அண்ணனுக்கு 80, மகனுக்கு 60... ரைம்மிங்காக வாழ்த்து சொன்ன ரஜினி... மகிழ்ச்சியில் குடும்பத்தினர்
பெங்களூரு: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் படத்தில் பிஸியாக நடித்து வருகிறார்.
நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு, கர்நாடக மாநிலம் மங்களூருவில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ரஜினி அவரது அண்ணன் சத்யநாராயணாவின் பிறந்தநாள் விழாவில் பங்கேற்றிருந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின.
இதனையடுத்து தனது அண்ணனின் பிறந்தநாள் கொண்டாட்டம் குறித்து நடிகர் ரஜினிகாந்த் ட்வீட் செய்துள்ளார்.

ஜெயிலர் சூட்டிங்கில் தலைவர்
அண்ணாத்த படத்துக்கு பின்னர் ரஜினி நடித்து வரும் ஜெயிலர் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் இந்தப் படத்தை நெல்சன் இயக்கி வருகிறார். ரஜினியுடன் மோகன்லால், சிவ ராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் நடித்து வருகின்றனர். இந்தப் படத்தின் ஷூட்டிங் கர்நாடக மாநிலம் மங்களூர் பகுதியில் வேகமாக நடைபெற்று வருகிறது. இதற்காக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த சில நாட்களாக பெங்களூரில் முகாமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மஹா சிவராத்திரி விழாவில் ரஜினி
கடந்த சில தினங்களாகவே ஜெயிலர் ஷூட்டிங்கில் பிஸியாக இருக்கும் ரஜினிகாந்த், மஹா சிவராத்திரி விழாவை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். அதன்படி, பெங்களூருவில் உள்ள வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ நடத்தி வரும் ஆசிரமத்தில் நடந்த சிவராத்திரி விழாவில் கலந்துகொண்டார். மேலும், அங்கு விடிய விடிய நடைபெற்ற பல்வேறு பூஜைகளிலும் மனைவி லதாவுடன் பங்கேற்றார் ரஜினிகாந்த்.

அண்ணனுக்கு பிறந்தநாள்
இதனையடுத்து தனது அண்ணன் சத்யநாராயணாவின் பிறந்தநாள் விழாவிலும் ரஜினிகாந்த் கலந்துகொண்டார். ரஜினியின் பெரிய பலமாக இருப்பது அவரது அண்ணன் சத்யநாராயணா தான். தனது பெற்றோருக்கு இணையாக அண்ணன் சத்யநாராயணா மீது ரஜினி மரியாதை வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், 80வது பிறந்தநாள் கொண்டாடிய அண்ணன் சத்யநாராயணாவுக்கு தங்க காசுகளால் அபிஷேகம் செய்தார் ரஜினி. அப்போது இருவரும் ஒன்றாக அமர்ந்திருக்கும் போட்டோக்களும், தங்க காசுகளால் அபிஷேகம் செய்த புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகின.

டிவிட்டரில் வாழ்த்து
ரஜினியின் அண்ணன் சத்யநாராயணா கர்நாடக மாநில அரசின் சுகாதாரத்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், சத்யநாராயணா மட்டும் இல்லாமல் அவரது மகன் ராமகிருஷ்ணாவும் நேற்று பிறந்தநாள் கொண்டாடியுள்ளார். ஒரேநாளில் பிறந்தநாள் கொண்டாடிய அண்ணன் சத்யநாராயணா கெய்க்வாட்டையும் அவரது மகன் ராமகிருஷ்ணாவையும் வாழ்த்தி ட்விட் செய்துள்ளார் ரஜினிகாந்த்.

குடும்பத்தினர் மகிழ்ச்சி
அதில், எனது சகோதரர் சத்யநாராயண ராவ் கெய்க்வாட்டின் 80வது பிறந்தநாளையும், அவரது மகன் ராமகிருஷ்ணாவின் 60வது பிறந்தநாளையும் ஒரேநாளில் எனது குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக கொண்டாடினோம். இன்று நான் இப்படியிருக்க காரணமான தங்க இதயத்தில், தங்கமழை பொழிவதை பாக்கியமாக உணர்ந்தேன் என நெகிழ்ச்சியாக குறிப்பிட்டுள்ளார். ரஜினியின் இந்த டிவிட்டர் பதிவு அவரது குடும்பத்தினர் மட்டுமின்றி ரசிகர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பதிவை பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினியின் ரசிகர்கள், அவரது அண்ணன் சத்யநாராயணாவுக்கும், அண்ணன் மகன் ராமகிருஷ்ணாவுக்கும் பிறந்தநாள் வாழ்த்துக் கூறி கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











