கற்றது கையளவு.. கல்லாதது உலகளவு.. பாபா வசனத்தை சொல்லி காந்தாரா படத்தை பாராட்டிய ரஜினிகாந்த்!
சென்னை: காந்தாரா திரைப்படம் இந்திய சினிமாவின் மாஸ்டர்பீஸ் என நடிகர் ரஜினிகாந்த் பாராட்டி உள்ளார்.
கன்னட இயக்குநரும் நடிகருமான ரிஷப் ஷெட்டி எழுதி, இயக்கி இரு வேடங்களில் நடித்துள்ள காந்தாரா திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய வசூல் சாதனையை படைத்து வருகிறது.
இந்த ஆண்டு கர்நாடகாவில் கேஜிஎஃப் 2 படத்தின் வசூல் சாதனையையே இந்த படம் முறியடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

உரிமைக்குரல்
ஆதிக்குடிகளின் உரிமைக்குரலாகவே காந்தாரா திரைப்படம் உருவாகி உள்ளது. பூதகோல நடனம் ஆடுபவராக ரிஷப் ஷெட்டி படத்தில் ருத்ர தாண்டவம் ஆடி உள்ளார். அரசர் கொடுத்த நிலத்தை அபகரிக்க நினைக்கும் அவரது வம்சாவளியை சேர்ந்த ஒருவர் சிறுதெய்வம் கொடுக்கும் சாபத்தால் ரத்தம் கக்கி சாகும் நிலையில், அதன் பின்னர் வன அதிகாரிகள் அந்த மக்களை விரட்டியடிக்க போடும் திட்டமும் அதற்கு எதிராக நாயகன் ரிஷப் ஷெட்டி போராடுவதும் தான் இந்த காந்தாரா படத்தின் கதை.

குறைவான பட்ஜெட்டில் தரமான படம்
வெறும் 15 முதல் 18 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இப்படியொரு தரமான படத்தை எடுத்துக் காட்ட முடியும் என இயக்குநர் ரிஷப் ஷெட்டி நிரூபித்துள்ளார். படத்தில் அவர் சாமியாடும் அந்த காட்சிகள் தான் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி பிரம்மிக்க வைக்கிறது. அதிலும், அந்த கிளைமேக்ஸ் காட்சிகள் எல்லாமே கூஸ்பம்ப்ஸ்க்கு பஞ்சமே இல்லை.

200 கோடி வசூல்
20 கோடிக்கும் குறைவாக உருவான காந்தாரா திரைப்படம் யாருமே எதிர்பார்க்காத வகையில் உலகம் முழுவதும் 200 கோடி வசூலை பெற்று இமாலய சாதனை புரிந்துள்ளது. கன்னட திரையுலகில் இந்த ஆண்டு வெளியான கேஜிஎஃப் 2 திரைப்படம் உலகளவில் 1100 கோடி வசூல் செய்த நிலையில், அதன் கர்நாடக வசூலையே காந்தாரா பின்னுக்குத் தள்ளியுள்ளது தான் மிகப்பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது.

ரஜினி பாராட்டு
இந்நிலையில், காந்தாரா திரைப்படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த், காந்தாரா இந்திய சினிமாவின் மாஸ்டர்பீஸ் என நடிகர் ரஜினிகாந்த் பாராட்டி உள்ளார்; நடிகராக, எழுத்தாளராக, இயக்குநராக அசத்திட்டீங்க ரிஷப் ஷெட்டி என்றும் ஒட்டுமொத்த படக்குழுவினரின் உழைப்பு பெரியது என புகழ்ந்து ட்வீட் போட்டுள்ளார்.

கற்றது கையளவு கல்லாதது உலகளவு
"The unknown is more than the known"- கற்றது கையளவு.. கல்லாதது உலகளவு என பாபா படத்தின் பஞ்ச் வசனத்தை போட்டு நடிகர் ரஜினிகாந்த் பாராட்டியிருப்பது காந்தாரா படக்குழுவினரை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது. ரஜினிகாந்தின் ட்வீட்டுக்கு கீழ் ஏகப்பட்ட ரசிகர்கள் காந்தாரா படத்தையும் நல்ல படங்களை பாராட்டும் ரஜினிகாந்தின் உள்ளத்தையும் பாராட்டி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











