கருத்து சொல்றேன்னு சொல்லாதீங்க.. ஞானவேலுக்கு தைரியம்தான் - என்னங்க சூப்பர் ஸ்டாரையா சொல்றாரு?
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக வெளியான படம் வேட்டையன். இப்படம் பாக்ஸ் ஆஃபீஸில் இதுவரை கிட்டத்தட்ட 350 கோடிகளுக்கு மேல் வசூல் செய்ததாக கூறப்படுகின்றது. படத்தினை த.செ. ஞானவேல் இயக்கினார். லைகா நிறுவனம் தயாரித்தது. இப்படம் வணிக ரீதியாக வெற்றிப்படமாக மாறியுள்ளதால் லைகா நிறுவனம் பெரும் மகிழ்ச்சியில் உள்ளது. மேலும் சூப்பர் ஸ்டாரிடம் அடுத்த படத்திற்கான கால்ஷீட் கேட்டு இருப்பதாக தகவல்கள் வெளியானது. இந்நிலையில் வேட்டையன் படத்தின் இயக்குநர் த.செ.ஞானவேல் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசியது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கும் சேர்த்துத்தான் என பலர் பேசி வருகின்றனர். அது என்ன என்பது குறித்து இந்தத் தொகுப்பில் காணலாம்.
இயக்குநர் அளித்த பேட்டியில், சினிமாவில் மெசேஜ் சொல்கின்றார்கள் என்ற பதத்தின் மீதே எனக்கொரு விமர்சனம் உள்ளது. இங்கு பக்திப் படங்கள் வருகின்றது. அதில் அவர்கள் என்ன சொல்கின்றார்கள், 'நீ இப்படி இருந்தால், இப்படி சாமி கும்பிட்டால், இவ்வாறு நடந்து கொண்டால், குறிப்பிட்ட இடத்தை அடைய முடியும்' எனச் சொல்லுகின்றார்கள். சாமி படம் மட்டும் இல்லை, தமிழ் சினிமாவில் வெளியாகும் எல்லா படங்களிலும் ஏதோ ஒன்று சொல்லப்படுகின்றது. சினிமாக்களில் சொல்லப்படுவது மெசெஜ் என்றால் எல்லா சினிமாவையும் குறிப்பிடவேண்டும். ஏன் சில படங்களுக்கு மட்டும் மெசேஜ், என ஏன் பிராண்ட் கொடுக்கின்றீர்கள்?

நீங்கதான் காலகாலமாக கருத்து சொல்லிக்கொண்டு உள்ளீர்கள். எனது மனதில் நீங்கள் சொன்ன கருத்துக்கள்தான் உள்ளது. நீங்கள் சொன்ன கருத்தை எல்லாம் கேட்ட நான், அவற்றையெல்லாம் கொஞ்சம் தள்ளி வைத்துவிட்டு, எனக்கு வேறு ஒன்று சொல்லவேண்டும் என தோன்றுகின்றது, என ஒன்றைச் சொல்லுகின்றேன். உடனே என்னை மெசேஜ் சொல்கின்றேன் என கூறுகின்றீர்கள். இது வணிகத் தளத்திலும் எதிரொலிக்கின்றது. ஆனால் நான் மெசேஜ் சொல்ல வரவில்லை. நான் உங்களுடன் உரையாட வந்துள்ளேன். நீங்கள் நூற்றாண்டாக பேசுகின்றீர்கள், நான் கேட்டுக் கொண்டு உள்ளேன். நான் இப்போதுதான் பேசவே ஆரம்பிக்கின்றேன். நான் பேச ஆரம்பித்த 10வது நிமிடத்தில், 'நீ மெசேஜ் சொல்லுற' என ஏன் சொல்லுகின்றீர்கள்? பொது நீரோட்டம்தான் சரியானது" என பேசினார்.

சூப்பர் ஸ்டார்: இவரது இந்தப் பேச்சு பலரது விமர்சனத்திற்கும் பதிலடியாகப் பார்க்கப்படுகின்றது. மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் விமர்சனத்திற்கும் இந்த பேச்சு பதிலடியாக இருக்கின்றது என கூறப்படுகின்றது. அதாவது வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சூப்பர் ஸ்டார் பேசும்போது, ஞானவேல் குறித்து பேசும்போது நீங்க மெசேஜ் சொல்லுவீங்க, நமக்கு அது செட் ஆகாது. நம்மல நம்பி கோடி கோடியா பணம் போடறாங்க, அதை திரும்ப எடுக்கனும். படம் பார்க்க வந்த மக்கள் ஜாலியா படம் பார்க்கனும்" என கூறியதாகக் கூறினார்.

பதிலடி: இதனால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இயக்குநர் ஞானவேலிடம் நேரடியாகவே இவ்வாறு பேசியுள்ளதால், அவற்றையெல்லாம் மனதில் வைத்துக்கொண்டுதான் ஞானவேல் தான் அளித்த பேட்டியில், சூப்பர் ஸ்டாருக்கும் சேர்த்து பதிலடி கொடுக்க இவ்வாறு பேசியுள்ளார் என கூறப்படுகின்றது. வேட்டையன் படம் வணிக ரீதியாக வெற்றி பெற்ற பின்னர் வேட்டையன் படத்தின் இரண்டாம் பாகம் வருமா என பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, சூப்பர் ஸ்டார் ஓ.கே. சொன்னால் கட்டாயம் வரும் எனக் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வரவேற்பு: தமிழ் சினிமாவில் குடும்ப உறவுகளுக்கு இடையிலான பிரச்னைகள் குறித்தோ, நண்பர்கள், காதலர்களுக்கு இடையிலான பிரச்னைகள் குறித்தோ படம் எடுத்தால் அவற்றை சமூக அக்கறை கொண்ட படங்கள் என குறிப்பிடுவதில்லை. அதேபோல், காவல் அதிகாரிகள் குறித்து படங்கள் வந்தாலும் கூட பெரும்பாலான மக்கள் அவற்றை சமூக அக்கறை கொண்ட நல்ல கருத்துள்ள படம் எனக் கூறிப்பிடுவதில்லை. ஆனால் சமூகத்தில் உள்ள பிரச்னைகள் குறித்தும் அதிலும் இதுவரை தமிழ் சினிமா பேசாத விஷயங்களைப் பேசினால் அந்தப் படங்களையும், அதன் இயக்குநர்களையும் " மெசேஜ் சொல்லுவாங்க" என்ற கட்டத்துக்குள் அடைக்கப் பார்ப்பது குறித்து இயக்குநர் ஞானவேல் பேசியதற்கு பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.



Click it and Unblock the Notifications











