ரஜினியின் ராஜா சின்ன ரோஜா கார்ட்டூன் உருவான விதம்… 90ஸ் கிட்ஸ்களின் நாஸ்டாலஜியா கொண்டாட்டம்
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'ராஜா சின்ன ரோஜா' திரைப்படம் வெளியாகி 33 ஆண்டுகள் கடந்துவிட்டன.
ஏவிஎம் தயாரிப்பில் எஸ்பி முத்துராமன் இயக்கிய இந்தப் படத்தில் ரஜினி கார்ட்டூன்களுடன் நடனமாடி கலக்கியிருப்பார்.
இந்நிலையில், ராஜா சின்ன ரோஜா படத்தில் அனிமேஷன் மூலம் கார்ட்டூன்கள் பயன்படுத்தப்பட்டது எப்படி என்ற ரகசியம் தற்போது வெளியாகியுள்ளது.

ரஜினியின் ராஜா சின்ன ரோஜா
சூப்பர் ஸ்டார் ரஜினியை குழந்தைகளுக்கும் கொண்டுபோய் சேர்த்த படம், 'ராஜா சின்ன ரோஜா.'.ஏவிஎம் தயாரிப்பில் எஸ்பி முத்துராமன் இயக்கிய இந்தப் படத்தில், பேபி ஷாலினி உள்ளிட்ட ஐந்து சிறுவர்களோடு ரஜினி நடித்திருந்தார். ராஜா சின்ன ரோஜா படத்தில் எந்த ஹீரோவுக்கும் கிடைத்திடாத பெருமை ரஜினிக்கு கிடைத்தது. இந்தப் படத்தில் இடம்பெற்ற ஒரேயொரு பாடல் காட்சிக்காக 84,000 அனிமேஷன் ஓவியங்கள் வரையப்பட்டு படமாக்கப்பட்டன. முதல் முறையாக, யானை, குரங்கு, முயல், மான், கரடி, நரி, அணில், இரண்டு குயில்கள், புறா, வண்ணத்துப் பூச்சிகள், குருவிகள், வண்டு ஆகிய கார்ட்டூன் பாத்திரங்களுடன் ரஜினி நடித்தார். 'ராஜா சின்ன ரோஜாவோடு காட்டுப் பக்கம் வந்தானாம்' என்ற அந்தப் பாடல், பட்டித்தொட்டியெங்கும் ஹிட் அடித்தது.

காட்டுக்குள் சுற்றுலா
வன விலங்குகளை காட்டுவதற்காக குழந்தைகளை காட்டுக்குள் சுற்றுலா கூட்டிக்கொண்டு செல்வார் அப்போது ரஜினியையும் குழந்தைகளையும் முயல், நரி, கரடி போன்ற விலங்குகள் வரவேற்கும். இறுதியாக இந்தப் பாடல் சில நீதிக் கதைகளுடன் குழந்தைகளுக்கு கருத்து சொல்வதாக முடிவடையும். குழந்தைகள் மட்டுமின்றி அனைத்து தரப்பு ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்ற இந்தப் பாடல் அனிமேஷன் தொழில்நுட்பத்தில் சூப்பராக உருவாகி இருந்தது. இந்தப் படத்தின் கதை, வசனத்தை பஞ்சு அருணாசலம் எழுத, பாடல்களை வைரமுத்து எழுத, சந்திரபோஸ் இசை அமைத்திருந்தார்.

கார்ட்டூன் உருவான கதை
இந்நிலையில், இந்தப் பாடலுக்கான கார்ட்டூன் அனிமேஷனை மும்பையின் பிரபலமான அனிமேஷன் ஓவியரான ராம்மோகனிடம் கொடுக்கப்பட்டதாம். அப்போது அவர் ஹாலிவுட் ஜப்பானிய 2டி அனிமேஷன் படங்களுக்கு பிஸியாக வரைந்துகொண்டிருந்தார். இதனால் ராம்மோகனின் குழுவிடம் இந்தப் படத்துக்குத் தேவையான வேலையை வாங்கமுடியுமா என்பதில் ஏவி.எம். சரவணனுக்கு சந்தேகம் ஏற்பட்டதாம். அதனால் எஸ்பி முத்துராமனிடம் "எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை, அனிமேஷன் சிறப்பாக எடுக்க வேண்டும். எனவே அனிமேஷன் நிபுணர் ராம்மோகனை மும்பை சென்று சந்தித்து எப்படியாவது அவரைச் சம்மதிக்க வைத்துவிட்டு அதன்பிறகு பாடல் காட்சியைப் படம் பிடியுங்கள்"என்று கூறினாராம்..

மறுத்த ராம் மோகன்
ராம்மோகனை சந்தித்து, எஸ்பி முத்துராமன் விசயத்தை சொல்ல, நீங்கள் சொல்லும் பாடலுக்கு மட்டுமே 84 ஆயிரம் படங்கள் வரைய வேண்டும். எங்கள் குழுவுக்கு அதற்கான நேரமில்லை" என்று மறுத்தாராம். இந்தப் பாடலை முதலில் ஷூட்டிங் செய்து உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன். நீங்கள் அனிமேஷன் ஓவியங்களை வரையத் தொடங்கிவிடுங்கள் என்றாராம். அதன்பின்னர் ரஜினிதான் ஹீரோ என்று முத்துராமன் சொன்னதும், கண்டிப்பாக செய்து தருகிறோம் என்று ஒப்புக்கொண்டாராம். இந்தப் பாடலுக்காக 84 ஆயிரம் கார்ட்டூன்கள் வரையப்பட்டதாகவும், கம்ப்யூட்டர் கிராபிக்ஸ்கள் எதுவும் பயன்படுத்தவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த தகவலை, ஏவிஎம் நிறுவனத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான அருணா குகன் தனது டிவீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவு தற்போது ரசிகர்களிடம் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications











