போரட்டத்தை முடித்துக் கொள்ளுங்கள்.. சமூக விரோதிகளுக்கு இடம் தராதீர்கள்!- ரஜினிகாந்த்
சென்னை: மத்திய மாநில அரசுகள் மீது நம்பிக்கை வைத்து மாணவர்கள் அமைதி காக்க வேண்டும். போராட்டத்தை முடித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று நடிகர் ஜினிகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னையில் வரலாறு காணாத வகையில் நடந்த ஜல்லிக்கட்டு ஆதரவுப் போராட்டத்தின் இறுதி நாளான இன்று, திடீரென வன்முறை வெடித்தது.

மெரினாவிலிருந்து வெளியேற மாணவர்களும் பொதுமக்களும் மறுத்தார்கள். மாணவர்களை வலுக்கட்டாயமாக போலீசார் அகற்றினர். பெண்கள், முதியவர்கள் என்று பார்க்காமல் தாக்க ஆரம்பித்தனர் போலீசார். இதனால் அங்கு அசாதாரண சூழல் ஏற்பட்டது. சென்னை முழுவதும் பரபரப்பான சூழல் நிலவியது.
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து ரஜினி வெளியிட்டுள்ள அறிக்கை:
இந்திய சரித்திரத்தில் தங்க எழுத்துக்களால் எழுதக் கூடிய ஜல்லிக்கட்டு தடைக்கு எதிராக திரண்ட மாணவ மாணவியர்களும் இளைஞர்களும் தாய்க்குலமும் அனைத்து தமிழ் மக்களும் நடத்திய, இதுவரை வரலாறு கண்டறியாத, அமைதியான, ஒழுக்கமான அறவழிப் போராட்டத்தை நடத்தி உலகிலுள்ள அனைவரின் கவனத்தையும் ஈர்த்து, பாராட்டைப் பெற்று வெற்றி மாலையணியும் இந்த நேரத்தில் இப்போது நடந்துகொண்டிருக்கும் சம்பவங்களைப் பார்த்து நான் மிகவும் வேதனையடைகிறேன்.
மத்திய, மாநில அரசாங்கங்களிடமிருந்தும், பெரிய பெரிய நீதியரசர்கள், வக்கீல்களிடமிருந்தும் நிரந்தர ஜல்லிக்கட்டுக்கு இவ்வளவு உறுதி கூறிய பின்பு, அதற்கு கெளரவம் கொடுத்து அவர்கள் கூறிய நாள்கள் வரை அமைதி காப்பதுதான் கண்ணியமான செயலாகும்.
இப்போது சில சமூக விரோதிகள், இவ்வளவு போராடிய உங்கள் உழைப்புக்கும், முயற்சிக்கும், நீங்கள் சம்பாதித்த நற்பெயருக்கும், இவ்வளவு நாட்கள் உங்கள் போராட்டத்துக்கு உறுதுணையாகவும் பாதுகாப்பாகவும் இருந்த காவல் துறையினருக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்படுவதற்கு நீங்கள் இடம் கொடுக்காமல், உடனே அமைதியாக இந்த அறவழிப் போராட்டத்தை முடித்துக்கொள்ள வேண்டும் என்று நான் தாழ்மையுடனும் பணிவுடனும் கேட்டுக் கொள்கிறேன்," என்று கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications