பாட்ஷா 2 எடுக்க எனக்கு ஆசை.. ஆனால் ரஜினிக்கு சந்தேகம்! - சுரேஷ் கிருணா
சென்னை: பாட்ஷா படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க தான் முயற்சிப்பதாகவும், ஆனால் அந்தப் படத்தை எடுப்பதில் ரஜினிக்கு தயக்கம் இருப்பதாகவும் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.
1995-ல் வெளியாகி 400 நாட்களுக்கும் மேல் ஓடி வசூலில் சரித்திரம் படைத்த படம் சூப்பர் ஸ்டார் ரஜினியின் பாட்ஷா. இதில் ரஜினி ஜோடியாக நக்மா நடித்தார். சுரேஷ் கிருஷ்ணா இயக்கினார். திரைக்கதையை ஆர்எம் வீரப்பன் உருவாக்கினார்.

தேவா இசையில் பாடல்கள் பட்டையைக் கிளப்பின.
இந்த படத்தின் இரண்டாம் பாகத்தில் ரஜினி நடிப்பது குறித்து அவ்வப்போது பேசப்படுவது வழக்கம்.
உண்மையிலேயே இப்படியொரு முயற்சி நடக்கிறதா.. அதற்கு பதிலளிக்கும் விதத்தில் சுரேஷ் கிருஷ்ணா சமீபத்தில் அளித்த பேட்டியில், "ரஜினிக்கும் எனக்கும் பாட்ஷா முக்கியமான படம். எனவே இதன் 2-ம் பாகத்தை எடுக்க விரும்பினேன். இது குறித்து ரஜினியிடம் பல தடவை பேசினேன்.
பாட்ஷா படம் போல் இந்த இரண்டாம் பாகம் ஹிட்டாகுமா என்ற சந்தேகம் அவருக்குள் இருக்கிறது. அதற்காக முயற்சியை நான் கைவிட்டு விடவில்லை. பாட்ஷா 2-ம் பாகத்தை எடுப்பது குறித்து ரஜினியிடம் தொடர்ந்து பேசி வருகிறேன்," என்றார்.
சுரேஷ் கிருஷ்ணாவைப் பொறுத்தவரை பாபாவுக்குப் பிறகு முழுக்க இறங்குமுகம்தான். அவர் இயக்கிய எந்தப் படமும் ஓடவில்லை. ஆறுமுகம், இளைஞன் போன்ற படங்கள்தான் அவர் சமீபத்தில் இயக்கியவை. இதிலிருந்தே அவரது இப்போதைய ஃபார்ம் என்னவென்பது ரசிகர்களுக்குப் புரியும்.. ரஜினிக்குப் புரியாதா!


Click it and Unblock the Notifications











