ரஜினியின் கபாலி பட தயாரிப்பாளர் தற்கொலை.. வாடகை வீட்டில் என்ன நடந்தது?.. போலீஸ் விசாரணை
சென்னை: பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2016ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் கபாலி. இந்தப் படம் சூப்பர் ஹிட்டடடித்தது. தமிழில் கலைப்புலி எஸ்.தாணு தயாரித்திருந்தார். அதேபோல் தெலுங்கி கே.பி.சௌத்ரி படத்தை தயாரித்து விநியோகமும் செய்திருந்தார். இந்நிலையில் அவர் கோவாவில் இருக்கும் தனது வாடகை வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்தச் சம்பவம் தெலுங்கு திரையுலகில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
ரஜினிகாந்த்தை வைத்து பா.இரஞ்சித் முதன்முதலாக இயக்கிய திரைப்படம் கபாலி. தமிழில் கலைப்புலி எஸ்.தாணு தயாரித்திருந்த இந்தப் படம் கடந்த 2016ஆம் ஆண்டு வெளியானது. படத்துக்கு நல்ல விமர்சனங்களே கிடைத்தன. மேலும் படத்துக்கு தாணு ஏகப்பட்ட செலவில் ப்ரோமோஷனையும் செய்திருந்தது அந்த சமயத்தில் மிகப்பெரிய கவனத்தை ஈர்த்தது. படத்துக்கு பெரும்பாலானோர் பாராட்டு தெரிவித்தாலும் ஒருசிலர் படம் தங்களை திருப்திப்படுத்தவில்லை என்றே கூறினார்கள்.

தெலுங்கில் கபாலி: சூழல் இப்படி இருக்க தெலுங்கில் இந்தப் படத்தை கே.பி.சௌத்ரி தயாரித்திருந்தார். தயாரித்ததோடு மட்டுமின்றி ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் விநியோகமும் செய்திருந்தார். தமிழில் எப்படி இப்படம் லாபத்தை சம்பாதித்ததோ அதேபோல் தெலுங்கிலும் நல்ல லாபத்தையே சம்பாதித்தது. கபாலி படத்துக்கு முன்பிருந்தே சௌத்ரி வெற்றிகரமான தயாரிப்பாளர் என்று பெயரை டோலிவுட்டில் எடுத்திருந்தாலும்; கபாலி அவருக்கு நல்ல அடையாளத்தை கொடுத்தது.
கோவாவில் சௌத்ரி: கபாலி படம் மட்டுமின்றி ஏகப்பட்ட படங்களை அவர் விநியோகம் செய்து வெற்றியடைந்திருக்கிறார். இவர் கம்மம் மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்டவர். அவர் கடந்த சில காலமாக கோவாவில் இருக்கும் பனாஜியில் ஒரு வாடகை வீட்டில் தங்கியிருந்தார். சூழல் இப்படி இருக்க நேற்று அவர் இருந்த அறை நீண்ட நேரமாக திறக்கப்படவே இல்லை. இதனால் வீட்டில் இருந்தவர்கள் சந்தேகம் அடைந்து தொடர்ந்து கதவை தட்டியிருக்கிறார்கள் இருப்பினும் திறக்கவில்லை.
தற்கொலை செய்துகொண்ட சௌத்ரி: இதனால் சந்தேகம் மேலும் வலுவடைந்து கதவை உடைத்து அறைக்குள் சென்று பார்க்கையில் சௌத்ரி தூக்கிட்டு தற்கொலை செய்த நிலையில் இருந்தார். இதனையடுத்து சம்பவ இடத்துக்கு காவல் துறையினர் விரைந்து வந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்திவருகிறார்கள். எதற்காக அவர் தற்கொலை செய்திருக்க வேண்டும் என்று தீவிர விசாரணையில் இறங்கியிருக்கிறார்கள். இந்தச் சம்பவம் டோலிவுட்டில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது.
ஏற்கனவே கைது: கே.பி.சௌத்ரி ஏற்கனவே ஒரு பிரச்னையில் சிக்கியவர் என்பது கவனிக்கத்தக்கது. அதாவது 2023ஆம் ஆண்டு போதை பொருள் வழக்கில் அவரை சைபராபாத் காவல் துறையினர் கைது செய்தார்கள். பிறகு ஒருவழியாக சிறையிலிருந்து வெளியே வந்த அவர்; அப்போதிருந்தே கடுமையான மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. ஒருவேளை அந்த மன அழுத்தத்தின் காரணமாகத்தான் கே.பி.சௌத்ரி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாரோ என்ற கேள்வியும் ரசிகர்களிடையே எழுந்திருக்கிறது.


Click it and Unblock the Notifications











