அப்போ தினமும் குடி, சிகரெட்... இவங்க தான் என்னை திருத்தினாங்க: ரஜினியின் கலகலப்பான ப்ளாஷ்பேக்
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார்.
இதனைத் தொடர்ந்து தனது மகள் ஐஸ்வர்யா நடிக்கும் லால் சலாம் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளார்.
இந்நிலையில், ஒய்.ஜி மகேந்திரன் தயாரிக்கவுள்ள சாருகேசி திரைப்படம் குறித்த அறிவிப்பு விழா சென்னையில் நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், விழாவில் தனது மனைவி குறித்து கலகலப்பாக பேசினார்.

சாருகேசி பட விழாவில் ரஜினி
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கும் இந்தப் படம் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. ரஜினியுடன் மோகன்லால், சிவராஜ்குமார், தமன்னா, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து ஐஸ்வர்யா இயக்கும் லால் சலாம் படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கிறார். இதனிடையே ஒய்ஜி மகேந்திரன் தயாரிக்கும் சாருகேசி திரைப்படத்தின் அறிவிப்பு விழாவில் ரஜினிகாந்த் கலந்துகொண்டார்.

ஒய்ஜி மகேந்திரனுக்கு நன்றி
இந்த விழாவில் பேசிய ரஜினிகாந்த், 45 ஆண்டுகளுக்கு முன்னால் 'ரகசியம் பரம ரகசியம்' நாடகத்தைப் பார்க்க எனக்கு அனுமதி கிடைக்கவில்லை. ஆனால், இப்போது சாருகேசி நாடகத்தின் 50வது விழாவில் தலைமை விருந்தினராக வந்துள்ளது காலத்தின் செயல், அப்போது ஜெயலலிதா, சோ, விசு, நாகேஷ் போன்றவர்கள் எல்லாரும் YGP நாடகக் குழுவில் இருந்து வந்தவர்கள் தான். ஒய்ஜிக்கு சினிமாவை விட நாடகம் தான் முக்கியம். எனது மனைவியை அறிமுகப்படுத்தி வைத்து எனக்கு திருமணம் நடக்க காரணமானவர் ஒய்.ஜி மகேந்திரன். அதனால் அவருக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன் என்றார்.

தினமும் குடி, சிகரெட் தான்
தொடர்ந்து பேசிய ரஜினிகாந்த், "இது குடும்ப விழா என்பதால் இங்கே இன்னொரு விஷயத்தையும் சொல்கிறேன். எனக்கு 73 வயது ஆகிறது. ஆனாலும் நான் இவ்வளவு ஆரோக்கியமாக இருக்க காரணம் எனது மனைவி லதா தான். நடத்துனராக வேலை பார்த்த போது கெட்ட நண்பர்களின் சகவாசத்தால் நிறைய கெட்டபழக்கங்கள் இருந்தன. நடத்துனராக வேலைபார்த்த போதே தினமும் மட்டன் தான் சாப்பிடுவேன். குடி, சிகரெட் என கணக்கில்லாமல் எடுத்துக்கொள்வேன். நடத்துனராக வேலைபார்த்தபோதே அப்படியென்றால், பணம், புகழ் வரும்போது எப்படி என நீங்களே நினைத்துப் பாருங்கள்" எனக் கூறினார்.

அன்பால் திருத்திய மனைவி
மேலும், "காலையிலேயே பாயா, ஆப்பம், சிக்கன் 65 தான் சாப்பிடுவேன். அப்போதெல்லாம் சைவப் பிரியர்களை பார்த்தால் பாவமாக இருக்கும், எப்படி இதெல்லாம் சாப்பிடுகிறார்கள் என நினைத்ததுண்டு. மது, சிகரெட், அசைவம் மூன்றையும் அளவுக்கு மீறி தொடர்ந்து பல வருஷங்கள் எடுத்துக்கொண்டவர்கள் எனக்கு தெரிந்து 60 வயதுக்கு மேல் ஆரோக்கியமாக வாழ்ந்தது கிடையாது. இதற்கு நிறைய பேரை என்னால் உதாரணம் சொல்ல முடியும். அந்த மாதிரி இருந்த என்னை அன்பால் மாற்றியவர் எனது மனைவி லதா. என்னை ஒழுக்கமிக்கவனாக மாற்றி, என்னை வாழவைத்தது அவர் தான்" என நெகிழ்ச்சியாக குறிப்பிட்டார். ரஜினியின் இந்த பேச்சு ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











