இது எப்டி இருக்கு.. ரஜினியின் தெறிக்கவிட்ட அனல் பறக்கும் எவர்க்ரீன் பஞ்ச் டயலாக்ஸ்!
சென்னை: ரஜினியின் 70வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படும் நிலையில் அவரது பிரபலமான பஞ்ச் டயலாக்குகளை காணலாம்.
நடிகர் ரஜினிகாந்த் என்றதும் சட்டென நினைவுக்கு வருவது அவரது ஸ்டைலும், பஞ்ச் வசனங்களும்தான். ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படுவதற்கு முக்கிய காரணங்களில் அதுவும் ஒன்று.
ரஜினியின் ஒவ்வொரு படத்திலும் ஒரு பஞ்ச் டயலாக் நிச்சயம் இடம் பெற்றுவிடும். படம் ரிலீஸாவதற்கு முன்பே அவரது பஞ்ச் டயலாக்குகள் பட்டி தொட்டியெங்கும் ரீச் ஆகிவிடும்.

16 வயதினிலே..
ரஜினி வில்லனாக நடித்த படத்திலேயே பஞ்ச் டயலாக் பேசி தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர். முதல் முறையாக அவர் பஞ்ச் வசனம் பேசிய படம் 16 வயதினிலே.

இது எப்டி இருக்கு..
பரட்டை கதாப்பாத்திரத்தில் வில்லனாக நடித்திருப்பார் ரஜினி. அதில் ஒவ்வொரு வில்லத்தனத்திற்கு பிறகும் இது எப்டி இருக்கு.. என கேட்டு பீடியை பற்ற வைப்பார். அதற்கு பத்த வச்சுட்டீயே பரட்ட என கவுன்டர் மணியின் கவுன்டரும் இருக்கும்.. இன்றும் ரஜினி ரசிகர்கள் கொண்டாடும் டயலாக் அது..

சீவிடுவேன்
அடுத்து முரட்டுக்காளை படத்தில் அவர் பேசிய சீவிடுவேன் டயலாக்கும் பெரும் பிரபலம். எதிரிகளை பார்த்து ரஜினி பேசும் இந்த டயலாக்குக்கு இன்றும் மவுஸ்தான்.

மல டா அண்ணாமல..
இதேபோல் அண்ணாமலை படத்தில் மல டா அண்ணாமல.. என்ற டயலாக்கும், நண்பராக இருந்த வில்லனாக மாறிய சரத்பாபுவிடம் பேசும் அசோக்.. இந்த நாள உன் காலண்டர்ல குறிச்சு வச்சுக்கோ என்று பேசும் டயலாக்கும் ஆண்டுகள் கடந்தும் நிலைத்து நிற்கிறது.

ஒரு தடவ சொன்னா..
அடுத்து பாட்ஷா.. ரஜினியின் சினிமா கேரியரில் அவரை உச்சத்துக்கு கொண்டு சென்ற படம். பாட்ஷா படத்தில் ஒவ்வொரு காட்சியும் டயலாக்கும் மாஸ்தான். ரிலீஸ் ஆகி 19 ஆண்டுகள் ஆனபோதும் ரஜினி ரசிகர்கள் இன்றும் கொண்டாடும் படம். அதில் அவர் பேசும் நான் ஒரு தடவ சொன்னா நூறு தடவ சொன்னா மாதிரி என்ற டயலாக் வேறலெவல்.

எப்போ வருவேன்..
முத்து படமும் ரஜினிக்கு வணிக ரீதியாக பெரும் வெற்றியை பெற்றுத்தந்த படம். அந்தப் படத்தில் ஹீரோயிசம், காமெடி என கலக்கியிருப்பார். அந்தப் படத்தில் அவர் பேசும் நான் எப்போ வருவேன் எப்படி வருவேன்னு யாருக்கும் தெரியாது. ஆனா வர வேண்டிய நேரத்துல கரெக்டா வருவேன் என்ற டயலாக் அவர் அரசியல் பிரவேசத்துக்கு அச்சாரமிட்டது.

ஆண்டவன் சொல்றான்
அருணாச்சலம் படத்திலும் பஞ்ச் டயலாக்குக்கு பஞ்சமில்லாமல் இருந்தது. அந்தப் படத்தில் ஆண்டவன் சொல்றான் அருணாச்சலம் முடிக்கிறான் என்ற டயலாக் பெரும் பிரபலமானது.

என் வழி தனி வழி..
அடுத்து படையப்பா.. கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் உருவான இப்படம், உச்ச நடிகரான ரஜினியை மேலும் உயரத்திற்கு கொண்டு சென்றது. அந்தப்படத்தில் அவர் என் வழி தனி வழி.. சீண்டாதே.. என்ற டயலாக்கும் அதிகமா ஆசைப்படுற ஆம்பளையும், அதிகமாக கோபப்படுற பொம்பளையும் நல்லா வாழ்ந்ததா சரித்திரமே இல்ல.. என்ற டயலாக்கும் அப்லாஸை அள்ளியது.

சும்மா அதிருதுல்ல..
சிவாஜி.. பிரமாண்ட இயக்குநர் ஷங்கரின் இயக்கத்தில் முதல் முறையாக ரஜினி இணைந்து நடித்த படம். அந்தப் படத்தில் இடம் பெற்றிருந்த பேர கேட்டாலே சும்மா அதிருதுல்ல.. பன்னிங்கதான் கூட்டமா வரும்.. சிங்கம் சிங்கிளாதான் வரும் போன்ற டயலாக்குகளும் பெரும் ஹிட் அடித்தது.

யாராலும் அழிக்க முடியாது
சங்கரின் கூட்டணியில் வெளியான இரண்டாவது படமான எந்திரன் படத்தில் ரோபோ ரஜினி.. ம்மே.. என ஆடு போல் கத்தும் காட்சி வைரலானது. அதேபோல் என்னை யாராலும் அழிக்க முடியாது.. போன்ற டயலாக்குகள்.. ரஜினி இப்படியும் நடிப்பாரா என்று பிரமிக்க வைத்த படம் அது.

வந்துட்டேன்னு சொல்லு..
அடுத்து இயக்குநர் ரஞ்சித் இயக்கத்தில் உருவான கபாளி படத்தில் ரஜினி பேசும் வந்துட்டேன்னு சொல்லு திரும்பி வந்துட்டேன்னு சொல்லு என்ற டயலாக்கும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

கியாரே செட்டிங்கா
இதேபோல் காலா படத்தில் கியாரே செட்டிங்கா.. வேங்க மவன் ஒத்தையில நிக்கேன்.. தில்லிருந்தா மொத்தமா வாங்கல.. என்ற டயலாக்கும் பட்டி தொட்டியெங்கும் பெரும் பிரபலமானது. சின்னக் குழந்தைகள் கூட அந்த டயலாக்குக்கு டப்ஸ் மேஷ் செய்த வீடியோக்கள் வைரலாயின என்றால் அதன் தாக்கத்தை முடிவு செய்து கொள்ளலாம்.

முக்கிய பங்கு
வில்லனாக நடித்த காலம் முதலே பஞ்ச் டயலாக்கால் தனக்கான அஸ்திவாரத்தை ஸ்ட்ராங்காக அமைத்து யாரும் அசைக்க முடியாத அளவுக்கு சப்பளம் போட்டு உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருக்கிறார் ரஜினி. ரஜினியை மாஸ் ஹீரோவாக காட்டியதில் அவரது பஞ்ச் வசனங்களுக்கும் முக்கிய பங்கு உள்ளது என்பதை மறுக்க முடியாது.


Click it and Unblock the Notifications











