மெத்தனமாக இருக்கும் ஐஸ்வர்யா.. படப்பிடிப்பில் அப்செட்டான ரஜினி.. மகளுடன் மோதலா?
சென்னை : லால்சலாம் படப்பிடிப்பில் மெத்தனமாக இருக்கும் ஐஸ்வர்யாவால், ரஜினி அப்செட்டாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து உருவாகி வரும் லால்சலாம் படத்தில் விஷ்ணு விஷால்,விக்ராந்த் ஆகியோர் நடித்துள்ளனர்.
இப்படத்தில் ரஜினி சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளதால், ரஜினியை திரையில் காண ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.

லால் சலாம் : லைகா நிறுவனம் தயாரிக்கும் லால் சலாம் படத்தில், ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் மொய்தீன் பாய் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிறவைத்துள்ளது. இதில் ரஜினிகாந்த், சுமார் 20 நிமிட காட்சியில் வருவார் என்ற தகவல் வெளியாகி உள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
விறுவிறுப்பான கதை : இப்படம் மதநல்லிணக்கத்தை வலியுறுத்தும் கதையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 10ந் தேதி படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு இசை புயல் ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு ஏறக்குறைய முடிந்துவிட்டது.

மும்பையில் ஷூட்டிங் நடக்கவில்லை : சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் ரஜினிகாந்தின் கதாபாத்திரத்தின் படப்பிடிப்பு கடந்த வாரம் மும்பையில் தொடங்கியது. மும்பையில் 2 வாரங்கள் ஷூட்டிங் நடக்கும் என கூறப்பட்ட நிலையில், 5 நாட்களிலேயே மும்பையில் இருந்து கிளம்பி சென்னை வந்துள்ளார் ரஜினி. அவரை வைத்து 3 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு நடத்தப்பட்ட நிலையில், நான்காவது நாள் ஷூட்டிங்கில் ரஜினிகாந்துடன் சேர்ந்து நடிக்கும் நடிகர் வராததால் படப்பிடிப்பு நடைபெறவில்லை.
டென்ஷனான ரஜினி : ஐந்தாவது நாளும் அதே காரணத்திற்காக படப்பிடிப்பு நடைபெறாததால், டென்ஷனான ரஜினிகாந்த் மகளின் மெத்தனப்போக்கை நினைத்து கோவத்துடன் சென்னை வந்துவிட்டதாக கூறப்படுகிறது. மேலும், ரஜினிகாந்தின் எஞ்சியுள்ள காட்சிகளை சென்னையில் செட் போட்டு படமாக்க திட்டமிட்டுள்ளாராம் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். ரஜினியின் கால்ஷீட்டுக்காக பலர் காத்திருக்கும் நிலையில், தன்னுடைய அப்பா என்பதால், ஐஸ்வர்யா ரஜினி, மெத்தனமாக இருந்தாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications











