சிரஞ்சீவி படத்தால் மாறிய படையப்பா சீன்… ஆனாலும் மாஸ் குறையல.. என்ன காட்சி தெரியுமா?
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் திரைப்பயணத்தில் மிகவும் முக்கியமானத் திரைப்படம் தான் படையப்பா. இந்த படம் வெளியாகி 25 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், இந்த படத்தில் மிகவும் பிரபலமான காட்சி எடுக்கப்பட்டது குறித்து சுவாரசியத் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
என் பேரு படையப்பா... இளவட்ட படையப்பா.. என்ற பாடலை கேட்டதுமே மனசுக்குள் ஒரு உற்சாகம் தானாக வந்துவிடும். கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் 1999ம் ஆண்டு ரஜினிகாந்த் அட்டகாசமாக நடித்திருந்தார். இந்த படத்தில் சிவாஜி கணேசன், சௌந்தர்யா, ரம்யா கிருஷ்ணன், லட்சுமி, செந்தில், நாசர், கிருஷ்ண மூர்த்தி, பிரகாஷ் ராஜ், மணிவண்ணன், ராதா ரவி, அப்பாஸ், ப்ரீத்தா, வடிவுக்கரசி, சித்தாரா என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தனர். இந்த படத்தில் பல நடிகர்கள் நடித்திருந்தாலும், ரஜினி, வில்லி நீலாம்பரி கதாப்பாத்திரத்திற்காகவே இந்த படம் தியேட்டரில் பல நாட்கள் ஓடி வசூலை அள்ளியது.

படையப்பா: ரஜினி படங்களில் வழக்கமாக பாம்பு சென்டிமெண்ட் ஒன்று இருக்கும், பாம்பை பார்த்ததும் ப்பா.. பா.. பாம்பு... பூம்பு என்று சிரிப்பை வரவவைக்கும் ரஜினி, படையப்பா படத்தின் அறிமுகக் காட்சியில் பாம்பு புற்றுக்குள் கையைவிட்டு பாம்பைக் பிடித்து, அதற்கு முத்தமும் கொடுத்து நீலாம்பரியின் மனதில் இடம் பிடித்துவிடுவார். ஆனால், ரஜினிகாந்திற்கோ அமைதியும், அடக்கமும் கொண்ட வீட்டுப்பணி பெண் சௌந்தர்யா மீது காதல் வர கடைசியில் அது பகையாகவே மாறிவிடும் இதுதான் படைப்பா படத்தின் கதை. இது சாதாரண க்கதையாக இருந்தாலும், இதன் திரைக்கதை அழகாக வடிவமைக்கப்பட்டது தான் இப்படத்தின் வெற்றிக்கு காரணம்
மாஸ்டர் பீஸ்: கிராமத்து பின்னணியில் குடும்ப உறவுகளை மையப்படுத்தி காதல், ஆக்ஷன், சென்டிமென்ட், எமோஷன் கலந்து பக்காவான ஜனரஞ்சக படமாக படையப்பா படத்தை உருவாக்கியிருப்பார் கே. எஸ். ரவிக்குமார். படையப்பா படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்த சௌந்தர்யா, விமான விபத்தில் சிக்கி உயிரிழந்தார். இவர் படையப்பா படத்திற்கு முன் அருணாச்சலம் படத்திலும் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த கதாப்பாத்திரத்தில் முதலில் நடிகை சிம்ரனிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றதாகவும், ஆனால், அவர் வேறு சில படங்களில் பிசியாக இருந்ததால் அவரால் இந்த படத்தில் நடிக்க முடியாமல் போனதாக திரை வட்டாரங்களில் பேசிக்கொள்கின்றனர்.
சூப்பர் சீன்: படையப்பா திரைப்படம் வெளியாகி 25 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் இந்த திரைப்படத்தில் வரும் பிரபலமான காட்சி சில காரணங்களால் மாற்றப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. அது எந்த காட்சி தெரியுமா, பதினெட்டு வருடங்களுக்குப் பிறகு வீட்டை விட்டு வெளியே வரும் நீலாம்பரி, ரஜினியை அவமானப்படுத்தும் நோக்கத்தோடு, கால் மேல் காலைப் போட்டு பேச பதிலுக்கு ரஜினி தனது தோளில் கிடந்த துண்டை தூக்கிபோட்டு ஊஞ்சலை இழுத்து அதில் அமருவார். இதைப்பார்த்த நீலாம்பரி, வயசானாலும், உன் அழகும் ஸ்டைலும் உன்னை விட்டு போகல என்று சொல்லி இருப்பார். இந்த காட்சியில் ரம்யா கிருஷ்ணனின் நடிப்பு ரஜினிகாந்தின் ஸ்டைல், ஏஆர் ரஹ்மானின் ஸ்டைல் என சும்மா தரமா இருக்கும்.
நாற்காலிக்கு பதிலாக ஊஞ்சல்: உண்மையில் இந்த காட்சியில் ஊஞ்சலுக்கு பதிலாக சாய்வு நாற்காலியை துண்டால் இழுத்துப் போட்டு அமருவது போலத்தான் கதை அமைக்கப்பட்டு இருந்ததாம், ஆனால், அந்த நேரத்தில் சாய்வு நாற்காலி சிரஞ்சீவியின் தெலுங்கு படம் ஒன்றிற்கு வாங்கிச் சென்று விட்டார்களாம். பல இடத்தில் தேடியும் இவர்கள் எதிர்பார்த்தது போல சாய்வு நாற்காலி கிடைக்கவில்லை. இதனால், நாற்காலிக்கு பதிலாக ஊஞ்சல் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. கடைசியில் அந்த சீன் தான் படத்தின் ஹைலைட்டான காட்சியாக மாறிப்போனது என்று சினிமா வட்டாரத்தினர் கூறிவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











