ரஜினி அரசியலுக்கு வராததற்கு இதுதான் காரணமா?.. அவரே வெளியிட்ட தகவல்.
சென்னை: தான் ஏன் அரசியலுக்கு வரவில்லை என்பது குறித்து நடிகர் ரஜினிகாந்த் முதல்முறையாக மனம் திறந்து கூறியிருக்கிறார்.
ரஜினிகாந்த் ரசிகர்களாலும், திரையுலகினராலும் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர். அபூர்வ ராகங்களில் ஆரம்பித்த அவரது பயணம் ஜெயிலர் வரை தொடர்ந்துகொண்டிருக்கிறது. எத்தனை ஹீரோக்கள் வந்தாலும் அவர்களுக்கு ஈடு கொடுத்து இன்றுவரை நடித்துவரும் ரஜினிகாந்த்திற்கு இந்தியாவில் மட்டுமின்றி உலகம் முழுவதும் பலர் ரசிகர்களாக இருக்கின்றனர்.

அரசியல் களத்தில் ரஜினிகாந்த்
பாட்ஷா பட ரிலீஸ் சமயத்தில் ஜெயலலிதாவுக்கும், ரஜினிக்கும் மோதல் எழ ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்ற கேள்வி முதல்முதலாக எழுந்தது. அதற்கேற்றபடி 1996ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு ரஜினிகாந்த் தனது ஆதரவை வெளிப்படையாக கூறினார். அன்றிலிருந்து ரஜினி தீவிர அரசியலுக்கு வர வேண்டும் என அவரது ரசிகர்கள் கோரிக்கை வைக்க ஆரம்பித்தனர். ஆனால் அதுகுறித்து எந்த தெளிவான அறிவிப்பையும் அவர் வெளியிடவில்லை.

போரை தொடங்க முடிவு செய்த ரஜினிகாந்த்
ஆண்டவனின் அருளும், நேரமும் வரும்போது அரசியலுக்கு வருவேன் என மேம்போக்காக சொல்லிவந்த ரஜினிகாந்த், கடந்த 2017ஆம் ஆண்டு ராகவேந்திரா மண்டபத்தில் தனது ரசிகர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், போரை தொடங்கும் நேரம் வந்துவிட்டதாகவும், தான் அரசியலுக்கு வருவது உறுதி என்றும் கூறினார். மேலும், தனது அரசியல் ஆன்மீக அரசியலாக இருக்கும் என்றும் அதிரடியாக அறிவித்தார். இதனால் ரஜினியின் ரசிகர்கள் உற்சாகமடைந்தனர்.

தனது முடிவிலிருந்து பின்வங்கிய ரஜினிகாந்த்
சூழல் இப்படி இருக்க கடந்த 2021ஆம் ஆண்டு ஒரு அறிவிப்பை வெளியிட்ட ரஜினிகாந்த், அரசியலுக்கு வரப்போவதில்லை என்பதை திட்டவட்டமாக அறிவித்தார். அரசியலில் நுழைந்து தனது சாம்ராஜ்ஜியத்தை உருவாக்குவார் என எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு அது பேரிடியாக இருந்தது. இருந்தாலும் அவர் அரசியலுக்கு வந்தே தீர வேண்டும் என அவரது தீவிர ரசிகர்கள் கூறினர். ஆனால் தனது முடிவிலிருந்து பின்வாங்கப் போவதில்லை என்பதையும் அவரது அடுத்தடுத்த செயல்கள் உணர்த்தின. இதனால் ரஜினி ரசிகர்களும் தங்களது முடிவிலிருந்து சிறிது சிறிதாக மாற தொடங்கினர்.

அரசியலுக்கு வராததற்கு காரணம் என்ன?
இந்நிலையில் மருத்துவமனை ஆண்டு விழா ஒன்றில் கலந்துகொண்ட ரஜினிகாந்த் அரசியலுக்கு ஏன் வரவில்லை என்பது குறித்து காரணம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில், "நான் அரசியலுக்கு வரலாம் என நினைத்தபோது எனது உடல்நிலை சரியில்லாமல் போனது. சிறுநீரக பிரச்னை காரணமாக பல மருந்துகளை எடுத்துக்கொண்டேன். அது மட்டுமின்றி கொரோனாவும் எனக்கு வந்தது.

ரஜினிக்கு மருத்துவர் செய்த அறிவுரை
இப்படிப்பட்ட சூழலில் எனது மருத்துவர் என்னிடம். 'நீங்கள் ரெஸ்ட் எடுத்தே ஆக வேண்டும் . ஒரு மருத்துவர் என்ற முறையில் உங்களை வெளியே செல்ல அனுமதிக்கமாட்டேன் என கூறினார். அதற்கு, 'நான் அரசியலுக்கு வருவதாக கூறிவிட்டேன். இப்போது வரவில்லை என்று சொன்னால் பயந்துவிட்டேன் என பேசுவார்கள்' என்றேன். அதற்கு என் மருத்துவர், அரசியலை விட உங்கள் உடல்நிலைதான் முக்கியம். வேண்டுமானால் உங்களுக்காக பத்திரிகையாளரை சந்தித்து நான் பேசுகிறேன். இதில் எதுவும் பொய் சொல்லவில்லையே' என்றார். இதனையடுத்துதான் நான் அரசியலுக்கு வரவேண்டாம் என்ற முடிவை எடுத்தேன்" என பேசியிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











