Ram Charan - ராம் சரண் மகளுக்கு பெயர் சூட்டு விழா.. உபாசனா பகிர்ந்த வீடியோ
ஹைதராபாத்: Ram Charan (ராம் சரண்) ராம் சரண் - உபாசனா மகளுக்கு இன்று மாலை பெயர் சூட்டு விழா நடைபெறவிருக்கிறது.
தெலுங்கு திரையுலகில் மெகா ஸ்டார் என ரசிகர்களால் அழைக்கப்படுபவர் சிரஞ்சீவி. இவரது மகன் ராம் சரணும் தெலுங்கு திரையுலகில் முன்னணி ஹீரோவாக வலம் வந்துகொண்டிருக்கிறார். சிறந்த நடிப்பை வெளிப்படுத்தும் அவர் இந்திய அளவில் மிகச்சிறப்பாக நடனம் ஆடக்கூடியவர்களில் ஒருவராகவும் இருக்கிறார். இவர் நடிப்பில் கடைசியாக ஆர்.ஆர்.ஆர் படம் வெளியானது. படம் மெகா ஹிட்டானது. மேலும் இவர் நடனம் ஆடிய நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கரையும் வென்றது.

குடும்பம்: ராம் சரண் உபாசனா என்பவரை கடந்த 2012ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். ராம் சரணும், உபாசனாவும் அன்யோன்யமாக இத்தனை வருடங்கள் ஒன்றாக இருந்துவருகின்றனர். இருப்பினும் அவர்களுக்கு குழந்தை இல்லாதது மட்டும் ஒரு குறையாக இருந்தது. இந்தச் சூழலில் சில வாரங்களுக்கு முன்னதாக அவர்களுக்கு பெண் குழந்தை பிறந்தாள். 11 ஆண்டுகள் கழித்து வாரிசு வந்திருப்பதால் சிரஞ்சீவி குடும்பமே மகிழ்ச்சி கடலில் இருக்கிறது.
குவிந்த வாழ்த்து: சிரஞ்சீவி குடும்பத்துக்கு ராம் சரண் மூலமாக ஒரு வாரிசு வந்ததை அடுத்து அல்லு அர்ஜுன், பவன் கல்யாண், ஜூனியர் என்.டி.ஆர், நிஹாரிகா உள்ளிட்ட பலரும் தங்களது வாழ்த்தை ராம் சரண் - உபாசனா தம்பதிக்கு தெரிவித்தனர். ரசிகர்களும் தங்களது வாழ்த்தினை சமூக வலைதளங்கள் வாயிலாக தெரிவித்தனர். அதுமட்டுமின்றி அந்தப் பெண் குழந்தை சிறப்பாக வாழ்வதற்கு இறைவனையும் அவர்கள் பிரார்த்திப்பதாக தெரிவித்திருந்தனர்.
பெயர் சூட்டு விழா: இதனையடுத்து சில நாட்களுக்கு முன்பு உபாசனா மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அப்போது தனது குழந்தையை ராம்சரண் கையில் ஏந்தியிருந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி ட்ரெண்டானது. மேலும் விரைவில் பெயர் சூட்டு விழா பிரமாண்டமாக நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

உபாசனா வெளியிட்ட வீடியோ: அதன்படி இன்று ராம் சரண் - உபாசனா மகளுக்கு பிரமாண்டமாக பெயர் சூட்டு விழா நடக்கவிருக்கிறது. ஹைதராபாத்தில் இன்று மாலை நடக்கவிருக்கும் நிகழ்ச்சியில் பலர் கலந்துகொள்ளவிருக்கிறார்கள். விழாவுக்கு செய்யப்படும் ஏற்பாடுகள் தொடர்பான வீடியோவை உபாசனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். அந்த வீடியோ ட்ரெண்டாகியுள்ளது.
குஷியில் சிரஞ்சீவி: இதற்கிடையே குழந்தை பிறந்தது குறித்து ராம் சரணின் தந்தை சிரஞ்சீவி பேசியபோது, " பல ஆண்டுகளுக்குப் பிறகு எங்களது வேண்டுகோளை இறைவன் நிறைவேற்றி வைத்திருக்கிறார். ராம் சரண் தந்தையானதும் எங்கள் நண்பர்களிடமிருந்தும், உலகெங்கிலும் உள்ள அவருடைய ரசிகர்கள், நலம் விரும்பிகள் என அனைவரும் அன்பையும், வாழ்த்தையும் பொழிந்துவருகிறார்கள்" என கூறியிருந்தார்.


Click it and Unblock the Notifications











