஸ்டாருக்கு உடல்நலக் கோளாறு ஏற்பட்டு அமெரிக்காவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அமெரிக்காவில் அனுமதி: சூப்பர் ஸ்டார் அமெரிக்காவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் பலரும் அதிர்ச்சி அடைந்தனர். குறிப்பாக அவரது ரசிகர்கள் அவருக்கு என்ன ஆச்சு? எப்படி இருக்கிறார், என்றெல்லாம் அனுதினமும் கேட்டுக் கொண்டு இருந்தார்கள். கோவில்களில் தினமும் பூஜைகள் செய்வது, அவருக்காக தீ மிதிப்பது, மண் சோறு சாப்பிடுவது, அக்னி குடம் எடுப்பது, அவர் நலம் பெற வேண்டி யாகம் நடத்துவது என நாளுக்கு நாள் சூப்பர் ஸ்டாரின் ரசிகர்கள் அவர்களின் அன்பை வெளிக்காட்டி வந்தார்கள்.
ரசிகர்கள் அன்பு: அமெரிக்க மருத்துவமனையில் இருந்து அறுவை சிகிச்சை முடிந்து, இந்தியாவிற்கு திரும்பிய பின்னர் ரசிகர்கள் இவருக்கு அளித்த அன்பை நினைத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முற்றிலும் நெகிழ்ந்து போய்விட்டார். அதிலும் அவரது ரசிகர்கள் அவர் நலம் பெற வேண்டி செய்த வேண்டுதல்களை எல்லாம் நினைத்து ஆனந்த கண்ணீரே வடித்து விட்டார். சிகிச்சை முடிந்து சில மாதங்களுக்குப் பின்னர் மீண்டும் நடிக்கத் தொடங்கினார் சூப்பர் ஸ்டார்.

கட்சி: கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற பொதுத் தேர்தலை எதிர்கொள்ள திட்டமிட்ட சூப்பர் ஸ்டார், அதன் பின்னர் தனது உடல்நிலையை காரணமாக கட்சி தொடங்காமலே அரசியலில் இருந்து விலக நேரிட்டது. சூப்பர் ஸ்டாரின் தனிப்பட்ட வாழ்க்கை, குறிப்பாக உடல்நிலை, அதன் பின்னர் அரசியல் என பலவும் ஏற்ற இறக்கங்களைச் சந்தித்துள்ளது. அதேபோல் அவரது சினிமா வாழ்க்கையும் ஏற்ற இறக்கங்களை சந்தித்துள்ளது. ஆனால் சினிமாவில் இன்றைக்கும் அவர்தான் நம்பர் 1. அவர்தான் சூப்பர் ஸ்டார்.
மார்க்கெட்: தமிழ் சினிமாவில் இருந்து இவர் விலகுகிறார் என்ற முதன் முதலாக தகவல்கள் உலா வந்த காலகட்டத்திற்கு பின்னர் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, சில வெற்றிகளை கொடுத்து, அதன் பின்னர் சரிவைச் சந்தித்து, சினிமாவில் இருந்தே விலகிய, அல்லது சினிமாவில் தனக்கு வாய்ப்புக்காக காத்துக் கொண்டு இருக்கும் நடிகர்கள் பலர் உள்ளார்கள். ஆனால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த 50 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் அவரும் உயர்ந்து கொண்டே இருக்கிறார், தமிழ் சினிமா மார்க்கெட்டையும் உயர்த்திக் கொண்டே இருக்கிறார்.

ஓடுகிற குதிரை: இத்தனை ஆண்டுகால சினிமா வாழ்க்கையில் அவருக்கே கூட சினிமாவில் இருந்து விலகலாம் என்ற எண்ணம் பலமுறை வந்திருக்கலாம். அதில் இருந்து அவரே கூட தன்னைத் தானே சமாதானப்படுத்திக் கொண்டு ரசிகர்களுக்காக நடிக்க முடிவு எடுத்திருக்கலாம். எனவே, இது எத்தனையாவது இன்னிங்ஸ் என்று அவருக்குத்தான் தெரியும். தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த் அன்றும், இன்றும், என்றும் அவர் மட்டுமே சூப்பர் ஸ்டார். அவர் என்றைக்கும் நாட் - அவுட் பேட்ஸ்மேன் போல நாட் - அவுட் சூப்பர் ஸ்டார். இவரோடு ஓடிய பல குதிரைகள் சினிமாவில் இருந்தே கிட்டத்தட்ட விலகி விட்ட நிலையில், தொடர்ந்து ஓடுகிற குதிரையை ஓய்வெடுக்கச் சொல்வதில் அவர்களுக்கு என்ன லாபமோ?


Click it and Unblock the Notifications











