Vijay: விஜய்க்காக பேசிய இயக்குநர் ராஜு முருகன்.. கட்சி சார்ந்தவர்கள் வேண்டாமே..
சென்னை: நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய், தான் அரசியலில் களமிறங்கிய போதே சினிமாவில் நடிக்க மாட்டேன் என்ற முடிவுடன் தான் களமிறங்கினார். அதுவும் தான் கடைசியாக கமிட்டான தனது 69ஆவது படமான ஜன நாயகன் படத்தில் மட்டும் நடித்து முடித்துவிட்டு முழு நேர அரசியலில் களமிறங்குவதாக தெரிவித்தார். அதன் அடிப்படையில் ஜன நாயகன் படத்தில் நடித்து முடித்துவிட்டு தற்போது அரசியலில் கவனம் செலுத்தி வருகிறார்.
இப்படியான நிலையில் இவரது ஜன நாயகன் படத்திற்கு சென்சார் கிடைக்காததால் படத்தை படக்குழு திட்டமிட்ட தேதியான ஜனவரி 9ஆம் தேதி ரிலீஸ் செய்யப்படவில்லை. மேலும் படத்தை மார்ச் 17ஆம் தேதி தான் ரிவைசிங் கமிட்டி படத்தை பார்த்துள்ளது. இன்னும் சென்சார் சான்றிதழ் கிடைக்கவில்லை.

மேலும் இந்த இழுபறிக்கு காரணம் அரசியல் தலையீடு என்றும் கூறப்படுகிறது. மேலும் ஜன நாயகன் பட சென்சார் பிரச்னையை மைய்யமாக வைத்து விஜயை தங்களது கூட்டணிக்கு இழுக்கப் பார்க்கிறது பாஜக என்ற குற்றச்சாட்டு முன் வைக்கப்படுகிறது. அதேபோல் சென்சார் கிடைக்காததற்கு காரணமே திமுகதான் என்று விஜய் ரசிகர்கள் குற்றம் சுமத்தி வந்தனர். ஆனால் விஜய் தனது சமீபத்திய கட்சி மீட்டிங்கில், சென்சார் பிரச்னையின் போது ஜன நாயகனுக்கு ஆதரவாக குரல் கொடுத்த முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தார்.
ராஜு முருகன்: இப்படி இருக்கும்போது தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவரான ராஜு முருகன் சமீபத்தில் விருது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது அவரிடன் சென்சார் குறித்தும் அதன் செயல்பாடு குறித்தும், ஜன நாயகன் படத்திற்கு சென்சார் இழுபறி குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் கூறிய பதில் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

சென்சார் எப்படி இயங்கனும்: அதாவது, " ஒரு குடியரசு நாட்டில் சென்சார் போன்ற அமைப்பானது ஜனநாயகமான முறையில் இயங்க வேண்டும். யார் ஆட்சிக்கு வந்தாலும் அவர்களுக்கு சாதகமான நபர்கள், கட்சிக்காரர்கள் சென்சாரில் ஒரு அங்கமாக இருக்க கூடாது. இப்படியான கலாச்சாரம் முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும். சென்சார் போர்டு அமைப்பு என்பது, சிந்தனைத் தளத்தில் இருப்பவர்களால், நீதித் துறையில் இருப்பவர்களால், எழுத்தாளர்களால், பேராசிரியர்களால் ஒரு சென்சார் போர்டு உருவாக்கப்பட வேண்டும். அப்படி உருவாக்கப்படும் சென்சார் போர்டில் பல தரப்பட்ட அரசியல் சிந்தனை இருந்தால் பிரச்னை இல்லை. மாறாக கட்சியைச் சேர்ந்தவர்கள் இருப்பது அரோக்கியமானதல்ல" என்று பேசி உள்ளார். இவரது இந்த கருத்து தற்போது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.


Click it and Unblock the Notifications











