எனக்கு கல்விப் பிச்சை அளித்த அனைத்து ஆசிரியர்களுக்கும் நன்றி- ராஜ்கிரண்
Recommended Video
சென்னை: நடிகர் ராஜ்கிரண் தனக்கு அறிவு பிச்சை வழங்கிய அனைத்து ஆசிரியப் பெருந்தகைகளுக்கும் இந்த ஆசிரியர் தினத்தில் மனமார்ந்த நன்றிகளை காணிக்கையாக்குகிறேன். அவர்கள் மன நிம்மதியுடனும், சாந்தமாகவும் சமாதானமாகவும் இருக்க கடவுளை பிரார்த்திக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
நமது இந்திய தேசத்தின் 2வது குடியரசு தலைவராக இருந்து மறைந்த டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் ஒரு ஆசிரியராக இருந்து நாட்டின் தலைவரானவர். அவரின் பிறந்த நாளான செப்டம்பர் 5ஆம் தேதி ஆசிரியர் தினமாக இந்தியா முழுவதிலும் கொண்டாடப்படுகிறது.

ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் நிச்சயம் ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்ட ஆசான்களின் வழிநடத்தல் கண்டிப்பாக இருக்கும். அவர்கள் நம்மை செதுக்கிய சிற்பிகளே. ஆசிரியர்களின் பங்கு இன்றியமையாதது. ஆசிரியர் தினமான செப்டம்பர் 5ஆம் தேதி நிச்சயம் நாம் அனைவரும் நமது ஆசிரியர்களை நினைவு கூர்வோம்.
அந்த வகையில் அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் என பல பிரபலங்கள் தங்களது வாழ்வில் மறக்கமுடியாத முக்கிய பங்கு வகித்த ஆசிரியர்களுக்கு நன்றி செலுத்தும் வகையில் தங்களது வாழ்த்து மற்றும் அவர்களை பற்றின நினைவுகள், நன்றிகளை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வருகிறார்கள்.
சச்சின் டெண்டுல்கர், ராகுல் காந்தி, நடிகர் விவேக், பிரியங்கா காந்தி, சுரேஷ் ரெய்னா போன்ற பலரும் தங்களது ஆசிரியர்களை குறித்து பல சுவாரஸ்யமான சுவையான பிளாஷ்பேக் அனுபவங்களை பதிவு செய்துள்ளனர்.
தயாரிப்பாளர், நடிகர், இயக்குனர் என பலமுகங்கள் கொண்ட நமது நடிகர் ராஜ்கிரண் அவருடைய ஆசிரியர் தின பதிவு மிகவும் அற்புதமாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது. அவரது பதிவில் தனக்கு கல்வி பிச்சை அளித்த அனைத்து ஆசிரிகளையும் ஆசிரியர் தினமான இன்று நினைவு கூர்ந்து மகிழ்ச்சியடைகிறேன் என்றார்.
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் உள்ள சதக்கத்துன் ஜாரியா ஆரம்பப் பள்ளியில் பயின்றவர். 1955 - 1966 வரை சுமார் 40 வருடங்களுக்கு முன்னர், அவருக்கு பாடம் கற்பித்த முதல் வகுப்பு ஆசிரியர் மோசஸ் ஐயா தொடங்கி, பதினொன்றாம் வகுப்பு ஆசிரியர் ஜெகநாதன் ஐயா வரை அனைவருடைய பெயரையும் குறிப்பிட்டு வணக்கம் தெரிவித்தது மிகவும் பிரமிப்பாக இருந்தது.
மேலும் ஹமீதியா மேல்நிலை பள்ளியின் தலைமை ஆசிரியனான ஜார்ஜ் ஐயா அவர்களுக்கும், ஆரம்ப பள்ளியின் தலைமை ஆசிரியரான செல்வம் ஐயா அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை பணிவுடன் காணிக்கையாக்குகிறேன். அவர்கள் என்றும் மன நிம்மதியுடனும், சாந்தமாகவும் சமாதானமாகவும் இருக்க வேண்டி கடவுளை பிராத்திக்கிறேன் என்று பதிவிட்டிருந்தார்.
நம்மில் பலர் 10 - 15 ஆண்டுகளுக்கு முன்னர் பள்ளி படிப்பை முடித்தவர்களுக்கே அனைத்து ஆசிரியர்களின் பெயரும் ஞாபகத்தில் இருக்குமா என்பது சந்தேகம் தான். அப்படி இருக்கையில் 40 ஆண்டு காலத்திற்கு முன்னர் பள்ளி படிப்பை முடித்த ராஜ்கிரண் ஆசிரியர்கள் மீது எந்த அளவிற்கு மரியாதை வைத்திருந்தால் இவ்வளவு ஞாபகமாக அனைவரது பெயரையும் குறிப்பிட்டிருப்பார் என்பதை நினைத்தாலே மெய்சிலிர்க்கிறது.
மாதா பிதா குரு தெய்வம் என்ற சொல்லுக்கு இணங்க குருவை தெய்வமாக மதிக்கும் அனைத்து நெஞ்சங்களின் சார்பாக உலகில் உள்ள அனைத்து ஆசிரிய பெருந்தகைகளுக்கும் ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள்.


Click it and Unblock the Notifications











