யப்பா வேற லெவல் கூட்டணி... ரஜினி படத்தை இயக்குகிறார் ஜெய் பீம் இயக்குநர்.. வெளியானது அறிவிப்பு
சென்னை: ரஜினிகாந்த்தின் அடுத்த படம் குறித்த அறிவிப்பை லைகா நிறுவனம் வெளியிட்டிருக்கிறது.
ரஜினிகாந்த் கடைசியாக நடித்த தர்பார், அண்ணாத்த ஆகிய படங்கள் பெரும் விமர்சனத்தையும், தோல்வியையும் சந்தித்தன. ரஜினியின் கேரியரில் பல வருடங்களுக்கு பிறகு தொடர்ந்து இரண்டு படங்கள் தோல்வியை சந்தித்திருப்பது அவருக்கும், அவரது ரசிகர்களுக்கும் பெரும் சோகத்தை கொடுத்திருக்கின்றன.

உடனடி ஹிட்டுக்கு ரஜினி வெயிட்டிங்
எனவே ரஜினிக்கு உடனடியாக ஒரு ஹிட் படம் தேவைப்படுகிறது. இதனை மனதில் வைத்து கோலமாவு கோகிலா, டாக்டர் ஆகிய படங்களின் மூலம் கவனம் ஈர்த்த நெல்சன் திலீப்குமாருடன் இணைந்திருக்கிறார். பீஸ்ட் படம் சரியாக போகாவிட்டாலும் நெல்சன் திறமையான இயக்குநர் என்ற நம்பிக்கையை சன் பிக்சர்ஸோ, ரஜினிகாந்த்தோ இழக்கவில்லை என்பதுதான் நிதர்சனம்.

ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்த்
இதனையடுத்து ரஜினியை வைத்து சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படத்துக்கு நெல்சன் திலீப்குமாரே இயக்குநராக அறிவிக்கப்பட்டார். படத்துக்கு ஜெயிலர் என்று பெயரிடப்பட்டுள்ளது. அனிருத் இசையமைக்கிறார். ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்த் முத்துவேல் பாண்டியன் என்ற ஓய்வு பெற்ற ஜெயிலர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என கூறப்படுகிறது. மேலும் ஒரே இரவில் நடக்கும் சம்பவங்கள்தான் கதை எனவும் சொல்லப்படுகிறது.

ரஜினியின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு
இந்நிலையில் ஜெயிலர் படத்தை முடித்துவிட்டு ரஜினி யார் இயக்கத்தில் நடிக்கப்போகிறார் என்பது குறித்து தெரியாமல் இருந்தது. தற்போது அதற்கான விடையை லைகா நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. அதன்படி ரஜினியின் அடுத்த படத்தை ஜெய்பீம் படத்தை இயக்கிய ஞானவேல் இயக்குகிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது. படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார் எனவும் 2024ஆம் ஆண்டு திரைக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உண்மை கதையா?
த.செ. ஞானவேல் ஜெய் பீம் படத்தை உண்மை கதையை அடிப்படையாக வைத்து உருவாக்கியிருந்தார். தற்போது இந்தப் படமும் உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகவிருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இந்தப் படத்தில் ரஜினிகாந்த் இஸ்லாமிய காவல் துறை அதிகாரியாக நடிக்கிறார் எனவும் தகவல்கள் கூறுகின்றனர். ஜெய்பீம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநருடன் ரஜினிகாந்த் கைகோர்த்திருப்பதால் ரஜினி ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர்.

மும்முரமாக நடக்கும் ஜெயிலர் ஷூட்டிங்
முன்னதாக, ரஜினிகாந்த் நடித்துவரும் ஜெயிலர் படத்தின் ஷூட்டிங் தமிழ்நாடு, மங்களூரு உள்ளிட்ட இடங்களில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இந்தப் படத்தில் ரஜினியுடன் மோகன்லால், சிவராஜ்குமார், சுனில், தமன்னா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். படமானது தீபாவளிக்கு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படம் நெல்சன் திலீப்குமார் மற்றும் ரஜினி ஆகிய இருவருக்குமே முக்கியம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு பன்மடங்கு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.


Click it and Unblock the Notifications











