வடிவேலுவை இன்ட்ரோ செய்தது டி.ராஜேந்தர் இல்லை ராஜ்கிரண்தான்.. வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரபலம்
சென்னை: ரசிகர்களால் வைகைப்புயல் என்று அழைக்கப்படுபவர் வடிவேலு. சில பிரச்னைகளால் சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்த அவர் தற்போது மீண்டும் நடிக்க தொடங்கியிருக்கிறார். அந்தவகையில் மாமன்னன் படம் மெகா ஹிட்டடித்தது. அடுத்தாக ஃபகத் பாசிலுடன் இணைந்து மாரீசன் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். சூழல் இப்படி இருக்க வடிவேலுவை அறிமுகப்படுத்தியது யார் என்ற கேள்விக்கு பத்திரிகையாளர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகங்களை கொண்ட சித்ரா லட்சுமணன் பதிலளித்திருக்கிறார்.
கோலிவுட் வரலாற்றில் தவிர்க்கவே முடியாத காமெடி நடிகர்களில் ஒருவர் வடிவேலு..90களில் அறிமுகமான அவர் 90ஸ் கிட்ஸுக்கும் செட் ஆவார் தற்போதைய தலைமுறையான 2K கிட்ஸுக்கும் செட் ஆவார். சோஷியல் மீடியா சூழ்ந்த இந்த உலகில் பல மீம்ஸ்களுக்கு உயிர் கொடுத்துக்கொண்டிருப்பது வடிவேலுதான். சில பிரச்னைகள் காரணமாக 10 வருடங்கள் சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்தாலும் அனைத்து வீடுகளின் தொலைக்காட்சிகள் வழியாக வைகைப்புயல் வீசிக்கொண்டுதான் இருந்தது.
அரசியல் மேடை: 2011ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக மேடை ஏறிய வடிவேலு விஜயகாந்த்தை கடுமையாக தாக்கி பேசினார். ஆனால் அதிமுக - தேமுதிக கூட்டணி அந்தத் தேர்தலில் வெற்றி பெற்றது. எனவே இனியும் வடிவேலுவை வைத்து படம் எடுத்தால் ஜெயலலிதாவின் கோபத்துக்கு ஆளாகிவிடுவோமோ என திரைத்துறையினர் அஞ்சி வடிவேலுவை கண்டுகொள்ளாமல் இருந்தனர். அதுமட்டுமன்றி வடிவேலுவின் சில தனிப்பட்ட நடவடிக்கைகளுமே அவர் திரைத்துறையிலிருந்து காணாமல் போனதற்கு காரணம் என்றும் கூறப்படுவதுண்டு.
ரீ என்ட்ரி: இப்படிப்பட்ட சூழலில் வடிவேலுவை சுற்றி இருந்த பஞ்சாயத்து தீர்ந்து போனதை அடுத்து நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் மூலம் மீண்டும் நடிக்க வந்தார். ஆனால் அந்தப் படம் சரியாக போகவில்லை. குறிப்பாக வடிவேலுவின் காமெடி ஒர்க் அவுட் ஆகவில்லை என்றும் ரசிகர்கள் ஓபனாக பேசினார்கள். அதேசமயம் அடுத்ததாக அவர் நடித்த மாமன்னன் திரைப்படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. பல வருடங்கள் கழித்து வடிவேலுவுக்குள் இருந்த குணசித்திர நடிகரை மாரி செல்வராஜ் வெளியே கொண்டு வந்திருந்தார்.
அடுத்தடுத்த படங்கள்: மாமன்னன் பெற்ற மாபெரும் வெற்றியை அடுத்து இரண்டாவது இன்னிங்ஸில் பிஸியாக ஆரம்பித்திருக்கிறார் வடிவேலு. அந்தவகையில் அடுத்ததாக ஃபகத் பாசிலுடன் இணைந்து மாரீசன் படத்தில் நடித்திருக்கிறார். நிச்சயம் இந்தப் படத்திலும் வடிவேலுவின் நடிப்பு அட்டகாசமாக இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருக்கின்றனர். இவை தவிர்த்து வேறு சில படங்களிலும் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு அடுத்தடுத்து வெளியாகலாம்.

சித்ரா லட்சுமணன் பேட்டி: இதற்கிடையே வடிவேலுவை அறிமுகப்படுத்தியது ராஜ்கிரண் இல்லை டி.ராஜேந்தர்தான் என்று ஒரு தகவல் கடந்த சில நாட்களாக ஓடிக்கொண்டிருந்தது. இதனால் ரசிகர்கள் ஆச்சரியமடைந்தனர். இந்த சூழலில் பத்திரிகையாளரும், நடிகருமான சித்ரா லட்சுமணன் இதுகுறித்து பேசியிருக்கிறார். ரசிகர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த அவர், 'வடிவேலுவை அறிமுகப்படுத்தியது டி.ராஜேந்தர் என்று சொல்ல முடியாது. ஒரு படத்தில் வடிவேலு தோன்றுவதற்கான காரணம் என்று அவரை சொல்லலாம். ஆனால் வைகைப் புயல் வடிவேலுவை முழு நேர நடிகராக அறிமுகப்படுத்திய பெருமை ராஜ்கிரணையே சேரும்'' என்று குறிப்பிட்டிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











