நான் ரவிக்குமாருக்கு கன்டிஷன் போட, அவர் பதிலுக்கு ஒரு கன்டிஷன் போட்டார்: ரஜினி
சென்னை: லிங்கா படம் பற்றி நான் கே.எஸ். ரவிக்குமாருக்கு ஒரு கன்டிஷன் போட பதிலுக்கு அவரும் ஒரு கன்டிஷன் போட்டார் என லிங்கா இசை வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள லிங்கா படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்டவர்கள் ரஜினியை புகழ்ந்து பேசினார்கள்.
விழாவில் ரஜினி பேசுகையில்,

ஏக்கம்
உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது இனியும் நான் பழையபடி நடிக்க முடியுமா என ஏங்கினேன். முடியாது என நினைத்தேன். பின்னர்
இரண்டரை ஆண்டுகள் உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்தேன். நடிக்கவே முடியாது என்று நினைக்கையில் கோச்சடையானில் நடித்தேன்.

சௌந்தர்யா
கோச்சடையான் முற்றிலும் வித்தியாசமான படம். படத்தின் சுமை பாவம் சௌந்தர்யா மீது விழுந்தது. பாவம் அது அவ்வளவு பெரிய மலையை வைத்து கஷ்டப்பட்டது.
ஈராஸ், முரளி மனோகர் உள்ளிட்டோரால் தான் படம் ரிலீஸானது. இந்த படம் மூலம் சௌந்தர்யா பணத்தை இழந்தாலும் அனுபவத்தை பெற்றார்.

கோச்சடையான்
கோச்சடையானை பார்த்த பலர் என்னிடம் என்ன சார் ஒரு காட்சியிலாவது வருவீர்கள் என்று நினைத்தால் இப்படி செய்துவீட்டீர்களே என்றனர். தற்போது நீங்கள் எப்படி உள்ளீர்கள் என்பதை பார்க்க ஆசைப்பட்டு வந்து முடியவில்லை என்றார்கள். அப்போது தான் உடனே வேறு ஒரு படத்தில் நடிக்க முடிவு செய்தேன்.

ரவிக்குமார்
படம் பண்ண வேண்டும் என்று நினைக்கையில் தான் கே.எஸ். ரவிக்குமார் தன்னிடம் ஒரு கதை இருப்பதாகக் கூறி அதை கேட்கிறீர்களா என்றார். அது என் உதவி இயக்குனர் பொன். குமரனின் கதை அதனால் அதை அவரே சொல்வார் என்றார். கதையை கேட்டவுடன் பிடித்துவிட்டது.

6 மாதம்
இந்த கதையில் நடிக்கிறேன் மே மாதம் துவங்கி 6 மாதத்தில் படத்தை முடித்து தீபாவளிக்கு வெளியிட முடியுமா என்று ரவிக்குமாரிடம் கேட்டேன். அதற்கு அவர் இரண்டு நாள் டைம் கேட்டார். அவர் சுதீப்பை வைத்து படம் எடுப்பதாக இருந்தார். அதனால் அவரிடம் பேசி அனுமதி வாங்கிவிட்டு வந்தார்.

வெங்கடேஷ்
கர்நாடகாவில் ஆபத்பாந்தவன் போன்றவர் ராக்லைன் வெங்கடேஷ். எனக்கு நிறைய உதவி செய்திருக்கிறார். நான் நன்றியை மறக்காதவன். அவரை அழைத்து என் படத்தை தயாரிக்க முடியுமா, 6 மாதத்தில் முடிக்க வேண்டும் என்றேன். தேதியை சொல்லுங்க போதும் நான் தயாரிக்கிறேன் என்றார்.

ரஹ்மான்
ரஜினி சார் நீங்க எனக்கு ஒரு கன்டிஷன் போட்டீங்க. எனக்கும் ஒரு கன்டிஷன் உண்டு, படத்திற்கு இசை ஏ.ஆர்.ரஹ்மான், பாடல்கள் வைரமுத்து, கேமிரா ரத்னவேலு, செட் சாபு சிரில் தான் என்று கூறினார். இது எல்லாம் உங்கள் விருப்பம் அதில் நான் தலையிட மாட்டேன் என்றேன்.

குழந்தை மாதிரி
படப்பிடிப்பு தளத்தில் ரவிக்குமார் என்னை ஒரு குழந்தை போன்று பார்த்துக் கொண்டார். என்னை கவனிக்க என்னை சுற்றி எப்பொழுதும் 30 பேர் இருந்தார்கள். அவர்களின் அன்புக்கெல்லாம் நான் என்ன செய்யப் போகிறேன் என தெரியவில்லை. படத்தை டிசம்பர் 12ம் தேதி ரிலீஸ் செய்யத் தேவையான வேலைகள் நடந்து வருகிறது என்றார் ரஜினி.


Click it and Unblock the Notifications











